• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

குறுநகை போதுமடி 2

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
30
92
53
Chennai
குறுநகை போதுமடி 2


ன் வீட்டின் மொட்டை மாடியில் நடப்பதும் நடுநடுவே கைகளைக் கட்டியபடி நிற்பதுமாக இருந்த கபிலனின் பார்வை முழுவதும் அவனது மருத்துவமனையில்தான்.

‘நலம்’ மருத்துவமனை நகர சந்தடியில் இருந்து முற்றிலும் விலகிக் குளுமையான, அமைதியான மலைக் கிராமத்தில் மருத்துவப் பயனாளிகளின் உடலுக்கும், மனதிற்கும் ஏற்ற நல்ல இதமான இயற்கைச் சூழலில் அமைந்திருந்தது.

வாழ்க்கை முறை மாற்றம், உடல் நச்சு வெளியேற்றம், பஞ்சகர்மா, எலும்பு, நரம்பு சிகிச்சைகள், வயிற்று உபாதைகள் போன்றவற்றிற்காக சிகிச்சை பெறுபவர்கள், பெரும்பாலும் மூன்று நாள்கள் முதல் ஒரு மண்டலம் வரை தங்கிச் செல்வர்.

இவர்களுக்கான மருந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் இன்னபிற பரிசோதனைகள் என மருத்துவம் தொடர்பான சேவைகள் ஒருபுறமெனில், அவரவர்களுக்கு ஏற்ற பத்திய உணவு தயாரிப்பது தனி.

இயற்கை வைத்தியம் என்பதால், கபம், வாதம், பித்தம் போன்ற அவரவரது உடல் அமைப்பு மற்றும் அவரவரது உபாதைகளுக்கான
உணவுக் கட்டுப்பாடு, அதற்கேற்ற பத்திய உணவு, மருத்துவர்களுக்கு உதவி, பயனாளிகளுக்கு உதவி, சலவை எனத் தொடர்புடைய அடிப்படை வேலைகளே அதிகம் இருந்தன.

இது தவிர, மருத்துவமனை, பரிசோதனைக்கூடம், குடில்கள், தோட்டம், தண்ணீர் மற்றும் மின்சாரப் பராமரிப்பு என இருபத்துநாலு மணி நேரமும் வேலை செய்யப் பணியாளர்கள் தேவைப்பட்டனர்.

கபிலனைத் தவிர, மருத்துவர்கள், செவிலியர், உதவியாளர்கள், பேத்தாலஜி, சமையல், பராமரிப்புப் பணியாளர்கள், இரண்டு ஷிஃப்ட்டுகள் வேலை செய்யும் இரண்டு ப்ளம்பர்கள், இரண்டு எலெக்ட்ரீஷியன்கள் என ஏறக்குறைய முப்பது பேர் வரை பணியில் இருந்தனர்.

பராமரிப்புப் பணியாளர்கள் அனைவருமே அங்கும் அக்கம்பக்கத்து கிராமத்தையும் சேர்ந்தவர்கள்தான். சமையலுக்கும் அப்படியே.

உள்ளூரைச் சேர்ந்தவர்கள் வீடு திரும்பிவிட, தொலைவிலிருந்து வரும் பணியாளர்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே இரண்டு பழைய வீட்டை வாடகைக்கு எடுத்து, மராமத்து வேலை செய்து, தங்கவும் புழங்கவும் வசதி செய்து தந்திருக்கறான்.

ஒரு வருடத்திற்கு முன், மருத்துவர்கள், செவிலியர்கள், பேத்தாலஜிஸ்ட்டுகளுக்கென எட்டு அறைகள் கொண்ட விடுதி ஒன்றைக் கட்டிய பிறகே, இப்போது தடைபடாமல் வேலையில் தொடர்கின்றனர்.

இப்போது இந்த மருத்துவமனை வேலையை நம்பியே சுத்துப்பட்டு கிராமத்தில் குடும்பத்தோடு குடியேறியவர்களும் கூட உண்டு.

