என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -2
“ஈஸ்வர் டிடெக்ட்ஸ்” என்ற ஆங்கில எழுத்துக்களின்” கீழே “துப்பறியும் ஈஸ்வர்” என்று தமிழ் எழுத்துக்களை வாசித்தபடி தனது பைக்கில் இருந்து இறங்கினான் கார்த்திக். ‘இவன் ஒருத்தன், மும்பைல இருக்கிற தமிழர்களுக்கே தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமான்றதே மில்லியன் டாலர் கேள்வி. இதுல துப்பறியும் சாம்பு மாதிரி சார் துப்பறியும் ஈஸ்வராம். நினப்பு தான். சார் யாருக்காக தமிழ்ல எழுதி வச்சிருக்காருன்னு தெரியலை.. ’ என்று சிரித்துக் கொண்டே உள்ளே சென்றான்.
கிட்டத்தட்ட இருபது பேருக்கும் அதிகமானோர் வேலை செய்து கொண்டிருந்த போதும் அலுவலகத்தில் ஆழ்ந்த அமைதி நிலவியது. ஈஸ்வரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டு வரவேற்பில் அமர்ந்தான். அவன் யாரென்று தெரியும் என்பதால் அப்பாயின்ட்மென்ட் என்றெல்லாம் கேள்விகள் கேட்காமல் அமர வைத்து உபசரித்தனர்.
தான் வந்த நோக்கத்தை யோசித்துப் பார்த்தவனுக்கு பழைய ஞாபகங்கள் அலைமோதின.
கார்த்திக் மற்றும் ஈஸ்வர் குடும்பத்திடையே பல வருடங்களாக ஏற்பட்ட பழக்கம் ஒரு கட்டத்தில் சொந்தமாக மாறியதில் மலர்விழியின் பங்கு தான் அதிகம். நண்பனின் தங்கை என்று தள்ளி நின்றே ஜனனியை ரசித்த(!?) கார்த்திக்கை தாயிடம் போட்டுக் கொடுத்தவள் மலர்விழி.
“ம்மா! உன் பையனைக் கவனிச்சியா? கொஞ்ச நாளா சார் ஜனனிய பார்க்கிற பார்வையே சரியில்லை. கேட்டா, ஃப்ரண்டோட தங்கையாம்.. தப்பா பேசக் கூடாதாம்.” பதினெட்டு வயதுப் பெண் பேசிய பேச்சுக்கு அவளை முறைத்தாலும்,
“ம்ம்.. கவனிச்சிட்டு தான் இருக்கேன்” என்றார் சுந்தரி.
“இந்த மேடமும் நமக்குத் தெரியாதுன்னு நினைச்சு ஓரக்கண்ணால லுக்கு விடுறாங்களே… அதையும் கவனிச்சீங்களா?” என்று ஜனனியையும் சேர்த்தே கண்டுபிடிக்க அவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் இனிதே நடைபெற்றது. தனது நினைவுகளில் மூழ்கி இருந்தவனை தரைக்கு இழுத்து வந்தது ஒரு குரல்.
“அடடே! வாங்க வாங்க! என்ன இந்தப் பக்கம் காத்து வீசுது, மாப்பிள்ளை சார்?அதுவும் புதுசா ஆஃபீஸ் பக்கம் வந்திருக்கீங்க, எதுவும் முக்கியமான விஷயமா கார்த்திக்?” என்று கேலியாக ஆரம்பித்து சீரியசாக முடித்தவன் எல்லோராலும் ஈஸ்வர் என்று அழைக்கப்படும் ப்ரகதீஸ்வரன். கார்த்திக்கின் பால்ய நண்பன் மற்றும் ஜனனியின் அண்ணன்.
டிடெக்டிவ் வேலை செய்து வருபவன். அரசாங்க வேலையெல்லாம் தனக்கு ஒத்து வராது என்று தனியாக ஒரு பெரிய டீமையே இந்தியா முழுவதும் வைத்திருப்பவன். அரசாங்க இயந்திரங்களே பல நேரங்களில் இவனிடம் உதவி கேட்கும் அளவுக்கு அவனது திறமை இருந்தது. சில சமயங்களில் உலகளாவிய ரீதியில் கூட அவனது துப்பறியும் திறமை வெளிப்பட்டிருக்கிறது. அதற்கான சில அவார்ட்களும் அவனது அறையை அலங்கரித்தன.
