• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 2

Puvana

Active member
Jun 19, 2024
180
3
43
அத்தியாயம் - 2

துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியரும் பெண்தன்மையின் மூன்று பரிமாணங்களான பூமி, சூரியன் மற்றும் சந்திரனை அல்லது தமஸ் (செயலற்ற நிலை), ரஜஸ் (செயல், வேட்கை), சத்வ (அனைத்தையும் கடந்த நிலை, அறிவாற்றல், தூய்மை) குணங்களைக் குறிக்கிறார்கள்.



நவராத்திரி என்பது வெவ்வேறு தேவிகளைப் பற்றியது. அதில் சிலர் மென்மையாக, அற்புதமானவர்களாக இருக்கிறார்கள். ஒரு சில தேவிகள் ஆக்ரோஷமாக, பயங்கரமாக அல்லது அச்சமூட்டும் விதத்திலும் இருக்கிறார்கள். அரக்கனின் தலையைத் துண்டித்தெறியும் பெண்ணையும் வணங்கும் கலாச்சாரம் நம்முடையது. இது ஏனென்றால், ஒருவரின் புத்திசாலித்தனம், மேதைமை, அறிவாற்றல் மற்றும் பிற திறன்களை நல்லொழுக்கத்தின் பலிபீடத்தில் மட்டும் வைத்துக் கணிக்க நாம் விரும்புவதில்லை. சமுதாயத்தை அணுகுவதற்கு நமக்கு நல்லொழுக்கம் வாய்ப்பளிக்கும். நம்மிடம் நல்லொழுக்கம் இல்லையென்றால் சமுதாயம் நம்மை நிராகரிக்கும், ஆனால் வாழ்க்கை நம்மை நிராகரிக்காது. இந்த உலகில் ஒருவர் மட்டுமே இருக்கிறார் என்றால், எது நல்லது என்பதை நம்மிடம் அறிவுறுத்த இங்கே யாரும் இருக்கமாட்டார்கள். நம்மைச் சுற்றியுள்ள மக்களை மனதில் கொண்டே நாம் நல்லமுறையில் நடந்து கொள்கிறோம், ஆனால் உயிர் என்ற அடிப்படையில் பார்த்தால் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை.



ஒரு மனிதனாக உருவாவதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அந்த மனிதன் ஒரு நல்ல உயிராக, முழுமையாக மலரவேண்டும். இந்த ஒன்பது நாட்களும் நாம் மலர்வதைக் குறித்ததாகவே இருக்கிறது, பத்தாவது நாளான விஜயதசமி நாம் வெற்றியடைந்து விட்டதைக் குறிக்கிறது. அதாவது, நாம் முழுவதுமாக மலர்ந்திருக்கிறோம் என்று அர்த்தமாகிறது.



தமஸ், ரஜஸ் மற்றும் சத்வ என்கிற இந்த மூன்று பரிமாணங்களும் இல்லாமல் எந்தவொரு பொருளும் இல்லை. குறிப்பிட்ட அசைவற்ற தன்மை, ஆற்றல், துடிப்பான அதிர்வு என இந்த மூன்று தன்மைகளிடம் இருந்து விடுபட்டதாக ஓர் அணுவும் இல்லை. இந்த மூன்று தன்மைகளும் இல்லாமல் நம்மால் எதையும் பிடித்துவைக்க முடியாது, அது உடைந்துவிடும்



இவை மூன்றும் வெறும் குறியீடுகள் அல்ல, சக்தி நிலையிலும் இது உண்மையே. மனிதர்களாகிய நாம் இந்த பூமியில் இருந்து தோன்றினோம், பூமியில் செயல்படுகிறோம். சில காலத்துக்குப் பிறகு, நாம் மீண்டும் செயலற்றவர்களாகி பூமியின் மடியிலேயே விழுந்து விடுகிறோம். இது தனி மனிதர்களான நமக்கு மட்டுமல்ல, விண்மீன் கூட்டத்திற்கும் இந்த முழு பிரபஞ்சத்திற்கும் இதுவே நிகழ்கிறது. செயலற்ற நிலையில் இருந்து துவங்கி, இந்தப் பிரபஞ்சம் முழு வேகத்தில் செயல்பட்டு, மெதுவாக மீண்டும் செயலற்ற நிலைக்கு திரும்புகிறது. இது இப்படி இருந்தாலும், இந்தச் சுழற்சியை உடைக்கும் ஆற்றல் நம்மிடம் உள்ளது.