அப்போது கபிலன் மட்டும்தான் மருத்துவர். வரவு அதிகமின்றிச் செலவு கை மீறியதில் பேசாமல் மருத்துவமனையை இழுத்து மூடிவிட்டுத் தோட்ட வேலையுடன் நின்றுவிடலாமா என்று கூட நினைத்திருக்கிறான்.

தந்தை சாரநாதனைத் தவிர, ஏனையோர் ‘தரிசுல தண்ணி பாய்ச்சினாப்பல இதென்ன வெட்டிச் செலவு’ என்று முணுமுணுக்கத் தொடங்க, அம்மா மாளவிகா மதுரைக்குச் செல்லும்போதும் அலைபேசியிலும் ‘முதல்ல அதை ஏறக்கட்டிட்டு, மதுரைக்கு வா’ வென நச்சரித்தாள்.

தந்தையின் கைப்பணமும் வங்கிக் கடனும் சேர்ந்து கிட்டத்தட்ட ஒருகோடி ரூபாய்கள் பெறுமானமுள்ள மருத்தவமனையை அம்மா சொல்வதற்காக அப்படியே எப்படி ‘இழுத்து மூட முடியும்?’

இதில் மாதம் பிறந்தால் வட்டி வேறு குட்டிபோட்டது. அந்தச் சமயத்தில் வேலையாட்களை மறுத்து முழு மருத்துவ மனையையும் கபிலனே பெருக்கித் துடைத்திருக்கிறான்.

‘நலம்’ ஹெல்த்கேரை தொடங்கிப் பத்து மாதங்கள் சென்றிருக்கும். சளி, காய்ச்சல், இருமல் என அவ்வப்போது வருபவர்கள்தான்.

அந்த வருடம் தீபாவளியன்று இரவு. ஐப்பசி மாத மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது, அவர்களது ஊர் பஞ்சாயத்துத் தலைவரின் மனைவிக்குப் பலகாரமோ, எண்ணைய் புகையோ, வேலை அதிகமோ ஏதோ ஒன்று நெஞ்சைக் கரிக்க, இஞ்சிச் சாறு, டீ, கஷாயம் என எதையெதையோ குடித்ததில் வாந்தி எடுத்து, பலமாக மூச்சுத் திணறத் தொடங்கவே, அவரை ஆத்திர, அவசரத்திற்கு கபிலனிடம் அழைத்து வந்தனர்.

அவருக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக் என்று புரிந்தவன், விரைந்து முதலுதவி செய்து, ஆசுவாசப் படுத்தி, திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான்.

அது ஒருங்கிணைந்த ஆயுர்வேத மருத்துவமனை என்பதால் ஆயுர்வேத மருத்துவத்தைத் தாண்டி அவசியமெனில் கபிலனால் அடிப்படை அலோபதி சிகிச்சையும் செய்ய முடியும் என்ற செய்தியும் நம்பிக்கையும் மக்களிடையே பரவியது நல்ல பலனை அளித்தது.

மதுரை மற்றும் கோவையில் இரண்டு நாள்கள் முகாம் நடத்தினான். தொழில்முறை புகைப்படக் கலைஞரை அழைத்து, படங்கள், வீடியோ என எடுத்து விளம்பரம் செய்ததில் மக்கள் ‘நலம்’ நாடினர்.

உண்மையில், டீ டாக்ஸிங் சிகிச்சைக்கென வந்த ஒரு வளரும் டீவி, சினிமா பிரபலம் ஒரு பேட்டியில், அந்தச் சூழலில் ஐந்து நட்சத்திர வசதிகளுடனான ஒரு இந்திய இயற்கை மருத்துவசாலை புத்திளமை (Rejuvenating) தருவதாகச் சொன்னது, நிறைய
கார்ப்பொரேட் கஸ்டமர்களை, குறிப்பாகப் இளமை குறையாத பின் முப்பதுகளில் இருப்பவர்களை அழைத்து வந்தது.

மருத்துவமனை வளர்ந்ததில், அதை ஒட்டிய தேவைகளும் வளர்ந்தன.