“அப்படி ரொம்ப முக்கியம் இல்லை ஈஸ்வர், ஆனாலும் முக்கியம் தான்” என்று பொடி வைத்துப் பேசிய கார்த்திக்கைத் தனது அறைக்கு அழைத்துச் சென்றான் ஈஸ்வர்.
என்ன விஷயம் என்று அவனே சொல்வான் என்று ஈஸ்வர் காத்திருக்க, இதற்கு இவ்வளவு கவலைப் படுவது தேவை தானா என்று கார்த்திக் யோசித்துக் கொண்டிருந்தான். வேறு வழியின்றி தான் வந்த விஷயத்தை சொல்ல ஆரம்பித்தான்.
“எல்லாம் நம்ம வீட்டு மான்ஸ்டர் பத்தி தான் ஈஸ்வர்”
“மான்ஸ்டர்… ஹேய் நீ மலரையா சொல்ற? அவளுக்கு மட்டும் இது தெரிஞ்சது நிஜமான மான்ஸ்டர நீ பார்ப்ப. அவளுக்கு என்ன பிரச்சினை? ஏதாவது லவ் மேட்டரா? பையன் சரியில்லையா? செக் பண்ணனுமா? ஆனால் அவ இரண்டு வருஷமாவது வேலைக்குப் போயிட்டு தான் லவ், கல்யாணம் எல்லாம் யோசிப்பேன்னு சபதமே செஞ்சிருக்காளே?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.
“உன்னை எல்லாம் யாருடா டிடெக்டிவ்னு ஏத்துக்கிட்டு வேலை கொடுக்கிறாங்க. நான் வாயைத் திறந்து ஒரேயொரு வார்த்தை சொல்றதுக்குள்ள இத்தனை கேள்வி, அதுவும் சம்பந்தம் இல்லாமல் கேட்டு வைக்கிற?”
“ஓ.. ஐயாம் சாரி! நீ மான்ஸ்டர்னு சொல்லவும் அப்படியே எனக்கு அருவி மாதிரி கொட்டுது. இதோ அடுத்த செகண்ட்ல இருந்து நீ விஷயத்தை சொல்லி முடிக்கிற வரை நான் வாயைத் திறக்கவே மாட்டேன்.”
“மலருக்கு xyz edu services ல Account sectionல ஒரு நல்ல பொஸிஷனுக்கு இன்டர்வியூ வந்திருக்கு.”
“வாவ்! கிரேட்!! இது நல்ல விஷயம் தானே. அவளோட காலிபருக்கு(calibre - திறமை) ஏத்த கம்பெனி. கண்டிப்பா வேலை கிடைச்சிடும். கரியர்ல நல்லா முன்னேறலாம். இதுல நான் என்ன பண்ணனும்? அவளுக்கு எதுவும் reference கேட்கிறாங்களா, பட் அதெல்லாம் இன்டர்வியூ முடிஞ்சு தானே பண்ணுவாங்க?”
“ம்ச்.. ஈஸ்வர்… என்னைக் கொஞ்சம் பேசவிடேன்.”
“ஸாரி… ஸாரி… கார்த்திக்… நீ சொல்லு. ஒரே ஒரு சந்தேகம் மட்டும் கேட்டுக்கிறேன். அப்புறம் வாயைத் திறக்கவே மாட்டேன். அவ தான் அக்கவுண்டஸ் தவிர இன்னொரு ஃபீல்ட்ல நிறைய சர்டிபிகேட் வாங்கி வச்சிருக்காளே, அதுல எதுவும் ட்ரை பண்ணலையா?”
“அதான் எனக்கும் சந்தேகமா இருக்கு. கேட்டா, ஒரு நேரம் அக்கவுண்ட்ஸ் செக்ஷன்ல தான் ஓபனிங் வந்ததுன்றா. இன்னொரு நேரம், அந்த சர்டிபிகேட் எல்லாம் எனக்கு நானே வச்சுகிட்ட சேலஞ்ச், அதுல வேலை எல்லாம் பார்க்க மாட்டேன், எதிக்ஸ் கிடையாதுன்னு பெரிய ரீலா சுத்தறா. பட், இப்போ நான் வந்த விஷயம் அது இல்லை.