நவராத்திரி திருவிழாவின் முதல் மூன்று நாட்களைக் கொண்ட பகுதி, தமஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் தேவி ஆக்ரோஷமாக, துர்க்கை அல்லது காளி ரூபத்தில் இருக்கிறாள். தமஸ் என்பது இந்த பூமியின் இயல்பு, இவளே பிறப்புக்கும் காரணமானவள். தாயின் கருவறையில் நாம்‌ குடியிருந்த காலமே தமஸ். இது கிட்டத்தட்ட செயலற்ற தூக்கநிலை, ஆனால் நாம் வளர்ந்து கொண்டிருந்தோம். எனவே தமஸ் குணம் என்பது இந்த பூமியின் இயல்பாகவும் நம்முடைய பிறப்பின் இயல்பாகவும் இருக்கிறது.



நாம் இந்த பூமியின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பூமி தேவியுடன் வெறுமே ஒன்றியிருப்பது எப்படி என்பதை மட்டும் நாம் கற்றுக்கொண்டால் போதும். எப்படி இருந்தாலும் நாமும் இந்த பூமியின் ஒரு பாகம்தான். பூமி தேவி விரும்பும்போது, நம்மை வெளியே தூக்கி வீசுகிறாள்; விரும்பும்போது, மீண்டும் தனக்குள் உறிஞ்சிக்கொள்கிறாள்.



இப்போது, இந்த பூமியின் ஒரு சிறு மண் குவியலாக நாம் இங்கே குதித்துக் கொண்டிருக்கிறோம். இந்த பூமி எப்போது நம்மை மீண்டும் உறிஞ்சிக்கொள்ள விரும்புகிறதோ, அப்போது நாம் மீண்டும் சிறு மண் குவியலாகிறோம்.



ரஜஸ் தன்மையுள்ள மனிதரிடம் அளவற்ற ஆற்றல் இருக்கும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த ஆற்றலை முறைப்படுத்த வேண்டியது மட்டுமே. நாம் ஈடுபடும் எந்தவொரு செயலும் நம்முடைய விடுதலைக்கான செயல்முறையாகவோ அல்லது நாம் அதிலேயே சிக்கி உழலவோ வழியமைக்கக் கூடும்.



தமஸ் குணத்தில் இருந்து சத்வ குணத்திற்கு நகர்வது என்றால், நாம் இந்த உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தி உடல்களை செம்மைப்படுத்தி மெருகூட்டுகிறோம். அனைத்தையும் ஊடுருவும் விதத்தில் நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ளும்போது, நமக்குள்ளேயே இருக்கும் மூலமானதை நம்மால் தவறவிட முடியாது. இவை மூன்றையும் புரிந்து கொள்ள இந்தப் பண்டிகை அடித்தளத்தை அமைத்துத் தருகிறது.



நம்முடைய அமைதியைக் காத்தபடி ஆற்றலை வளர்த்துக்கொண்டு முழுமையை அதாவது பூர்த்தி நோக்கிப் பயணம் செய்வதே நம்முடைய வாழ்க்கையின் இலக்கு.



பூரணம் என்றால் என்ன ? பூரணம் என்றால் முழுமையான, நிறைவான என்று பொருள். இருப்பு நிலை என்றும் பூரணமாகவே இருக்கிறது. ஆனால் இயக்க நிலையான பிரபஞ்சத்தில் சிருஷ்டியின் நிமித்தம் ஏற்படும் குறைபாடுகளினின்று தன்னை நிறைவுபடுத்திக் கொள்வதற்கான இயக்கமே இயற்கையின் இயக்கமாக இருக்கிறது. 'தோற்றத்துக்கு வராமலிருப்பது பூரணம். தோற்றத்துக்கு வந்திருப்பதும் பூரணமே. பூரணத்தில் இருந்து பூரணம் வந்த பின்னும் பூரணம் பூரணமாகவே இருக்கிறது என்பது வேத வாக்கு. அது பூரணம்; இதுவும் பூர்ணம்; பூரணத்திலிருந்தே இந்தப் பூர்ணம்(பிரபஞ்சம்) உதித்திருக்கிறது; பூரணத்திலிருந்து இந்தப் பூரணத்தை (பிரபஞ்சத்தை) எடுத்து விட்டால், பூரணமே யாண்டும் இருக்கிறது.



