• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

ஒரு சேலஞ்ச் பல அவஸ்தை -ஜீனத் சபீஹா

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
34
3
8
chennai
ஒரு சேலஞ்ச் பல அவஸ்தை

"ரெடியா.? டேக் போலாமா.?"

"இருடி. லைட்டிங் செக் பண்ணிட்டு இருக்கேன்."

"சரி, சரி நல்லா பாத்துக்கோ. அப்புறம், முக்கியமான விஷயம். எந்த ஆங்கிலிருந்து பார்த்தாலும் நான் ஒல்லியா தெரியணும்." எனப் பதில் வந்ததும் அதுவரை கேமராவில் கண்ணைப் பதித்து லைட்டிங்கை சரி பார்த்துக் கொண்டிருந்த நிறு என்னும் நிருபமா. தன் எதிரில் நின்றபடி சுற்றி முற்றி பராக்கு பார்த்துக் கொண்டிருந்த தன் நண்பி லாவண்யாவை முறைத்துக் கொண்டிருக்க, முதலில் அதைக் கவனிக்காதவள் பின் கவனித்து "எதுக்குடி இப்ப என்னை இவ்வளவு பாசமா பாத்துட்டு இருக்கே.?" எனக் கேட்டாள்.

"சீரியஸா ஒரு விஷயம் பண்ணிட்டு இருக்கும்போது இப்போ ஒரு டயலாக் விட்ட பாரு அதுக்கு தான்." என்றாள் இவளும்.

"இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன். ஒல்லியா தெரியணும்னு சொன்னேன். அது ஒரு குத்தமா.? போன வீடியோவிலயே லைட்டா தொப்பை தெரியுற மாதிரி இருக்கு. அது இல்லாம கவர் பண்ணு."

"கொஞ்சமாவது மனசாட்சி இருக்காடி உனக்கு. இருக்கிறது எப்படி இல்லாம காட்டுறது. நீ திங்கிற தீனிக்கு தொப்பை வராம இருந்தா தான் அதிசயம்."

"அடிப்பாவி.! யூட்யூப் சேனல் தொடங்கலாம். கேர்ள்ஸ் நம்ப ரெண்டு பேரும் மட்டும் சேர்ந்து தொடங்கும்போது அதுக்கு ஒரு ஹைப் கிடைக்கும். வியூஸை அள்ளி எங்கேயோ போகலாம். கோல்ட், பிளாட்டினம்னு பேட்ஜ் வாங்கலாம்னு என் மண்டைய கழுவி என்னை இதுல கோர்த்து விட்டுட்டு இப்போ நான் குண்டா இருக்கேன்னு கமெண்ட் பண்றியா.?நான் இப்படியே கோச்சிட்டு போறேன் போ. குண்டா இருந்தாலும் ஒல்லியா தெரியுற மாதிரி எடுக்கிற டெக்னிக் தெரிந்து இருக்கணும் உனக்கு…" என்றபடி இரண்டடி எடுத்து வைத்தாள் தோழி வருகிறாளா என ஓர கண்ணில் நோட்டம் விட்டுக் கொண்டே. அவள், இவளை முறைத்துக் கொண்டிருக்க.

"சரி, சரி உன்ன பாத்தாலும் பாவமா இருக்கு. உன்ன மன்னிச்சு விட்டுடுறேன். வேலைய கண்டினியூ பண்ணு." என்று கூறியபடியே தன் பழைய இடத்தில் வந்து நின்று கொண்டாள்.

"தூ.!" என அவளைப் பார்த்துத் துப்பி விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள் நிருபமா.

அவள் துப்பியதை துடைப்பது போலத் தன் தோள்பட்டையில் தட்டி விட்டு முடியைச் சிலுப்பி விட்டு நின்றவள். சற்று நேரத்தில்,
"ஆமா, நாம் இன்னைக்கு என்ன கான்செப்ட் பண்ண போறோம்.?

"இன்னிலிருந்து நம்ம வியூவர்ஸ் கேட்கிற சேலஞ்சய் பண்ண போறோம்."