ஆண், பெண் பேதமின்றி ஆயுர்வேத முறையிலான சரும மற்றும் அழகுக்கான ஆலோசனை மற்றும் அதற்கான சிகிச்சை பெறவும் வருபவர்கள் அனைவருமே கேட்பது ஒன்றுதான்.


அவர்களே சுலபமாக பயன்படுத்தக்கூடிய அழகு சாதனப் பொருட்களை பரிந்துரைக்கக் கேட்பர்.

கண்ட நேரத்தில், கண்டதையும் விருப்பம்போல், நார்ச்சத்து சிறிதுமின்றி மாவுப்பொருளாக அரைத்துத் தள்ளுவது, கண்ணுக்கு அழகாக, வாய்க்கு ருசியாக மட்டுமே உண்பது, இரவில் விழித்து, பகலில் உறங்குவது என உடலையும் வயிற்றையும் இடைவிடாது இம்சித்து விட்டு, வெறுமே வாசனைக் களிம்பை மேலே பூசிக் கொள்வதால் என்ன பயன்?

ஆயுர்வேதம் படித்ததனால் கபிலன் ஒன்றும் பீட்ஸா, பாஸ்தா, பர்கர் பென்ற பன்னாட்டு உணவு வகைகளுக்கு எதிரி இல்லை. அவனுக்குமே பிடிக்கும்தான் எனினும் என்றாவது ஒரு நாள்தான். அதுவும் உணவுப் பொருள்களின் தரம், குணம் மற்றும் பக்க விளைவுகளைத் தெரிந்துகொண்ட பிறகு அவனது முயற்சி ஏதுமின்றித் தானாகவே அவற்றின் மீதான ஆசை குறைந்து விட்டது.


மதுரையில் வெளியில் உணவருந்தச் சென்றால் நிலாவும் ஆதியும் மட்டுமின்றி அவன் அம்மா மாளவிகாவுமே அவனுக்கு நேர் மாறுதான்.

இங்கே சிறுவயது முதலே குந்தவைக்கு கோதுமை, மைதாவில் செய்த பதார்த்தங்களை அதிகம் எடுத்துக்கொண்டால் அதில் உள்ள பசையம் (Gluten) அவளது சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுத்தும். பிரியமாக உண்டுவிட்டு அவஸ்தைப் படுவாள்.

சென்ற வருடம் சிஏ பரீக்ஷை எழுதவென மதுரை சென்று தங்கியவள் இஷ்டத்துக்கு மேய்ந்ததில், வந்த அலர்ஜியில் தடிப்பும் அரிப்பும் தாங்காது, வயிறும் மந்தித்துக் கெட்டுப் போய் மிகுந்த அவதிக்கு உள்ளானாள்.

குந்தவையை மட்டுமின்றி, மகளுக்குப் பிடிக்கும் என எங்கே சென்றாலும் எதையாவது வாங்கி வரும் அப்பாவையும் சேர்த்தே காய்ச்சி எடுத்த கபிலன் “ஒரு வாரத்துக்கு இவளுக்குப் பத்தியம்தான். என்னைக் கேக்காம எதுவும் குடுக்காதீங்க” என்று மருந்து கொடுத்து சரி செய்தான்.

“புள்ள சாப்பிடறதைக் கண்ணு வைக்காதடா” என்ற காவேரியிடம்

“அவளைக் கெடுக்கறதே நீதாம்மா” என்று சீறினாள் செண்பகா. பின்னே, பின் பக்கம் செல்லத் துணைக்கு நிற்க, அரித்துத் தடித்த இடங்களில் எண்ணெய் தடவ என, இரவு முழுதும் தூங்காது மகளுடன் அவஸ்தைப் படுவது அவள்தானே?

“அண்ணா” என்று சிணுங்கியவளிடம் “ஏன், இன்னும் நாலு புரோட்டா வாங்கித் தரவா, ஆளைப் பாரு. இவ்வளவு சொல்றேன்ல, குடுக்கற மருந்தை ஒழுங்கா சாப்பிடற, இல்லைன்னா தூக்கிட்டுப் போய் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி, அந்த பத்திய சாப்பாடை சாப்பிட விட்ருவேன்” என்று கடிந்து கொண்டான்.