அந்த கம்பெனி டெல்லில இருந்து இரண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் ஹெட் க்வாட்டர்ஸ மும்பைக்கு ஷிஃப்ட் பண்ணாங்க. அதுக்கு ப்ரஸ்ல ஒரு ரீஸன் சொன்னாங்க. அதுல தான் எனக்கு டவுட் இருக்கு. திடீர்னு நிறைய பெரிய தலைகள் அந்த கம்பெனிய விட்டு வெளியே போயிருக்காங்க, அதுவும் இவங்களோட பக்கா ஆப்போசிட் பார்ட்டிக்கு.”
“ஸேம் ப்ரோஃபைல்ல வேலை தேடும் போது அப்படித் தானே கிடைக்கும் கார்த்திக். இதெல்லாம் கார்ப்பரேட் வேர்ல்டுல சகஜம் தானே. அதை எப்படி தப்புன்னு சொல்ல முடியும்?”
“நீ சொல்றதும் சரிதான், ஈஸ்வர். ஆனால் எல்லாருமா அப்படியே போவாங்க? அவங்க போன அதே சமயம் ஒரு மேஜர் ட்ரான்சாக்ஷன், ஐ மீன் ஒரு பெரிய பிஸினஸ் இவங்களுக்கு கிடைச்சிருக்கு.
அண்ட் இப்போ நடக்கிற ப்ரஸ் மீட் எல்லாம் பூசி மெழுகுறாப்லயே இருக்கு. எஜூகேஷன் ஃபீல்ட்ல இப்படி நடக்கிறது சரியில்லை. இது மாதிரி இன்னும் நிறைய விஷயங்கள், இவ வேற ஆர்வக் கோளாறுல நம்ம கிட்ட சொல்லாமலே அவ திறமையை காட்டறேன்னு இறங்கிட்டா.. எனக்கு மலரை அங்கே அனுப்பறதுல கொஞ்சம் தயக்கம் இருக்கு. உன் தங்கச்சி வேற அவளோட பழைய எக்ஸ்பீரியன்ஸ்னு ஒரு பிட்டு போட்டு அம்மா அப்பாவையும் சேர்த்துக் குழப்பி விட்டா. இப்போ அப்பாவும் கொஞ்சம் யோசிக்கிறாங்க.”
“மாமாவே யோசிக்கிறாங்கிறாங்களா?”
“என்ன தான் நம்ம கிட்ட பவர் இருக்குன்னாலும் தெரியாத எதிரிய எப்படி ஹேண்டில் பண்ண முடியும்… அதான்.. அப்பாவோட கவலை. ”
“ம்ம்.. இன்னும் நீ முக்கியமான பாயிண்ட்டுக்கு வரலைன்னு நினைக்கிறேன். சீக்கிரம் சொல்லித் தொலை… “
“அது.. வந்து… ஈஸ்வர்.. எப்படி சொல்றது… அங்க பொண்ணுங்க சேஃப்டி ஒரு கொஸ்டின் மார்க்கா இருக்குன்னு ஒரு ரூமர் இருக்கு. நிறைய அட்ஜெஸ்ட்…”
“போதும் போதும் புரியுது.. பாஸ்டர்ட்ஸ்“
“இதெல்லாம் டெல்லில இருந்த ரூமர்ஸ் தான். இப்போ க்ளியர்னும் சொல்றாங்க. அதைத் தான் நாம செக் பண்ணனும்.”
கார்த்திக் சொன்னதைக் கேட்டுக் கொண்டே கையில் இருந்த டிவி ரிமோட்டை இயக்கிக் கொண்டிருந்த ஈஸ்வர் ஸ்குரோல் - ல் ஓடிக் கொண்டிருந்த செய்தியைக் கண்டு சிலையானான். அவனைப் பின்பற்றிய கார்த்திக்கும் அதே நிலைதான்.
“பிரபல ABC Edu services கம்பெனியின் சிஓஓ திரு.கமல் சக்சேனா காலமானார். இதற்கு முன் அவர் xyz edu services pvt Ltd ல் ceo வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் தனது வேலையை மாற்றம் செய்துள்ளார்.”
இதைக் கண்டு அவசரமாக விரிவான செய்திகளுக்குச் சேனலைத் திருப்பினான் ஈஸ்வர்.
“கமல் சக்சேனாவின் வயது 45. மனைவியும் 18, 16 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். நவிமும்பையில் உள்ள அவரது அப்பார்ட்மெண்ட் வளாகத்தின் ots ல் அவரது உடல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அவரது சட்டைப் பையில் மன அழுத்தம் காரணமாக உயிரை விட முடிவு செய்து விட்டேன். இதற்கு வேறு யாரும் காரணம் கிடையாது என்று ஒரு சிறிய காகிதம் கிடைத்துள்ளது.