"ஓ.!சூப்பர். அப்படி என்ன சேலஞ்ச் பண்ண போறோம்.?அது சரி, நமக்கு இருக்கிற வியூவர்சே ஒரு ஐம்பது பேர் தான். அதை முக்கி, முக்கி அடையறதுக்கே மூணு மாசம் ஆச்சு.

"சேனல் சீக்ரெட்ட வெளியே சொல்லாத பக்கி." என்றவள் அவளை அடிப்பதற்கு ஏதேனும் கிடைக்கிறதா எனச் சுற்றி முற்றி தேட.

"சரி, சரி நோ வயலன்ஸ். நம்ம வியூவர்ஸ் சேலஞ்ச் கேட்டிருக்காங்க அதை நம்ம பண்ண போறோமா.? சூப்பர்மா. அப்படி என்ன சேலஞ்ச் பண்ண போறோம்.?
"முதல் நாளே அட்டகாசமான சேலஞ்சு. பச்சை மிளகாய் சேலஞ்ச்." என்றபடி தன் பாக்கெட்டில் இருந்த ஒரு பச்சை மிளகாயை எடுத்து நீட்ட.
அவள் கையில் இருந்த மிளகாயை பார்த்த படியே அவள் அருகில் வந்தவள்,
"இந்தப் பச்சை மிளகாய்ய வச்சு நம்ம என்ன பண்ண போறோம்.?' எனக் கேட்டாள் அதைக் கையில் வாங்கிய படி.
"இன்னைக்கு காலைல இருந்து நைட்டு வரைக்கும் பச்சை மிளகாயில் செய்த சாப்பாட்டை மட்டும்தான் சாப்பிட போறோம்."
"சாப்பிட போறோம்னு சொல்லாத. சாப்பிட போறேன்னு சொல்லு.நீ நல்லா கேமராவை கையில வச்சிக்கிட்டு வேடிக்கை மட்டும் தானே பாக்க போற. இந்தப் பச்சை மிளகாயை சாப்பிட்டு நான் சிவந்து போகணுமா.? நான் வரல இந்த ஆட்டத்துக்கு. என்னை ஆள விடு." என்று கூறியபடி நிஜமாகவே கிளம்பியவளை பின் சென்று அணைத்தபடி பிடித்தவள்.

"ஏய், ஏய் இப்படி எல்லாம் புதுசா செஞ்சா தாண்டி நம்ம சேனல் பெரிய லெவல் போகும்."
"அப்ப நீ சாப்பிடு மேன். ஒய் மீ."
"நீதான்டி கேமரால அழகா தெரியவ நான் ரொம்ப சுமாரா தான் தெரிவேன். அதனால தான் உன்னைக் கேமரா முன்னாடி நிக்க வச்சுட்டு. நான் கேமரா பின்னாடி நிக்கிறேன் அதுவும் இல்லாம அவ்வளவுமா டி சாப்பிட போற.? ஒரு வாய் சாப்பிட போற. அதுக்கு போய் இப்படி சலிச்சிக்கிற."
"ஒருவாய் என்றாலும் சாப்பிட போறது நான் தானே. ஏற்கனவே எனக்குக் காரம் ஒத்துக்காது."
அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடி. அதுக்கப்புறம் ஜில்லுனு ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் சரியா போயிடும். இப்போ வா நான் சொல்றபடி செய்." என்று அவளை ஒரு வாரு சமாதானம் செய்து கேமராவின் முன் நிற்க வைத்தாள் நிறுபமா.