ஓம் பூர்ணமத; பூரணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே|



கடலில் இருந்துதான் அலை எழுகிறது. அலை வேறு கடல் வேறு என்று தோன்றினாலும், அலை கடலுக்கு அன்னியமானதல்ல. அது கடலில் இருந்து தோன்றி, கடலில் நிலைபெற்று, கடலில் ஒடுங்கி விடுகிறது. இதில் கடலின் பூரணம். அலை பிரபஞ்சம். அலை எழுவதால் கடலுக்குக் குறைவு ஒன்றும் நேர்ந்து விடுவதில்லை.



பரம்பொருள் எல்லையற்றவர், எங்கும் நிறைந்தவர். அவரை நாம் மொழிகளைக் கொண்டு விளக்க முற்படும் பொழுது, எல்லையற்ற பரம்பொருளை ஓர் எல்லைக்குள் கொண்டு வந்து விடுகிறோமல்லவா ? உவமைகளைச் சொல்லி இறைவன் இப்படி இருக்கிறார், இறைவன் அப்படி இருக்கிறார் என்று சொல்லும் பொழுது, சொல்லப்படாமல் விடுபட்டுப்போன மற்ற விஷயங்களில் இறைவன் இல்லையா ? என்ற கேள்வி வந்து விடுகிறதே ? அதனால்தான் வேதங்களுக்கும் அப்பாற்பட்டவர் அதாவது ''மறைக்கு அப்பாலாய்'' என்று சொல்கிறார்கள். நாம் காணுகின்ற பொருள்களெல்லாம் அவரே என்பதை ''எல்லாமாய்'' ''யாதுமாகி'' என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் நாம் காணும் இவை தவிர மற்றவற்றில் இறைவன் இல்லையா ? ' என்ற கேள்வி எழுவதால் வருமே என்பால் அவர் அனைத்தையும் கடந்தவர், அப்பாற்பட்டவர் , அல்லதுமாய் இருந்தனை என்கிறார்கள். எங்கும், எதிலும், எப்பொழுதும் பரவி, நிரம்பி நிற்பதோடு, அனைத்திற்கும் ஆதாரமாக, அனைத்தையும் கடந்தும் நிற்பவர் அவரே பூரணமானவர்.



இங்கு எதுவுமே அழிவதில்லை. அழிவு என்ற வார்த்தையே பொய்தான். ஒரு பொருளோ, ஆற்றலோ வேறொரு பொருளாகவோ, ஆற்றலாகவோ மாறுமே அல்லாது அழிவதில்லை. விஞ்ஞானத்தில் இதை ''Energy can neither be created nor destroyed, but can be transformed from one form to another'' என்று சொல்வார்கள். பரம்பொருள் உலகைக் கடந்தும் இருக்கிறார். உலகில் ஊடுருவியும் இருக்கிறார். அத்தகைய பரம்பொருள் பஞ்ச இந்திரியங்களுக்கு எட்டாதவர். மனம், மொழி இவற்றிற்குத் தட்டுப்படாதவர். அத்தகைய அதீத நிலையில் அவர் பரிபூரணமாய் விளங்குகிறார். அவரே இப்பிரபஞ்சமாகவும், இதில் காணும் சேதன, அசேதனப் பொருட்களாகவும் விளங்குகிறார். இதனைத்தான் வள்ளுவர் ஆதிபகவன் முதற்றே உலகு என்று குறிபபிடுகிறார். நீரும், நிலமும், ஆகாயமும், காற்றும், நெருப்பும் அனைத்தும் அவரே. ஒளியாகவும், ஒளி பிரகாசிக்கும் வெளியாகவும் பஞ்சபூதங்களாவும் அவரே இருக்கின்றார். எப்படிப் பிரபஞ்சம் தோன்றியது என்பது பற்றி விஞ்ஞானிகள் கூறும் கருத்தும் இதுதான்.