வீட்டிலாவது பருப்புத் துவையல், ரசம், பூண்டு மிளகு குழம்பு, புதினா சட்னி என சமாளிக்கலாம். அங்கென்றால் இப்படி உபாதை இருக்கும்போது காலையில் பயத்தங்கஞ்சி, பானகம், ஏதேதோ மூலிகைகள் போட்ட துவையல்கள், கொம்பு முளைக்கும் அளவுக்கு பச்சைக் காய்கறிகள் கீரை வகைகளோடு அவர்கள் தரும் சோற்றுப் பருக்கையை எண்ணியே பார்த்து விடலாம் என்பதால் குந்தவை வேகமாகத் தலையாட்ட, கபிலனிடம் தங்கைக்கான பிரத்யேகப் புன்னகை வெளிப்பட்டது.

சாரநாதன் “நுங்கம்மா பாவம்டா” என மகளுக்கு வக்காலத்து வாங்க, கபிலன் “அப்பாக்கும் அதையே சாப்பிடக் குடுங்க” எனவும், சாரநாதனின் முகம் மோன போக்கில் பெண்கள் நால்வருமே பக்கெனச் சிரித்துவிட்டனர்.

தன்னிடம் சிகிச்சைக்கென வரும் இளம் பிராயத்தினரைக் கூர்ந்து கவனித்து வந்தவனுக்கு, ரசாயனம் கலவாத இயற்கை அழகு சாதனப் பொருட்களின் மீதான ஆர்வமும், அவற்றின் சர்வதேச சந்தை மதிப்பும், இத்தனை மூலிகையை விளைவித்து, பல நிலைகளில் விற்கும் நாமே ஏன் அவற்றைத் தயாரிக்கக் கூடாது என்ற எண்ணம் வலுத்தது.

உற்பத்தி செய்ய வேண்டியவற்றின் லிஸ்ட், அதற்குத் தேவையான அடிப்படை இயந்திரங்களைக் கூட வாங்கிவிட்டான். ஆனால் அதை நிர்வகிக்க தேர்ச்சி பெற்ற ஒரு காஸ்மெட்டாலஜிஸ்ட் தேவைப்பட, இதுவரை வந்தவர்களில் யாரும் கபிலனைக் கவரவில்லை.

அவர்களில் பலரும் முன்பே கிடைக்கும் பொருட்களை மறுபதிப்பு செய்ய ஆலோசனை தந்தனர்.

அதோடு, திருமணம் தொடங்கி, மூட்டுவலி வரை பல்வேறு காரணங்களுக்காக உடற்பருமனைக் குறைக்கவென வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, உணவைப் பரிந்துரைக்கவும், அங்கு தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கான உணவுக் கட்டுப்பாட்டை வழிநடத்தவும் அதற்கெனப் படித்துப் பயிற்சி பெற்றவர்கள் தேவைப்பட்டனர்.

ஆயுர்வேத டயட் & நியூட்ரிஷியன் மற்றும் ஆயுர்வேத காஸ்மெட்டாலஜி இரண்டும் இணைந்து படித்தவர்கள் அரிது. இது தெரிந்துமே சியாமளாவின் விண்ணப்பத்தை கபிலன் நிராகத்திருக்க, அவளானால் நேரிலேயே வந்து நிற்கிறாள்.

அப்பா சாரநாதனும், உடன் பணிபுரியும் மொத்த மருத்துவக் குழுவும் சியாமளாவை ஏகமனதாக அங்கீகரித்ததில் கபிலனால் மறுக்க இயலாது போக, ஒப்பந்தம் தொடர்பாகக் கேள்வி கேட்கத் தொடங்கினான்.

“வீட்டை விட்டு இவ்வளவு தொலைவில் தங்கி இருந்து வேலை செய்ய உங்களால் முடியுமா?”