அவள் கூறிய ஆங்கிளில் நின்றவள் அவள் ஸ்டார்ட் என்று சொன்னதும்.
"வணக்கம் மக்களே, மறுபடியும் உங்களை நம்ம
"சாப்பாடு ஸ்டோரீஸ்."க்கு வரவேற்கிறேன். இன்னைக்கு நாம, நம்ம வியூவர்ஸ் ஆசைப்பட்டபடி பச்சை மிளகாய் சேலஞ்ச் பண்ண போறோம். இன்னைக்கு மூணு வேலையும் பச்சை மிளகாய் வைத்துச் செய்த சாப்பாடு மட்டும்தான் சாப்பிடப் போறோம். எப்படி இருக்குமோ.? வயிறு கலக்காம இருந்தா சரிதான்." என்று சிரித்தபடி கூறியவள். தன் கையில் இருந்த பச்சை மிளகாயை காட்டி
"வாங்க போகலாம்."எனக் கூற அத்துடன் அவர்களின் ஒலிபரப்பு முடிந்தது.
"இப்ப அடுத்தது என்னடி.?" எனக் கேட்டவளிடம்
"இங்க பக்கத்துல ஒரு அக்கா ஜூஸ் எல்லாம் விப்பாங்க. அவங்க கிட்ட ஒரு சூப்பர் ஜூஸ் இருக்கு. வா, முதல்ல போய் அதைக் குடிக்கிற மாதிரி ஷூட் பண்ணுவோம்." என்றபடி அவளை அழைத்துச் சென்றாள். அது ஒரு சிறிய கடை விதவிதமான ஜூஸ்களும், சோடாக்கலும், சர்பத்துகளும் கிடைக்கும் எனப் போர்டு போடப்பட்டிருந்தது.
அவரிடம் சென்ற நிருபமா
"அக்கா ஒரு கொலைவெறி."என்றாள்.
"என்னதுடி கொலவெறி.?" எனக் கேட்ட லாவண்யாவிடம்
"அது ஒரு ஜூஸ் டி."
" ஜூஸா.? பேரே டெரரா இருக்கே. காலேஜ்ல அத்தனை பேரு இருக்காங்க. உன் கூடப் போய்ப் பிரெண்டானேன் பாத்தியா. என்னை வச்சி செய்யற டி நீ." என்று புலம்பியவளிடம்.
"சலசலனு பேசாம நில்லுடி சூப்பரா இருக்கும் அந்த ஜூஸ் குடிச்சு பாரு." என இவர்கள் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் கைகளில் கொலை வெறி வந்து சேர்ந்தது. பச்சை நிற திரவத்தில் இரண்டு பச்சை மிளகாய் மிதக்க. கண்ணாடி டம்ளரில் மேல் பகுதியில் முழுவதுமாக உப்பு ஒட்டப்பட்டு சோடாவின் மெல்லிய சத்தத்துடன் ஜில்லென்று இருந்தது.

"என்னடி இப்படி இருக்கு.?" எனப் பயந்தபடி அதைப் பார்த்துக்கொண்டு கேட்ட லாவண்யாவிடம்
"குடிச்சு பாரு. சூப்பரா இருக்கும்." என்றவள்
"இரு இரு கேமராவை செட் பண்ணிக்கிறேன். குடிச்சுட்டு மூஞ்ச சுழிச்சுராதடி. சிரிச்ச மாதிரியே மூஞ்ச வச்சு, சூப்பரா இருக்குன்னு சொல்லணும். சரியா."
"சரி, வேற வழி." என்றபடி அவள் சொன்னபடி நின்றவள் அவள் கூறியபடியே ஜூசை குடித்து முடித்து "முதல் சேலஞ்ச் வெற்றிகரமா முடிச்சாச்சு. ஆனா, கொஞ்சம் காரமா இனிப்பா சூப்பரா இருந்தது இந்த ஜூஸ். உங்களுக்கு வேணும்னா இந்த அக்காவை வந்து பாருங்க அவங்க உங்களுக்குச் சூப்பரா கொலவெறி போட்டுத் தருவாங்க." என்று கூறியபடி அன்றைய காலைச் சூட்டிங் முடிந்தது.
"அடுத்து.?" எனக் கேட்ட லாவண்யாவிடம்
"இப்போ நேரா பீச்சுக்கு போறோம். அங்க கொஞ்ச நேரம் காத்து வாங்கிட்டு. அங்க ஒரு அக்கா பச்சை மிளகாய் நிறைய போட்டு ஒரு சாதம் கிளறுவாங்க. அங்க சாப்பிட்டுவிட்டு பக்கத்திலேயே பஜ்ஜி கடை.அங்க ஒரு பச்சை மிளகாய் பஜ்ஜி. அதுக்கப்புறம் நைட்டு பச்சை மிளகாய் மட்டும் அரைத்துப் போட்ட குருமாவுடன் இரண்டு பரோட்டா சாப்பிட்டு இன்னைக்கு சேலஞ்சே முடிக்கிறோம்." எனத் தொடர்ந்து தன் திட்டத்தைக் கூறியவளை பார்த்த லாவண்யா
"எல்லாமே பிளான் பண்ணி தான் பண்ற. என்னடி.?"எனக் கேட்டப்படியே அவளைப் பின் தொடர்
"ஆமாடி ஒரு விஷயத்தைச் செய்யறதுக்கு முன்னாடியே அதைப் பத்தி ஆராய்ந்து எல்லாமே தெரிந்து வச்சுக்கணும்.சேனல் ஆரம்பிச்சு நடத்துவதெல்லாம் சும்மாவா. வா, வா இதனால வியூ சும்மா பிச்சுக்கிட்டு போகும் பாரு." என்ன கூறியபடி அவளைக் கையோடு அழைத்துச் சென்றாள்.
"சேனல் பிச்சுகிட்டு போகுதா.? இல்லை எனக்குப் பின்னாடி பிச்சிக்கிட்டு போகுதான்னு அப்புறமா தாண்டித் தெரியும்."என்ற படியே அவளைப் பின் தொடர்ந்தாள் லாவண்யா.

