• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் -17

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
496
41
43
india
அத்தியாயம் -17
‘ஆசியாவை வென்றெடுக்க வேண்டும். அப்போதுதான் உலகின் கடைசிப் பகுதியாக இருக்கும் இந்தியாவைக் கைப்பற்ற முடியும். இந்தியாவை வெல்வது மன்னர் பிலிப்பின் கனவு. இதனை அவரது மகனான அலெக்சாண்டர் செய்து முடித்தே ஆக வேண்டும். அப்போதுதான் தன் தந்தையின் உண்மையான விருப்பத்தை நிறைவேற்றிய தனயனாக இருக்க முடியும்.
ஆசியாவிற்குள் நுழைய வேண்டும் என்றால் பாரசீகத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். பாரசீகம் மிகப் பெரிய நாடு. படைபலம் மிக்கது. அதனை வெல்வதற்கு அதிகச் சக்தியைச் செலவழிக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே வெற்றி வாகை சூட முடியும்.
இது தனது முதல் போர். இதுவரை செய்த போர்கள் அனைத்தும் போர் என்று சொல்ல முடியாது. தந்தை ஆக்ரமித்திருந்த பகுதிகளை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதற்காக எடுத்த அதிரடி நடவடிக்கை. இப்போது நடத்தப் போவதுதான் உண்மையான போர். தனது முதல் போர்.
இந்தப் போரில் தமது படை காண்பிக்கும் அதிரடி சாகசங்களைப் பார்த்து பாரசீகம் மட்டுமல்லாமல் ஆசிய நாடுகள் அனைத்துமே தொடை நடுங்க வேண்டும்.’
இப்படித்தான் அலெக்சாண்டரின் எண்ணங்கள் இருந்தது..
மாசிடோனியப் படையினர் முற்றிலும் நம்பிக்கை வைத்திருப்பது குதிரைப் படை மீதுதான். அவர்களின் குதிரைப் படை மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்திருந்தது.
மன்னர் பிலிப் பதவிக்கு வந்தபோது குதிரைப் படையின் எண்ணிக்கை அறுநூறு மட்டுமே. அதனை மூவாயிரம் அளவிற்கு உயர்த்தி அமைத்தார். அவரது ஒவ்வொரு போரிலும் குதிரைப் படைகளை முன்னிறுத்தியே அற்புதமான வெற்றிகளைத் தொடர்ந்து பெற்று வந்தார்.
ஒவ்வொரு போரின் போதும் குதிரைப் படையின் எண்ணிக்கை குறைந்த போதிலும், நாடு திரும்பியதும் முதல் பணியாகக் குதிரைப் படையின் பலத்தைப் பெருக்குவதாகத்தான் இருக்கும். ஏனென்றால் குதிரைப் படையின் பலம் பற்றி அவர் மிகத் தெளிவாகவே அறிந்து வைத்திருந்தார்.
மாசிடோனியர்களை மட்டுமே குதிரைப் படை வீரர்களாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் ஒரு போதும் நினைத்தது இல்லை. அருகிலுள்ள தெஸ்ஸாலியா நாட்டு வீரர்களையும், இதர சில கிரேக்க தேசத்தில் அடங்கி உள்ள நாட்டு வீரர்களையும் தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்சிகள் அளிப்பதிலும் கவனம் கொண்டார் மன்னர் பிலிப்.
இவ்வாறு பயிற்சி பெற்ற வீரர்களின் தகுதிக்கேற்றவாறு அவர்களுக்கு உலோகத்தாலான தலை மற்றும் மார்புக் கவசங்கள் வழங்கப்பட்டன. வாள், ஈட்டி, பெரிய கத்தி போன்றவைகளும் அவர்களுக்கு அளிக்கப்பட்டன.
மேலும் அது கோடாரி போன்று வடிவமைக்கப்பட்ட ஒரு புதுவகையான ஈட்டியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வீசிச் சுழற்றினால் எதிரியின் தலை பிசிறில்லாமல் வெட்டப்பட்டு தரையில் சுழலும்.