அதில் இருப்பது அவரது கையெழுத்து தானா? A ப்ளாக் வாசியான அவர் C ப்ளாக்
otsல் உயிரை விட்டதன் காரணம் என்ன? இருபது மாடி கட்டிடத்தில் ots திறந்திருந்த காரணம் என்ன? அது எப்படி கமலுக்குத் தெரிந்தது? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லாததால் இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீஸூக்குத் தகவல் சொன்ன அதே நேரத்தில் ஒவ்வொரு சேனலும் தங்கள் துப்பறியும் வேலையைத் தொடங்கினர்.
பல சேனல்கள் அவரது வாழ்க்கை வரலாற்றை, மனைவியை, மகள்களை வைத்து தங்கள் டிஆர்பியை உடனடியாக ஏற்ற போட்டி போட்டனர். அனைவரும் சொன்ன பொதுவான விஷயம், அலுவலகத்தில் பாரபட்சம் இன்றி மிகவும் கலகலப்பாக பழகும் மனிதர், குடும்பத்தில் பாசம் மிக்கவர் என்பதே. அப்படிப்பட்டவருக்கு மன அழுத்தம் வரக் காரணம் என்ன என்று பி.எச்டி. வாங்கும் அளவுக்கு ஆளாளுக்கு ஆராய்ச்சியில் இறங்கி விட்டார்கள்.
“இவங்க சொல்ற இரண்டு மாசம் முன்னாடி தான் நான் xyzல இவரை ஒரு எக்சாமுக்காகப் போய் பார்த்தேன் கார்த்திக். நைஸ் ஜென்டில்மேன், வெரி ப்ரோஃபஷனல். கம்பெனிய பத்தி நிறைய பேசினார். அவர் எப்படி திடீர்னு கம்பெனி மாறி….”
ஈஸ்வரும் கார்த்திக்கும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தனர்.
சில சேனல்கள் ABC மற்றும் xyz கம்பெனிகளின் வரலாற்றை ஆராய முற்பட்டனர். இங்கே நம் நாயகியின் நலம் விரும்பிகளும் அதையே செய்ய ஆரம்பிக்க திட்டம் போட்டு காய் நகர்த்தும் “அவன்” அவ்வளவு எளிதில் இவர்களின் வட்டத்தில் சிக்குவானா?? அவனது நோக்கம் தான் என்ன? மலர்விழியின் வேலைக்கான கனவுகள் நனவாகுமா??
***************
ABC education services அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு 1980களில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கல்வி ஆலோசனை நிறுவனம். அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுகள் பொதுவாக்கப்பட்ட போது இந்த நிறுவனம் அதனைக் கைப்பற்றியது. தனி ஒருவனாக உலகின் மூலை முடுக்கெல்லாம் தனது சாம்ராஜ்யத்தை விரிவாக்கியது.
கல்வியில் கிளைகள் அதிகமாக, தேர்வுகளும் அதிகமானது. உலகம் கல்வி விஷயத்தில் மிகவும் சுருங்கி யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று படிக்கலாம் என்றானது. அதற்கான நுழைவுத் தேர்வுகள் மொத்தமும் ABC வசம் தான். போட்டிக்குத் தான் ஆளே இல்லையே.
கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் ஆகிய டெக்னாலஜி வந்த பிறகு கம்பெனியின் வேலை இன்னும் சுலபமானது. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இருந்த அவர்களது சாம்ராஜ்யத்தை ஆட்டம் காண வைப்பதற்கென்றே xyz என்ற போட்டி கம்பெனி ஒன்று சிறிய அளவில் இங்கிலாந்தில் உருவானது.
அதனைத் தொடங்கியவர்கள் மிகுந்த நேர்மையாளர்களாக இருந்ததால் முன்னேற்றம் என்பதும் சிறிய அளவில் தான் இருந்தது. அவர்களது வாரிசுகள் பொறுப்பேற்றபின் ABC கம்பெனியை யாரிந்த xyz என்று திரும்பிப் பார்க்க வைத்தார்கள்.