ஒரு வழியாக அவர்கள் எதிர்பார்த்தபடி அன்றைய சேலஞ்ச் நல்லபடியாக முடிந்தது.
கேமராவை அதற்குள்ள பையில் வைத்துவிட்டு
"அப்பாடா.!" என மூச்சு விட்ட நிருபமாவிடம்
"நீ நிம்மதியா மூச்சு விடுற. எனக்கு இப்பதான் கடா முடான்னு ஆரம்பிக்குது. சீக்கிரம் வண்டியை எடு." என்ற படியே அவளின் இருசக்கர வாகனத்தின் பின் ஏறி அமர்ந்தாள்.
"என்னடி சொல்ற.?" எனப் புரியாமல் கேட்ட தோழியைப் பார்த்தவள்,
"உனக்குப் புண்ணியமா போகும். சீக்கிரமா என்னைக் கொண்டு போய் வீட்ல விடுடி. லேட் ஆக, ஆகப் பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும் போல. உன் கூடப் பிரெண்டானதுக்கு நான் இன்னும் என்ன எல்லாம் அனுபவிக்கனுமோ. ஐயோ இன்னைக்குன்னு பாத்து வெள்ளை கலர் பாண்ட் வேற போட்டு வந்துட்டேனே. மஞ்ச கலர்ல கரை பட்டால் போகுமா டி.?"என்று தன் போல் புலம்பிக் கொண்டு அமர்ந்திருந்தவளை திரும்பிப் பார்த்த நிருபமா,

"நீ என்ன சொல்றன்னு நெஜமாவே ஒண்ணுமே புரியல டி." என்றாள். "உனக்குப் புரியாது. சாப்பிட்டது நான் தானே. எனக்குத் தான் புரியும். உனக்குப் புண்ணியமா போகும் தயவு செஞ்சு சீக்கிரமா என்னைக் கொண்டு போய் எங்க வீட்ல விட்டுடுமா சீதேவி."
அவளை இன்னும் புரியாமல் பார்த்தவளை. பார்த்த லாவண்யா "காலைல குடிச்ச கொலவெறி இப்போ என் கண்ணுல தெரியும் பாரு." என்றவள் அவள் இன்னும் அப்படியே இருப்பதைக் கண்டு, "அடியே.! வயிற்றுக்குள்ள வித விதமா சத்தம் கேட்குத டி.பிச்சிக்கிட்டு அடிக்கிறதுக்குள்ள என்னை வீட்ல விட்டுடு. இல்லன்னா உன் வண்டி தான் டேமேஜ் ஆகும்.சொல்லிட்டேன். வண்டியைக் கழுவரது இல்லாம என்னையும் நீ தான் கழுவி விடணும். பார்த்துக்க."எனக் கூறிய பிறகே அவளின் அவசரம் உணர்ந்தவள். "அச்சச்சோ.! சரி டி, சரி டி கோபப்படாதே. இதோ டக்குனு உன்னை வீட்டில் விட்டுவிடுகிறேன்." என வண்டியை வேகமாகச் செலுத்தினாள்.
வீட்டு வாசலில் வேகமாக இறங்கியவள்
"ரெண்டு நாளைக்கு என் கண்ணு முன்னாடி வந்துடாத." என்றபடி வீட்டிற்குள் வேகமாக ஓடினாள்.