அலெக்சாண்டரும் தந்தையின் இதே வழிமுறைகளைப் பின்பற்றுவதில் ஆர்வம் உடையவராக இருந்தான். தனது ஒவ்வொரு போரின் போதும் முன்னணியில் செல்ல தெஸ்ஸாலிய குதிரைப் படையைத்தான் அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானித்து, அப்படியே செய்தும் வந்தான்.
இதற்குப் பிறகு அதிக முக்கியத்துவம் பெற்றது காலாட்படை. இவர்களுக்கும் பிரத்யேகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தலை மற்றும் உடற்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப் பட்டது. உடற்கவசம் அணிவதில் சிரமம் இருக்கக் கூடாது என்பதற்காக கோடை காலங்களிலும் அணிந்து கொள்வதற்கு ஏற்ற மாதிரி அவை வடிவமைக்கப்பட்டன.
தந்தையால் கைப்பற்ற முடியாமல் போன பாரசீகம், ஆசியா, இந்தியா அனைத்தையும் ஒரு நீண்ட நெடிய போரின் மூலம் கைப்பற்றத் துணிந்தால், அதற்கான ஆயத்தங்களும் பலமாக இருக்க வேண்டாமா? அவை உடனே தொடங்கப்பட்டன.
அவை கூடியது.
“பாரசீகத்தின் மீது போர் தொடங்கத் தயாராகி விட்டது மாசிடோனியா. என்று தொடங்கலாம்?” என்பதே அலெக்ஸாண்டரின் கேள்வி.
“போர் எப்போது தொடங்கலாம் என்பதை வழக்கமாக அரசவை ஜோதிடர்கள்தான் தீர்மானிப்பது வழக்கம். இதனைத்தான் தங்கள் தந்தை பிலிப் பின்பற்றி வந்தார். அதே முறையை நாமும் பின்பற்றுவது நல்லது என்று தோன்றுகிறது” என்றார் ஒரு மூத்த அமைச்சர்.
பொதுவாக ஜோதிடர்கள் மீது அலெக்சாண்டருக்கும் நம்பிக்கை உண்டு. அப்போது கிரேக்கத்தில் ‘குறி’ சொல்கிற பழக்கம் நிறைய இருந்தது. அதனை அந்நாட்டு மக்கள் மிகுதியாக நம்பி வந்தனர். அலெக்சாண்டருக்கும் அதில் ஈடுபாடு இருந்தது. அதன்படியே ஒரு நாள் குறிக்கப்பட்டது.
போருக்குப் புறப்படும் முன் தெய்வ வழிபாடு முக்கியம். இதில் அலெக்சாண்டருக்கு மாற்றுக் கருத்தே கிடையாது.
அப்படியே தனது அமைச்சர்கள், தளபதிகள் புடைசூழ, தனது அன்புக் குதிரை பியூசெபாலஸ் மீது கம்பீரமாக ஏறி அமர்ந்த அலெக்சாண்டர் நேராக ‘டெல்பி’ ஆலயத்திற்குச் சென்றான். உள்ளே நுழையும் முன் தலை கவிழ்ந்து வணங்கிய அவர், தீபமேற்றி, சாம்பிராணி புகை போட்டு கண்மூடிப் பிரார்த்தனை செய்தான்.
அப்புறம் மாசிடோனியர்கள் மட்டுமல்லாமல் கிரேக்கர்கள் அனைவருமே மதிக்கும், போற்றி வணங்கும் முக்கியத் தெய்வமான ‘அப்பல்லோ’ ஆலயத்திற்குச் சென்று மனமுருகிப் பிரார்த்தித்தான்.
“இனிமேல் நாம் வெற்றியை நோக்கிப் பயணம் செய்யப் போகிறோம்” என்றான் உணர்ச்சிப் பெருக்குடன்.
‘மிகப் பெரிய படைகளுடன் போருக்குச் சென்று விட்டால் தனது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வந்தால் என்ன செய்வது?’ என்ற யோசனை வந்தது. பிலிப் காலத்தில் இருந்தே மிகவும் நம்பிக்கையான ஆன்டிபேட்டர் என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்தான்.