ABCன் சரிவு மற்றும் xyzன் முழு விஸ்வரூபம் என்று சொன்னால் உலகளாவிய ஒரு நுழைவுத் தேர்வும், அமெரிக்காவின் மிகப்பெரிய இரண்டு தேர்வுகளும் கை மாறியது தான். ABCக்கு இது மரண அடியாக அமைய xyz அசாதாரணமாக வெற்றியை ருசிக்க ஆரம்பித்தது.
அன்றிலிருந்து இன்றுவரை பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் தேர்வுகளை நடத்தி வருகின்றனர். அவர்களது வெற்றிக்குக் காரணம் என்று அவர்கள் சொல்லும் முதல் காரணமே அங்கு இருக்கும் டேட்டா செக்யூரிட்டி என்று தான். அத்துணை எளிதாக அதில் யாரும் கை வைத்து விட முடியாது.
அதற்கான கெடுபிடிகள் அங்கே எல்லாருக்கும் உண்டு. சுண்டுவிரலைத் தேவையில்லாமல் அசைத்தாலே ஏன் என்று கேட்பார்கள். அப்படி இருக்கையில் கம்பனி சர்வரில் கை வைத்து விட முடியுமா என்ன? ஆனால் சர்வரின் முழு அதிகாரம் உள்ளவனால் எதையும் செய்ய முடியுமே!!
**********
“xyz edu services pvt Ltd” என்ற எழுத்துக்கள் அதற்கே உரிய பிரத்யேக நீல நிற நியான் ஒளியில் மின்னிக் கொண்டிருந்தன. எல்லாமே ஆன்லைன் என்றாகிவிட்ட இந்தக் காலத்தில் பரிட்சைகள் அனைத்தும் ஆன்லைன் ஆனதும் ஆண்டுக்கு ஒரு முறை அதை வைத்து அரசியல் செய்வதும் நம் நாட்டில் வழக்கமாகி விட்டது.
ஆனால் இப்போது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட xyz edu services பன்னாட்டுத் தேர்வுகளை மிகுந்த பாதுகாப்புடன் எந்த குழப்பமோ பிரச்சினைகளோ இல்லாமல் பல வருடங்களாக நடத்திவருகிறது. ஒரு வேளை அதில் இருக்கும் உள்குத்துகளை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்களோ என்னவோ? கடவுளுக்கே வெளிச்சம். ஆனால் பொதுவெளியில் கம்பெனியின் பெயரில் ஒரு கரும்புள்ளி கூட இதுவரையில் வரவில்லை என்பது நிஜம்.
பத்து வருடங்கள் முன்பு வரை அமெரிக்காவில் மட்டுமே தங்கள் ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவாக்கம் செய்தனர். இந்தியா அவர்களது பிராந்திய தலைமையகமாகிப் போனது.
இரவு பத்து மணி தாண்டிச் சென்றும் தீர்வு காண முடியாமல் திணறிக் கொண்டிருந்தது அந்தக் குழு. காரணம் நம் கார்த்திக் யதார்த்தமாகக் கூறியது போல ஒரு விஷயம் அங்கே நடந்தேறி இருந்தது.
பிரச்சினை நடந்திருக்கும் இடம் கம்பெனியின் இந்தியாவில் இருக்கும் பிராந்திய தலைமை அலுவலகத்தில். அதை மற்ற துறைகளுக்குத் தெரியாமல் மறைத்து கம்பெனியின் தரமும் பெயரும் பொதுவெளியில் மாறிவிடாமல் எப்படிக் காப்பாற்றுவது என்பதற்காகத் தான் இந்த நீளமான ஆலோசனைக் கூட்டம்.
எல்லாவற்றையும் விட, இந்தியாவில் உள்ள அலுவலகம் ஆசியாவில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கும் தலைமையகம் என்பதால் அங்கெல்லாம் இந்தியாவின் மானம் கப்பல் ஏறி விடாமல் காப்பாற்றுவதே முதல் குறிக்கோளாக இருந்தது. சீனாவும், ஆஸ்திரேலியாவும் ஏதாவது நடந்து தலைமைப் பதவியை எப்படி தட்டிப் பறிப்பது என்று கழுகுப் பார்வை பார்த்து வரும் வேளையில் நடந்தேறி இருக்கும் இந்த விஷயம் இந்திய தலைமைக்குத் தலைவலியை வரவழைத்திருந்தது.