கபிலனின் மரியாதைப் பன்மையில் புருவம் உயர்த்திய சியாமளா “முடியும்கறதாலதான் வந்திருக்கேன்”

“இங்க ஹாஸ்பிடல்ல டயட் & நியூட்ரிஷியன், தோட்டத்துல இருக்கற ஃபேக்டரி ரெண்டையும் மேனேஜ் பண்ணுவீங்களா, அதற்கான அனுபவம் எதுவும்…?”

சியாமளா “என்னோட CV லயே என் எக்ஸ்பீரியன்ஸ் பத்தி எழுதி இருக்கேன். அதோட”

சியாமளியின் விண்ணப்பத்தில் இருந்த அவளது கல்வித் தகுதிகளால் கவரப்பட்ட ஆயுர்வேத டாக்டர் சுபாஷ் “கபிலன் ஸார், மேடம் BSc டயட் & நியூட்ரிஷியன், அதுலயே ஆயுர்வேதால போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா, ஆயுர்வேதால போஸ்ட் கிராஜுவேட் காஸ்மெட்டாலஜி டிப்ளமா, அது மட்டுமில்லாம ரெண்டு வருஷம் ஷேஷால ப்ராடக்ட் டெவலப்பரா இருந்திருக்காங்க” என பலத்த ஆதரவு தர, கபிலன் சியாமளாவின் கண்களை ஊடுருவினான்.

‘நல்ல வேளை அப்ளிகேஷன்ல இவ படிச்ச காலேஜ் பேர் இல்லை’

கபிலன் தன் கேள்விகளைத் தொடர்ந்தான்.

“உங்களால ஏதாவது ஒரு ப்ராடக்ட்டை செஞ்சு காட்ட முடியுமா, உதாரணமா ஹேர் கலர்?”

“ஒய் நாட்?”

“ம்… ஓகே. நீங்க தேவையான பொருள்களோட லிஸ்ட்டை கொடுங்க. அனுபமா, இன்னைக்கு ஒருநாள் இவங்க கூட நீங்க ஃபேக்டரிக்குப் போங்க”

“ஓகே ஸார்”

சியாமளா “அஸிஸ்டன்ட்ஸ்?”

“அங்கேயே இருக்காங்க”

சியாமளா கொடுக்கப்பட்ட தாளில் விறுவிறுவென சாமான்களின் பட்டியலை அதன் அளவுடன் எழுதி கபிலனிடம் நீட்டினாள்.

“குட்” என்றவன், கணேஷை அழைத்து “ஸ்டாக் செக் பண்ணிட்டு, லிஸ்ட் படி ஃபேக்டரிக்கு அனுப்பு. எதுவும் தேவைன்னா ஆளை அனுப்பி வாங்கிட்டு வரச் சொல்லு” என்றவன், சியாமளாவை தவிர்க்கும் முயற்சியை மீண்டும் முன்னெடுத்தான்.

“இப்ப வேலையைத் தொடங்கி, முடிக்க தாமதமானா என்ன செய்வீங்க?”

“நைட் ஹாஸ்பிடல்ல நர்ஸோட தங்கிக்கறேன்”

அயர்ந்தவன், அதை வெளிக்காட்டாது “ஹே… அதெல்லாம் வேணாம், நான் அரேஞ்ச் பண்றேன்”

“...”

கபிலன் “ஆர் யூ மேரீட்?”

கபிலனை நேர்ப் பார்வை பார்த்த சியாமளா “இல்ல, ஏன்?”

“இல்ல, உங்க வயசுக்கு வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாள்லயே நீங்க பாட்டுக்கு கல்யாணம் செஞ்சுக்கிட்டுப் போய்ட்டா, திரும்பவும் நான் வேற ஆளைத் தேடணுமே”

“இந்த ஊர்லயே நல்ல்ல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டா போச்சு” எனப் புன்னகைத்து ஒற்றைக் கண்ணைச் சிமிட்டிய சியாமளாவின் துடுக்கான பதிலில் கிரிதரனும் சுபாஷும் சிரித்து விட, அனுபமா தன்னையும் சியாமளாவையும் சற்றே ஐயமும் வியப்புமாய் கூர்ந்ததை உணர்ந்த கபிலன் படு இயல்பாக

“ட்ரை யுவர் பெஸ்ட், இப்ப நீங்க ஃபேக்டரிக்குப் புறப்படலாம். கைஸ், நீங்களும் போகலாம்”

நால்வரில் கடைசியாக வெளியேறிய சியாமளா, கதவு முழுதாக மூடும் முன் திரும்பிப் பார்த்துக் கண்களை சிமிட்டி விட்டுச் செல்ல ‘ஊஃப்’ என ஊதித் தளர்ந்து, தலையை இடம் வலமாக வேகமாக ஆட்டினான்.