“நான் ஆசியாவைக் கைப்பற்ற வெறி கொண்டு போகிறேன். அந்த நேரத்தில் நமது மாசிடோனியா மீது எதிரிகள் தங்கள் பலத்தைப் பிரயோகிக்க நினைத்தால் அதனை அடக்க வேண்டிய பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அது மட்டுமல்லாமல் நாம் ஏற்கனவே வெற்றி கொண்ட பிரதேசங்களில் உள்ளவர்கள் இதுதான் தக்க சமயம் என்று ஏதாவது கலகங்களை உருவாக்கினால் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையையும் உங்களிடம் தருகிறேன். இது போன்ற கடினப் பொறுப்பை ஏற்க சரியான நபர் நீங்கள்தான் என்பது என் முடிவு. இதற்காகத் தங்களிடம் பன்னிரெண்டாயிரம் வீரர்கள், ஆயிரத்து ஐநூறு குதிரைப்படை வீரர்களையும் ஒப்படைக்கிறேன். பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்” என்றான் அலெக்சாண்டர்.
மத்தியதரைக் கடலில் இருந்து பாரதத்தின் எல்லை வரையிலும் பரவியிருந்த ஒரு மாபெரும் பேரரசு பாரசீகம். இப்படிப்பட்ட விரிந்து பரந்த தேசத்தை இருநூறு ஆண்டுகளாகப் பாரசீகர்கள் ஆண்டு வந்தது மிகப் பெரிய சாதனையே.
இவ்வளவு பெரிய தேசமாக இருந்த போதிலும் அதிக வல்லமை படைத்ததாக இல்லை என்ற குறை உண்டு. ஆனால் செல்வச் செழிப்பில் உயர்ந்த நிலையில் இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.
பாரசீக மன்னன் மூன்றாம் டேரியஸ் சற்று படைபலம் மிக்கவன் என்ற தகவல் தெரியும். அவனைப் போரில் வெல்வதற்கு மட்டுமே சில நாட்கள் அல்லது மாதங்கள் ஆகலாம் என்பது அலெக்சாண்டரின் எண்ணம். ஆனால் டேரியஸ் உடனான போர் முடிந்து விட்டால் அதன் அக்கம் பக்கத்தில் உள்ள நாடுகளைப் பிடிக்குள் கொண்டு வருவதில் அத்தனை சிரமம் இருக்காது.
பாரசீகப் போருக்குத் தயாரானது மாசிடோனியப் படை. பாரசீகத்தின் மீதான படையெடுப்பு நடந்தது கி.மு. 334ஆம் ஆண்டில்..
சுமார் நாற்பதாயிரம் வீரர்கள் மற்றும் ஆராயிரம் குதிரைப் படை ஆயத்த நிலையில் காணப்பட்டது. மேலும் கப்பல்களில் பல ஆயிரம் படை வீரர்களும் இருந்தனர்.
பாரசீகப் படையின் பலத்தோடு ஒப்பிடும்போது இது மிகக் குறைவே. அதாவது மாசிடோனியப் படைகளை விடவும் பல மடங்கு அதிகமான பலம் வாய்ந்ததாக இருந்தது பாரசீகப்படை. அலெக்ஸாண்டரின் தலைமையில், உலகையே வென்றெடுக்கும் புதிய பரவசத்தோடு மாசிடோனியப் படைகள் புறப்பட்டன.
வாள், ஈட்டி, கேடயம் என்று பல்வேறு ஆயுதங்களுடன் புழுதி பறக்க, மக்களின் வாழ்த்துகளோடும், பிரார்த்தனையோடும் படைகள் கிளம்பிச் சென்றன.