வேகமாகத் தன் அறைக்குள் ஓடியவள் உடையைக் களைய முற்பட அவசரத்தில் அவள் கைகள் நடுங்கியது.
"ஐயோ இது வேற சுருக்கா முடிச்சு விழுந்துடுச்சே. அம்மா." என்று கத்திய படியே வந்தவளை பார்த்த அவளின் அன்னை
"நீ எப்ப டி வந்த.?" எனக் கேட்டபடியே தன் கைகளில் இருந்த கீரைகளை சுத்தம் செய்ய முற்பட
"இப்பதான்மா வந்தேன்.
இத கொஞ்சம் அவுத்து விடுமா." என்ற படியே அவளின் பேண்ட் முடிச்சைக் காட்ட
"ஏண்டி.? இத கூட உன்னால கழட்டிக்க முடியாதா.? சின்னப் புள்ள மாதிரி கழட்டி விடு மான்னு வந்து நிக்கிற."
"ஐயோ.!அம்மா, லெக்சர் எடுக்காத. அவசரம் புரியாம. அவுத்து விடுமா." "இப்படி இழுத்தா வந்துற போகுது." என்று இழுக்க. சிரமம் இல்லாமல் முடிச்சும் அவிழ்ந்தது.
"ஐயோ.! இவ்வளவு ஈஸியாவா இருந்தது. பதட்டத்துல கண்ணும் தெரியல போலயே." என்று புலம்பியபடியே அறைக்குள் ஓடிய மகளை விசித்திரமாகப் பார்த்தவர், "எதுக்கு இப்படி ஓடுறா இவ.?" என்ற படியே தன் வேலையைத் தொடர்ந்தார்.

இடுப்பில் ஒரு துவாலையை கட்டிக்கொண்டு வெளி வந்தவள் "அம்மா முடியலையே, எரியுதே." என்றபடி கட்டிலில் படுத்து அங்கும், இங்கும் புரண்டுகொண்டிருந்தாள்.
இவனின் சத்தம் கேட்டு அறைக்குள் வந்த அவளின் அன்னை அவள் இருந்த கோலத்தைப் பார்த்து
"என்னடி .? இப்படி உருண்டுகிட்டு இருக்க."எனக் கேட்க.
"முடியல அம்மா வயிறு வலிக்குது. தண்ணி தண்ணியா போகுது. எரியுது." என்றவளின் அருகில் வந்தவர்
"அப்படி என்ன சாப்பிட்ட? ஏன் இப்படி உன் கண்ணு, மூக்கு, வாய் எல்லாம் சிவந்து போய் இருக்கு.?" எனக் கேட்க. "அதை ஏன்மா கேக்குற.?" என இவள் கூறும்போதே
"அதை நான் சொல்றேன்." என்றபடி உள்ளே வந்தான் அவளின் அண்ணன் விக்ரம்.
"உங்க அருமை மக, அவ பிரண்டோட சேர்ந்து ஆரம்பித்து இருக்கிற புது யூடியூப் சேனலுக்குப் பச்சை மிளகாய் சேலஞ்ச் செஞ்சிருக்காங்க. அதுல வந்தபின் விளைவு தான் இது."
"அது என்னடா பச்சை மிளகாய் சேலஞ்ச்.?"
"அது என்னனா அம்மா. பச்சை மிளகாய் மட்டும் சேர்த்து செய்த சாப்பாட்ட ஒரு நாள் முழுக்க சாப்பிடணும். அதுதான் உங்க பொண்ணு சாப்பிட்டு வந்து இப்படி உருண்டுகிட்டு கிடக்கிறாள்."
"அப்படியா டி.? உனக்குத் தான் காரம் ஆகாது இல்ல."எனக் கேட்ட அன்னையிடம் பதில் கூறாமல்.