‘மை காட், இவள…!’

*******************

மாலையில் குடிலில் இருப்பவர்களைப் பார்த்து விட்டு அனுபமாவை அழைத்தான்.

“என்னாச்சு?”

“அவங்க (சியாமளா) என்னென்னவோ சாமானை எல்லாம் தயார் பண்ணிக் கலந்து ஊற வெச்சிருக்காங்க. நாலு மணி நேரம் ஆகுமாம். நீங்க போறதுன்னா போங்கன்னு சொல்லிட்டாங்க, நான் அப்பவே வந்துட்டேன் ஸார். கற்பூரம் மாதிரி பயங்கர ஸ்மார்ட்டு, ஸ்பீடு ஸார் அவங்க”

‘அதான் எனக்கே தெரியுமே!’

“புது இடம். அவங்களைத் தனியா விட்டு ஏன் வந்தீங்க, அனுபமா?”

“ஸாரி ஸார், அவங்கதான்… ஆனா, அங்க வேலை செய்யற லேடீஸ் ரெண்டு பேர் கூட இருக்காங்க ஸார்”

“ஓகே, தேங்க் யூ அனுபமா”

அலைபேசியை அணைத்த கையோடு ‘அழகர் ஹெர்பல்ஸ்’ தோட்டத்திற்குப் புறப்பட்டு, நேரே அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கவெனக் கட்டப்பட்ட கட்டிடத்தை நோக்கிச் சென்றவன், அங்கு கண்ட காட்சியில் வாசலிலேயே நின்று விட்டான்.

உதவிக்கு இருந்த இரண்டு பெண்கள் மிதமான தீயில் எதையோ கிளறிக் கொண்டிருக்க, சாரநாதன், செழியன், சியாமளா மூவரும் வட்டமாகத் தரையில் அமர்ந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

செழியன் பார்த்துவிட்டு “வா மாப்ள” என்று வரவேற்றான்.

எழுந்து நின்ற சியாமளா அந்தக் கலவையின் அருகே சென்று பரிசோதித்தவள், அடுப்பை அமர்த்தும்படி சொல்லுகையில், அங்கே சென்ற கபிலன்

“முடிஞ்சுதா, பார்க்கலாமா?”

“ரெடி, கொஞ்சம் ஆறணும்”

“ஓகே” என்று திரும்பி நடந்தவனை சியாமளா அழைத்தாள்.

“கபீஷ்”

கபிலனின் முறைப்பைக் கண்டு கொள்ளாது ““அப்பா உங்க கிட்ட பேசணும்னு சொன்னார்”

“அதெல்லாம் மதியமே பேசியாச்சு”

"!!!"

சாரநாதன் மகனைக் கண்டதுமே “ஏனப்பு, நீயும் சியாமளாவும் ஒரே காலேஜாம்ல, இது உன் ப்ரொஃபஸரோட பொண்ணுன்னு மதியமே ஏன்டா சொல்லலை?” என உற்சாகத்துடன் படபடத்தான்.

“நீங்கதான் உடனே கிளம்பிட்டீங்களேப்பா” என்ற கபிலன், சியாமளாவை ஏறிட்டு,

“நான் சொன்னது போலவே இருட்டியாச்சு. இன்னைக்கு ஒருநாள் அனுபமாவோட ரூமை ஷேர் பண்…”

இடையிட்ட சாரநாதன் “அப்பு, அதெல்லாம் ஒன்னும் வேணாம். உன் ப்ரொஃபஸரோட பொண்ணு, ஒரே காலேஜ் வேற. உனக்கு அவங்களை முன்னாலயே தெரியும். ரூம் ரெடியாகுற வரை நம்ம வீட்லயே இருக்கட்டும். இடமா இல்லை, பேச்சுத் துணைக்கு இருக்கவே இருக்கா நம்ம நுங்கம்மா. நீ என்னம்மா சொல்ற?”