கிரேக்கத்தில் அடங்கியுள்ள பல நாடுகளைக் கடந்து பயணம் தொடர்ந்தது. ஹெல்லஸ்பாண்ட் நதியைக் கடந்து பாரசீகத்திற்குள் வீராவேசப் பாய்ச்சலோடு மாசிடோனியப் படைகள் வந்து கொண்டிருக்கும் விவரம் உடனடியாக அந்நாட்டு அரசர் டேரியஸக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்டதும் கோபத்தில் அவர் மீசை துடித்தது. “யாரிடம் வந்து விளையாட நினைக்கிறான் அலெக்சாண்டர். நமது பலம் தெரியாமல் வகையாக மாட்டிக் கொள்ள வந்து கொண்டிருக்கிறான். அவன் படைகள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். அலெக்சாண்டரின் தலை நமது பாரசீக மண்ணில் உருள வேண்டும். அனைவரும் தயாராகுங்கள்” வீராவேசமாக முழங்கினார் டேரியஸ்.
அவ்வளவுதான். அவனது படைகள் வெகுண்டெழுந்து புறப்பட்டன. கிரேனிகஸ் என்னும் ஆற்றின் அக்கரையில் வந்து குவிந்தன பாரசீகப் படைகள். மாசிடோனியப் படைகளைத் துவம்சம் செய்ய இதுவே சரியான இடம் என்று கணித்திருந்தார் டேரியஸ்.
அதாவது ஹெல்லஸ்பாண்ட் நதிக்கு அடுத்துள்ளது இந்த கிரேனிகஸ் ஆறு. இதனைக் கடந்து செல்வது சற்று ஆபத்தானது. இது சற்றுக் கடினமான ஆறு. எங்கே பள்ளம் இருக்கிறது என்பது தெரியாது, எங்கே தண்ணீர் சுழித்து உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும் என்பதும் தெரியாது, தண்ணீரின் வேகம் எந்த இடத்தில் எவ்வாறு இருக்கும் என்பதும் தெரியாது...
இப்படிக் கடினமான ஒரு ஆற்றைக் கடந்து சென்றால் மட்டுமே அவர்களால் டேரியஸ் படையை எதிர்கொண்டு போரிட முடியும்.
அனைவருக்கும் ஒரு சிறு தயக்கம். ஆனால் அலெக்சாண்டரோ எந்த இடத்தில் கடப்பது ஆபத்தின்றி இருக்கும் என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.
இதனைப் புரிந்து கொண்ட தளபதி பார்மீனியோ, “ஆபத்து நிறைந்த இந்த ஆற்றை இரவில் கடப்பது அத்தனை உசிதமானதல்ல. மேலும் இரவு நேரத்தில் ஆற்றின் வேகம் சற்று அதிகமாகவும் இருக்கக் கூடும். எனவே இரவு முழுவதும் இங்கேயே ஓய்வெடுத்து விட்டு நாளைக் காலையில் ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்வதே சரியானது என்று நினைக்கிறேன். நமது வீரர்களும் அவ்வாறே நினைக்கின்றனர்” என்று யோசனை தெரிவித்தார்.
ஆனால் இந்த யோசனையைக் கேட்டதும் அலெக்சாண்டரின் முகம் சுருங்கிப் போயிற்று.
“அதாவது நமது வெற்றியை ஒரு நாள் இரவு முழுவதும் தள்ளிப் போட வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்கிறீர்கள். அப்படித்தானே?”
“அப்படிச் சொல்லவில்லை....” என்று இழுத்தார் தளபதி.
“வேறு என்ன சொல்கிறீர்கள்? நமது படை வீரர்கள் இந்த ஆற்றைக் கடக்கப் பயப்படுகிறார்கள் என்கிறீர்களா?” என்று எரிச்சலோடு மீண்டும் கேட்டான்.
இப்போது தளபதி பார்மீனியோ பதில் சொல்லவில்லை. அமைதியாகி விட்டார்.