மீட்டிங்கில் நடுவில் வந்து சேர்ந்த கமல் சக்சேனாவின் மரணச் செய்தி அங்கே இருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எதைப் பற்றி விவாதித்தோம் என்பதை மறந்து போய் அனைவரும் கமல் சக்சேனாவின் வீட்டுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.
**********
“குட் மார்னிங் ரஞ்சன்! பத்து நிமிஷம் பேசலாமா?” என்றபடி உள்ளே வந்த அவனது பிஏ ஜிக்யாசாவிற்கு பதில் குட்மார்னிங் சொன்ன ரஞ்சன் கோஸ்வாமி xyz edu servicesன் தலைமை அதிகாரி(operations head).
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் ஹீரோக்களின் கலவையாக இருந்த ரஞ்சன் கோஸ்வாமியின் வயது முப்பது இருக்கலாம். இந்தச் சிறு வயதிலேயே அத்துணை பெரிய பதவியில் அமர்ந்தது அவனது கடுமையான உழைப்பா அதிர்ஷ்டமா என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
கமல் சக்சேனா ராஜினாமா செய்த பிறகு அந்தப் பதவியே இந்தியாவில் தேவையில்லை என்று உலகளாவிய தலைமை முடிவு செய்தது. அதனால் தலைமை அதிகாரியாக இருந்த ரஞ்சன் கோஸ்வாமியின் பொறுப்பின் கீழ் கம்பெனி வந்தது.
“இந்த வீக் ஸ்கெட்யூல் பண்ணி இருக்க இன்டர்வியூ லிஸ்ட் மெயில் பண்ணி இருக்கேன். நீங்க இந்த ப்ரோஃபைல்ஸ் எல்லாம் ஒரு தடவை செக் பண்ணிட்டா பெட்டரா இருக்கும்.”
இது ரஞ்சனின் கீழ் கம்பெனி வந்ததும் ஆரம்பித்த பழக்கங்களில் ஒன்று. அதுவரையில் அந்தந்த துறை மேலதிகாரிகளோடு மனிதவள மேம்பாட்டு துறை மட்டுமே இணைந்து செயல்படும். வரிசையாக பயோ டேட்டாக்களை வாசித்துக் கொண்டு வந்த ரஞ்சன் ஓரிடத்தில் விழி விரித்தான்.
“மிஸ்.மலர்விழி ராஜ்மோகன், வாவ் வாட் எ ப்ரோஃபைல். நம்ம க்வாலிக்டி டிபார்ட்மெண்ட்டுக்கு தேவையான சர்டிபிகேட்ஸ் எல்லாம் இந்த பொண்ணு கிட்ட இருக்கே. அப்புறம் ஏன் அக்கவுண்ட்ஸ்ல அப்ளை பண்ணி இருக்காங்க”
“நம்ம கிட்ட இப்போ க்வாலிக்டி டிபார்ட்மெண்ட் ஓபனிங் எதுவும் இல்லை ரஞ்சன்”
“ஸோ வாட்? ஒரு பொஸிஷன் க்ரியேட் பண்ணுங்க. ப்ரோஃபைல் டீடெயில்ஸ் நான் கொடுக்கறேன். அந்தப் பொண்ணு இன்டர்வியூ வரும் போது கன்வின்ஸ் பண்ணி இந்த ப்ரோஃபைல் அக்சப்ட் பண்ண வைக்கணும். இவ்வளவு காம்ப்ளிகேட்டட் சர்டிபிகேட் எல்லாம் வாங்கி வச்சிருக்க பொண்ணு கண்டிப்பா ஒத்துக்கணும்.”
“பாஸ்… அப்படி இருந்தால் டெக்னிக்கல் டிக்ரீ தானே படிச்சிருக்கும். இந்தப் பொண்ணு ஏன் அக்கவுண்ட்ஸ்ல கஷ்டமான டிக்ரீ வச்சிருக்கு?”
“யெஸ்.. யெஸ்… அதையும் யோசிக்கத் தான் செய்யணும். ஒன்னு பண்ணலாம். இப்போதைக்கு அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்ல செலக்ட் பண்ணுங்க. ஐ வில் டேக் கேர் லேட்டர்”
“ஓகே பாஸ்! அஸ் யூ விஷ் ” என்று சிரித்தபடி ஜிக்யாசா வெளியேற, ரஞ்சன் மலர்விழியின் ப்ரோஃபைலில் இருந்த அவளது புகைப்படத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அந்தப் புன்னகையில் இருந்தது என்னவோ??