எனவே பூரணம் என்பது தோற்றத்துக்கு அப்பாலுள்ள நிலை, தோன்றியுள்ள நிலை ஆகிய அனைத்தும் அதுவே என்பது கோட்பாடு. தோன்றியுள்ள அனைத்தும் தோற்றத்துக்கு அப்பாலுள்ள அதிலிருந்து தோன்றி, அதிலேயே நிலை பெற்று அதிலேயே ஒடுங்கி விடுகின்றன. எனவே அதற்கு அப்பால் எதுவுமில்லை. அதுவே யாதுமாகி நிற்கின்றது. எல்லையில் அடங்காதது பூரணம். இயற்கையில் உள்ளவைகள் அனைத்தும் எல்லைக்கு உட்பட்டவைகள். அவை அனைத்தும் பூரணத்தில் அடங்கி விடுகின்றன. மேலும் அதைப் பற்றி ஆராயுமிடத்து குறை ஒன்றுமில்லாத நிறை நிலையாக அது விளங்குவது தெரிகின்றது. எனினும் அதை முழுவதுமாக ஆராய முடிவதில்லை. எனவே புலப்படுகின்ற இந்தப் பிரபஞ்சத்தில் பூரணத்தைக் காண முயற்சி செய்கிறான் சாதகன். பூரணத்தை அதனுள் காண்கிறான் ஞானி. பூரணத்திலேயே புதைந்து கிடக்கிறான் நிறை ஞானி. பூரணத்தையே எப்பொழுதும் உணர்பவன் தானே பூரணமாக ஆகி விடுகிறான். பூரணம் அகண்டமானது. கண்டம் என்றால் துண்டுபட்டது. அகண்டம் என்றால் துண்டுபடாதது. கால தேச வர்த்தமானத்துக்கு அங்கு இடமில்லை. பூரணத்தில் இரண்டு என்பதே கிடையாது. எல்லாம் ஒன்றுதான். ஜீவபோதம் இருக்கும் வரை பூரணத்தின் தன்மை விளங்காது. பரபோதத்தில்தான் குறைவில்லாத நிறைநிலை வாய்க்கிறது. பூரணம் உணர்வுக்கு வருகிறது. உடல் உணர்வு கொண்டு விளங்குவது ஜீவபோதம். பரமாத்ம உணர்விலேயே திளைத்திருப்பது பரபோதம்.



எள்ளில் எண்ணெய் போன்றும், விறகில் தீ போன்றும், பாலில் நெய் போன்றும், ஊற்றில் நீர் போன்றும் பரம்பொருள் அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாகத் திகழ்கிறான். எள்ளும் எண்ணெயும் ஒரே வஸ்து. பிரிக்கும் பொழுது இரண்டாகிறது. அதுபோல பரம்பொருள் ஒருவனே என்றாலும், அவனே பிரபஞ்சமாகவும் விளங்குகிறான். எள், விறகு, ஊற்று, பால் இவற்றை முன்னணியில் வைத்துப் பார்க்கும் பொழுது அவற்றில் உள்ள எண்ணெய், நெருப்பு, நீர், நெய் இவையெல்லாம் மறைந்து பின்னணியில் இருக்கின்றன. அது போலவே ஜீவ உபாதிகளோடு கூடிய ஜீவனை முன்னணியில் வைத்துப் பார்க்கும் பொழுது பரம்பொருள் அந்தராத்மாவாக மறைவாக இருக்கிறார். ஜீவபோதம் அகலும் பொழுது ஜீவாத்மா பூரணமாகத் திகழும் பரமாத்மாவில் லயமாகி விடுகின்றான்.



இவற்றைப் புரிந்துகொண்டு அவற்றில் லயிப்பதே மெய்ஞ்ஞான நிலை ஆகும். அந்த நிலையை அடைய வேண்டும் நாம் தெய்வங்களைச் சரணடைகிறோம்.



ஒரு கொண்டாட்டமான மனநிலையுடன் நவராத்திரியை‌ அணுகுவது தான் மிகச்சிறந்த வழி. முழு ஈடுபாட்டுடன் இருப்பது முக்கியம். பாரம்பரியமாகப் பெண் தெய்வங்களைப் போற்றும் வழிமுறையை கொண்டிருந்த கலாச்சாரங்கள் நம்முடையவை என்பதைப் புரிந்து செயல்படுவோம். அடிப்படையான இந்தப் புரிதலை அடித்தளமாகக் கொண்டு நவராத்திரிப் பண்டிகை கொண்டாடப் படுகிறது.



புவனா சந்திரசேகரன்.