“பாரசீகப் படை பலத்தைக் கண்டே பயப்படாத நமது வீரர்களா இந்த ஆற்றைக் கண்டு அச்சப்படப் போகிறார்கள்! நாம் வெற்றியைத் தொடுவதற்காகவே இந்த உலகில் பிறந்திருப்பவர்கள். வரிசையாகப் பல நாடுகளை வென்றெடுப்பதற்காகவே அவதரித்திருப்பவர்கள். தங்கம், வெள்ளி, மாணிக்கம், மரகதம், வைரம், வைடூரியம் என்று பல நாடுகளில் இருந்தும் செல்வங்களைச் சேகரித்துக் கொண்டு வருவதற்காகவே ஜனித்திருப்பவர்கள். எனவே நினைவில் கொள்ளுங்கள் என் அருமை வீரர்களே! நாம் இப்போதே, இந்த இரவே இந்த ஆற்றைக் கடக்கப் போகிறோம். என் மீது முழுநம்பிக்கையை வையுங்கள். அச்சத்தைத் தூர எறிந்து விட்டு என்னைப் பின்தொடருங்கள். வெற்றியைத் தள்ளிப் போடுவது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது” என்றவாறே தனது பியூசெபாலஸ் குதிரையில் அமர்ந்தவாறு ஆற்றிற்குள் வேகமாக இறங்கினான் அலெக்சாண்டர்.
இந்தப் படையினர் ஆற்றைக் கடக்கிறபோது, ஒரு சுனாமியை விடவும் அதிக வேகத்தில் தண்ணீர் மேலே எழும்பியதாகக் கூறப்படுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் அத்தனை படையும் இவ்வாறு ஆற்றைக் கடந்தன.
அக்கரையில் இதற்காகவே காத்திருந்த டேரியஸின் படைகள் மாசிடோனியப் படைகள் ஆற்றைக் கடக்க முயற்சிப்பதை சில அசைவுகளை வைத்து உணர்ந்து கொண்டன. இருளில் அவர்கள் கடக்கும் இடத்தைக் குறிப்பாக உணர முடியவில்லை என்றாலும், ஓரளவுக்கு ஊகித்தவாறு அந்தத் திசையை நோக்கி அம்புகளும் ஈட்டிகளும் எறியப்பட்டன.
இது போன்ற ஒரு தாக்குதலை அலெக்சாண்டரும் உணர்ந்துதான் இருந்தான். இதனால் பாரசீகப் படையினரின் தாக்குதல், மாசிடோனியப் படையினரின் முயற்சிக்குத் தடையாக இருக்க முடியாமல் போயிற்று.
எதிரெதிரே படைகள். போருக்குத் தயாராகி விட்ட சூழல். பாரசீகப் படைகளைக் கண்ட மாசிடோனிய வீரர்கள் ஆரம்பத்தில் சற்று மிரண்டுதான் போயினர். இவர்களைவிடப் பல மடங்கு பெரியதாகத் தோன்றிய காட்சி மிரட்டியது உண்மைதான்.
“வீரர்களே! எண்ணிக்கையை மட்டும் பார்க்காதீர்கள். அவர்களின் வலிமை என்ன, அவர்களின் போர்ப் பயிற்சி என்ன என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நமது அறிவுக்கும், வலிமைக்கும் முன்னால் அவர்கள் தூசுக்குச் சமானம்” என்று உணர்ச்சியுடன் வீரவசனம் பேசி தனது வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான் அலெக்சாண்டர்.
தாக்குதல் தொடங்கியது. தாக்குதல் என்றால் மரணஅடி. ஒவ்வொரு மாசிடோனிய வீரனும், பத்து பாரசீக வீரர்களை சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பதை அந்தப் போர்க்களம் நிரூபித்தது. ஒரு வாள் வீச்சில் இரண்டு பாரசீக வீரனின் தலைகள் நிலத்தில் விழுந்தன.
அசுரத் தாக்குதலில் பாரசீகப் படைகள் கலங்கித்தான் போய்விட்டன. அடியின் வலியிலிருந்து வெளியே வருவதற்குள் அடுத்த அடி.
தாக்குப் பிடிக்க முடியவில்லை எதிரிகளால். மிரண்டு போய்விட்டனர்.
அதிலும் அலெக்சாண்டர் தனது குதிரையில் இருந்து மளமளவென்று ஈட்டிகளை வரிசையாக விட்டெறிந்து பாரசீகப் படைகளை அழித்துக் கொண்டிருந்தான்.