“உங்களுக்கு ஏன் ஸார் சிரமம், எங்கன்னாலும் எனக்கு ஓகேதான்”

“நீ இருக்கறதுல எனக்கென்னம்மா சிரமம், அப்பு, சொல்லேன்டா”

“சரிப்பா, அங்கேயே வரட்டும்”

அதற்குள் ஹேர் கலரை ஒரு கண்ணாடிக் குடுவையில் சேகரித்து, அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு அந்தப் பெண்கள் இருவரும் புறப்பட்டனர்.

வரும்போது அனுபமாவுடன் மருத்துவமனையின் வண்டியில் வந்திருந்த சியாமளா, சாரநாதனின் பைக்கிலும் செழியன் கபிலனின் ஹன்டரிலும் பயணித்தனர்.

செழியனை வீட்டு வாசலில் இறக்கி விட்டு, உள்ளே வராது வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றவனைப் புரியாமல் பார்த்தவள் “உள்ள வாம்மா” என்ற சாரநாதனின் பின்னே சென்றாள்.


******************

மொபைல் ஒலிக்க, மீண்டும் ‘அம்மா’

“சொல்லும்மா”

“இன்டர்வ்யூ முடிஞ்சுதா, அந்த சியாமளாவை செலக்ட் பண்ணிட்டியா?”

“ஆமாம்மா”

“எல்லாரும் எப்ப ஜாயின் பண்றாங்க?”

“அடுத்த வாரம்”

“ஆனா சியாமளா இப்ப ஹெர்பல் ஃபார்ம்ல இருக்காளாமே?”

‘இந்த கணேஷ் பயல… சம்பளம் நான் தரேன். வேலையை எங்கம்மாக்கு பாக்கறான்’

“கபிலா”

“அவங்களை ஒரு சாம்பிள் செஞ்சு காட்ட சொன்னேன்மா. லேட் ஆயிட்டதால அங்க… வீட்ல இருக்காங்க. அப்பா வந்து கூட்டிட்டுப் போய்ட்டாங்க”

“வீட்லயா…” என்று இழுத்த மாளவிகாவின் குரலில் பலத்த யோசனை.

“அவங்க என் ப்ரோஃபஸரோட பொண்ணு மா. அதான்…”

“ம்…. சரி. எதானாலும், இந்த சனிக்கிழமை நீ இங்க வர. ஞாயித்துகிழமை பொண்ணு பாக்கப் போறோம்”

“...ம்மாஆஆ”

“மூலிகையோட மூலிகையா நீ தனியா கிடந்து காய்ஞ்ச வரைக்கும் போதும். மரியாதையா வந்து சேரு”

“...”

“கபிலா…”

“ம்… கன்ஃபர்ம் பண்றேம்மா”

மாளவிகாவின் தொனியில் அழுத்தம் ஏறிக்கொண்டே செல்வதைக் கண்ட ஜெயச்சந்திரன் “ஃபோனை எங்கிட்ட குடு. போட்டு நெருக்காம அவனை ஃப்ரீயா விடுடீ” என்றதைத் தொடர்ந்து

“கபிலா, அம்மா வாட்ஸ்ஆப்ல டீடெயில்ஸ் அனுப்பி இருக்காங்க. பார்த்து முடிவு செய்”

கபிலன் வேறு வழியின்றி “சரி நிலாப்பா”

மாளவிகா மீண்டும் பேசிவிட்டுத்தான் ஓய்ந்தாள்.

சனிக்கிழமைக்குள் இன்னும் எத்தனை முறை இதைக் கேட்க வேண்டுமோ?