"உனக்கு எப்படி தெரியும்.?" என அண்ணனைப் பார்த்துக் கேட்க. "அதுதான் ஜெட் வேகத்தில் அப்லோட் பண்ணிட்டாளே உன் பிரண்டு."
"அப்படியா.? எப்படி இருக்கு வீடியோ? நான் அதுல எப்படி இருக்கேன்.?' எனத் தன் வேதனை மறந்து அண்ணனிடம் கேட்க
"அதெல்லாம் சூப்பரா தான் இருக்க. வியூவும் அப்லோட் பண்ண கொஞ்ச நேரத்திலேயே இரண்டாயிரத்தை தாண்டிடுச்சு. கமெண்டும் ஐந்நூறுக்கும் மேல."
"ஓ.! சூப்பர்.!"எனத் தன்னை மறந்து குதித்தவள்
"ஐயோ அம்மா வயிறு வலிக்குதே." என மறுபடியும் சுருண்டு படுத்துக் கொண்டாள்.
"பச்சை மிளகாய் மட்டும் சாப்பிட்டால் வயிறு வலிக்காமல் என்ன செய்யும்.? எதுக்கு உனக்குத் தேவையில்லாத வேலை.?" என்று கடிந்து அன்னையிடம்.
"பரவால்லம்மா நான் கஷ்டப்பட்டதுக்கு எனக்குப் பலன் கிடைச்சிருக்கு. சந்தோஷம் தான்." என்றவள் இடை இடையே
"ஐயோ! எரியுதே…" எனச் சத்தமிடமும் மறக்கவில்லை.
"இரு கொஞ்சம் மோர் கரைச்சு எடுத்துட்டு வரேன்." என்றபடி வெளியேறிய அன்னையிடம்
"அம்மா வயிறு வலிக்கு மோர். எரியறதுக்கு என்னமோ செய்றது." "ஹ்ம்ம் ஐஸ் கட்டி எடுத்துட்டு வந்து தரேன் அங்க வச்சு படுத்துக்கோ..." என்ற படியே சென்ற அன்னையை பார்த்தவள்,

"ஹான்.! ஐஸ் கட்டிய அந்த இடத்துல வைக்கணுமா.? ஐயய்யோ…" என்றபடி அமர்ந்த தங்கையைப் பார்த்தவன்.
"ஒரு ஐஸ் கட்டி எல்லாம் பத்தாது. நிறைய ஐஸ் கட்டிய டவல்ல போட்டு அது மேல நீ உக்காந்துக்கோ அப்பதான் கொஞ்சமாவது எரிச்சல் அடங்கும்." எனக் கூறியபடி வெளியேறிய அண்ணனைக் கோபத்துடன் பார்த்தவள்,
"என்னைக் கிண்டல் பண்றல அண்ணா. பிரியாணி சேலஞ்சுக்கு உன்ன கூட்டிட்டு போலாம்னு நினைச்சேன். இப்போ, நீ வேண்டாம் போ…" என்று கத்திய தங்கையைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தவன். அவள் வலியைப் போக்குவதற்கு ஏதேனும் மருந்து கிடைக்குமா எனப் பார்க்க மருந்தகத்தை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.

மகளின் வலியைப் போக்குவதற்கு ஏற்றபடி மோரை கலக்கி கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தவர் "இப்படித்தான் புட் சேனல் பண்றவங்க எல்லாம் கண்டதையும் சாப்பிட்டு வீட்ல வந்து உருண்டுகிட்டு அம்மாவ தொல்லை பண்ணுவாங்க போல." எனச் சொல்லி
"ஹா ஹா ஹா.." என்று சத்தமிட்டு சிரித்தவரை கண்ட லாவண்யா, "அப்படி எல்லாம் எங்களைக் கிண்டல் பண்ணாதம்மா." எனச் சிணுங்கியவள், அவர் கொடுத்த மோரை வேகமாக அருந்த ஆரம்பித்தாள்.

✍️ ஜீனத் சபீஹா
 

Author: siteadmin
Article Title: ஒரு சேலஞ்ச் பல அவஸ்தை -ஜீனத் சபீஹா
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: vidya