இப்படியும் ஒருவரால் போரிட முடியுமா?
இவ்வாறு சுழன்று சுழன்று பயங்கரத் தாக்குதலில் ஈடுபட்டு பாரசீக மண்ணை சிவப்பாக்கிக் கொண்டிருந்த வீரன் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அந்நாட்டு வீரன் ஸ்பித்ரிடேட்ஸ் என்பவனுக்குள் தோன்றியது.
மெல்ல மறைந்து நின்று பார்த்தான்.
சந்தேகமே இல்லை, அது மாவீரன் அலெக்சாண்டர்!
அலெக்சாண்டரின் கவனம் முழுவதும் சண்டையில். எதிரிகளின் தலைகளை உருளச் செய்வதில் மட்டுமே கவனமாக இருந்ததைப் புரிந்து கொண்டான் அந்தப் பாரசீக நாட்டு வீரன். இவன் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்ததை அலெக்ஸாண்டர் கவனிக்கவில்லை.
இதுதான் தருணம். இதுவே தக்க தருணம். போர்க்களத்தில் சாதாரண வீரனைக் கொல்வதைக் காட்டிலும் எதிரி நாட்டு மன்னரையே கொல்வது என்பது எத்தனை மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
‘இனி மேலும் தாமதிக்காதே. கையில் இருக்கும் ஈட்டியை அலெக்சாண்டரின் கழுத்தை நோக்கி விட்டெறி’ என்று தனக்குத் தானே கட்டளையிட்டுக் கொண்ட ஸ்பித்ரிடேட்ஸ், கணமும் தாமதிக்காமல் அதனைச் செயல்படுத்தினான்.
அலெக்சாண்டரின் அருகிலிருந்து போரிட்டுக் கொண்டிருந்த வீரன் ஒருவனின் தலை, திடீரென்று துண்டாகிக் கீழே விழுந்தது.
சப்தம் கேட்டு அலெக்சாண்டர் திரும்பிப் பார்த்தான். தனது வீரன் இரத்த வெள்ளத்தில்!
இந்தச் சம்பவத்தை மாசிடோனியத் தளபதிகளில் ஒருவனான கிளைட்டஸ் என்பவனும் பார்த்தான். இதற்குக் காரணமானவன் யாரென்று அவன் நோட்டம் விடுகையில், குறி தப்பிய ஏமாற்றத்தில் அங்கிருந்து மெல்ல நழுவத் தொடங்கிய ஸ்பித்ரிடேட்ஸ் கண்களில் விழுந்தான்.
அடுத்த கணம், அந்தத் தளபதியின் ஈட்டி, பாய்ந்தது. ஸ்பித்ரிடேட்ஸின் தலை நிலத்தில் வீழ்ந்தது.
மூர்க்கத்தனமான, முரட்டுத்தனமான இந்தப் போரில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாரசீகர்கள் தலைகள் தனியாகவும், உடல்கள் தனியாகவும் ஆங்காங்கே சிதறிக் கிடந்த கோரமான காட்சி காணப்பட்டது.
மாசிடோனியாவின் சுமார் முன்னூறு வீரர்கள் உயிரை இழந்து விட்டிருந்தனர்.
கிட்டத்தட்ட மாசிடோனியப் படைகள் சுற்றி வளைத்ததில் ஆயிரக்கணக்கான பாரசீகப் படைகள் சிக்கிக் கொண்டன. தப்பிக்க வழியே இல்லை. சரணாகதிதான்.
விரைவில், பாரசீக மன்னர் டேரியஸ், தோல்வியின் விளிம்பில் நிற்பதை உடனடியாகப் புரிந்து கொண்டார். ‘இனிமேல் எதிர்த்துப் போர் செய்தாலும் பலன் கிடைக்கப் போவதில்லை. எதிரிகளிடம் சிக்கினால் உயிர் போவது உறுதி. பேசாமல் தப்பித்துச் செல்வது மட்டுமே இ
ப்போதைக்கு ஒரே வழி’ என்று நினைத்த டேரியஸ் அப்படியே தப்பி நழுவினார்.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -17
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.