இதுவரை தப்பித்து வந்தவனை, மாளவிகா கடந்த மூன்று வாரங்களாக ஏதோ ஒரு பெண்ணைப் பார்க்க வேண்டுமென மிகவும் பிடிவாதமாக நெருக்குகிறாள். இப்போதும் ஒரு காரணத்தைத் தேட வேண்டும்.

மீண்டும் மொபைல் ஒலிக்க, குந்தவை.

“சொல்லுடா நுங்கு”

“எங்கண்ணா இருக்க?”

“வீட்லதான்”

“சாப்பாடு?”

“ம்…”

“என்ன ம், நீ எதுவும் செய்யலைன்னு எனக்குத் தெரியும். உடனே இங்க வா”

கபிலன் தயங்கினான். இப்போது அங்கு சென்றால், செண்பகா மற்றும் காவேரி அத்தையின் 'சியாமளாவை முன்பே உனக்குத் தெரியுமாமே, அவள் ஏன் திருவனந்தபுரத்தில் இருந்து இங்கே வந்திருக்கிறாள்' போன்ற சந்தேகங்களுடன் கூடிய கேள்விகளைத் தாங்கிய, பார்வைகளை எதிர்கொள்ள வேண்டும்.

இதில் சியாமளா வேறு!

“அண்ணா… ணா”

“வரேன், வை”

***********************

வீட்டிற்குள் நுழைந்தவன் முதலில் பார்த்தது, குளித்து, மஞ்சள் நிற குர்த்தியும், பச்சை நிற சல்வாரும் அணிந்து, கிளட்சரில் அடக்கி இருந்தும் நெளிநெளியாக விரிந்த கூந்தல் வழிய, அளவான டார்க் மெரூன் பொட்டுடன் பளீரென்ற தோற்றத்தில் முற்றத்துக் குறட்டில் அமர்ந்து குந்தவையுடன் பேசிக்கொண்டிருந்த சியாமளாவைத்தான். அவளது தமிழில் பாலக்காட்டு மணம்.

இதே போன்ற ஒரு மஞ்சள் நிற உடையில்தான் முதன் முதலில், கால்பந்தாட்ட மைதானத்தில், இறுதி மேட்ச் முடிந்து வெற்றிக் கோப்பையைக் கையில் வாங்கி, வாழ்த்துகளை ஏற்றபடி நின்றவன், ரசிகர்களுக்கு நடுவே நீந்தி அருகில் வந்தவளைப் பார்த்தான்.

சியாமளா கூட்டம் குறைந்த பின்னும் அங்கேயே நின்றாள். வாலிபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவே, தனியே நின்றவளிடம், கபிலனே

“ஆட்டோகிராஃப் வேணுமா?”

“ம்ஹும்”

“தென்?”

“சும்மாதான், பக்கத்துல பார்க்கணும்”

‘சரிதான்’

ஒரு சிரிப்புடன் நகர்ந்தவனை வாய்ப்பு கிடைத்த நேரமெல்லாம் பக்கத்தில் வந்து பார்க்கத் தலைப்பட்டாள் சியாமளா.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி 2
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Member
Apr 28, 2025
77
14
18
Chennai
நீங்க விவரிக்கிற "நலம்" மருத்துவமனை அழகில் நாங்க கூட அங்கே வைத்தியத்திற்கு போக முடியுமா என்ற ஆசை ஏற்படுகிறது. 😜😂😂😂 பேசாம கபிலன் கிட்ட எங்களுக்கு ஒரு appointment போட்டு கொடுங்க 😂😂😂

அப்போ சியாமளா தான் குறுநகைக்கு சொந்தக்காரியா??🤔😜😂 கல்லூரியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பக்கத்தில் வந்து பார்ப்பவள், இப்போ ஒரேயடியா அவன் இட(தய)ப்பக்கத்தை பிடிக்க வந்திருக்காளோ?🤔😜😂😂😂
 
Jun 19, 2024
11
3
18
Trivandrum
😍😍😍

பக்கத்துல பார்க்கும் போது, அக்கம் பக்கம் யாருமில்லாத இடத்துக்கு போயிடணும்...🙈🙈🙈