• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி -விஜி சம்பத்

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
34
3
8
chennai
"ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி"

குக்குக்கூ.. குக்குக்கூ.. அழைப்பு மணி கூவியது .

"அடடே வாங்க சண்முகம்! உள்ள வாங்க" ஆரவாரமாக வரவேற்றபடி ஜெயச்சந்திரன் வெளியே வர‌..

"இந்தாங்க சார்.."

அவசரமாக ஒரு கவரைக் கொடுத்து விட்டுப் படு அவசரமாகக் கிளம்பினார் சண்முகம்.

"என்ன இது அதிசயமால்ல இருக்கு. ஹால் சோஃபால வந்து கால் மேல கால் போட்டு உக்காந்துகிட்டு உரிமையா ஃபில்டர் காஃபி கேட்டு வாங்கிக் குடிச்சிட்டுப் போற ஆளு, இன்னைக்கென்னடான்னா கால்ல வெந்நீரை ஊத்திகிட்ட கணக்கா பறக்குறாரு. காலோட…சே ! கையோட ஃப்ளாஸ்க்ல சுடுதண்ணிய கொண்டு வந்திருப்பாரோ..!
ம்ம்.

'இன்றைக்கு ஏனிந்த அவசரமோ..' பாடிக் கொண்டே கவரைப் பிரித்துப் பார்த்தவர் முகத்தில் திருப்தியான புன்னகை படர,

"தேடினேன் வந்தது…"என்று குஷியானவர்..

"சம்மு…. ! சம்மு..! என்று அங்கிருந்தே குரல் கொடுத்தார்.

ம்ஹும்…உள்ளிருந்து நோ ரியாக்ஷன்.

"கூப்ட்டா ஏன்னு கேக்கற பழக்கமே கிடையாது இந்தப் பொண்ணுக்கு. இதெல்லாம் கல்யாணம் பண்ணிட்டு மாமியார் வீட்ல போய் எப்படித்தான் குப்பை கொட்டப் போகுதோ?

"புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே..மகராசி கண்ணே" னு பாடினவருக்குத் திடீர்னு சம்சாரம் ஞாபகம் வந்துருச்சு.

பொறுப்பை எல்லாம் எந்தலைல கட்டிட்டு நீ நிம்மதியாப் போய்ச் சேந்துட்டே மரகதம். இப்ப நான் கெடந்து அல்லாடறேன்..!

பெத்து எடுத்தவதான் என்னையும் அல்லாட விட்டுப் புட்டா.."

விரக்தியோடு வீட்டுக்குள்ளே வந்த ஜெயச்சந்திரன், ஹாலில் மொபைல் பார்த்துக் கொண்டே சிப்ஸை கொறித்துக் கொண்டிருந்த மகளைப் பாத்ததும் ஆத்திரத்தில் முகம் ஜிவுஜிவுக்க ஜிவ்ச்சந்திரன் ஆனார்.

எத்தனை அலட்சியம்..? எத்தனை நெஞ்சழுத்தம்? பெத்த தகப்பன்கிற மரியாதை…அடச்சே மரியாதை எதிர்பாக்குறதுல்லாம் ஓவர். பாசம்கிறது மனசோரத்துல கொஞ்சமே கொஞ்சமாச்சும் ஒட்டியிருந்தா இப்படி எல்லாம் நடந்துக்குவாளா?

"தென்னையப் பெத்தா இளநீரு
புள்ளையப் பெத்தா கண்ணீரு"..னு
எங்க ஊர் ராஜா சிவாஜியா மாறி
மனசு வலிக்கப் பாடினவரு, அடுத்த நொடியே உல்டாவா திருவிளையாடல் சிவாஜி முகம் சிவக்க நக்க்கீரா னு கூப்ட்ட மாதிரி…"சம்ம்யுக்க்த்தா" னு அடித்தொண்டைல அலறினார்.

"கூப்ட்டீங்களாப்பா"

குயிலாகக் கூவியது இருபத்தைந்து வயது இளம்புயல் சம்யுக்தா.

"ஹ்ம்ம்..! வாசல்லருந்து சம்மு..சம்முனு கரடியா கத்திகிட்டே வர்றேன். சாவகாசமா கூப்ட்டீங்களாப்பான்னா கேக்கறே..! இதுதானா நீ உங்கப்பனுக்குக் குடுக்கற மரியாதை?"

"பாலூட்டி வளர்த்த கிளி
பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சை கிளி
மரியாதை மறந்த பச்சைக்கிளி"

"அப்பா.! நீங்க சம்யுக்தா னு கூப்ட்டிருந்தா நான் ஒரே தடவை ல என்னப்பானு கேட்டிருப்பேன். சம்யுக்தா னு அழகா ஒரு ராஜகுமாரி பேர எனக்கு வெச்சிட்டு, நீங்க சம்மு..சம்மு னு கூப்ட்டா நான் கம்முனுதான் இருப்பேன். "

"எதுக்கெடுத்தாலும் எதுத்து எதுத்து வாயாடற உன்னைக் கட்டிக்கறவன் என்ன பாடுபடப் போறானோ தெரியலையே..!
யாரோ..யாரோடி உன்னோட புருஷன்?"

"அதுல என்னப்பா சந்தேகம்.நான் சொல்ற பேச்சைத்தான் அவன் கேட்டாகணும். எம் பாட்டுக்கு அவன் தலையாட்டணும். ஏன்னா
"மகாராணி நான்…மகராசி நான்"
இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டாள் மகள்.

அப்பாவும், மகளும் பேசினாங்கன்னா ஒரு வரி,ரெண்டு வரியாவது சினிமாப் பாட்டோ இல்லே பாட்டை உல்டா பண்ணியோ பாடித்தான் முடிப்பாங்க.
இதெல்லாம் ஏதாவது மேனுஃபேக்சரிங் டிஃபக்ட்டாவோ இல்ல ஜெனிடிக் ஃபால்ட்டாவோ இருக்குமோ என்னவோ தெரியல.

"இந்தா.. புரோக்கர் வந்து நாலு மாப்பிள்ளைங்க ஜாதகமும், ஃபோட்டோவும் குடுத்துட்டுப் போயிருக்காரு. போன தடவை மாதிரி பாக்காமயே திருப்பிக் குடுத்துராத. இதுல உம் பாட்டுக்கு எசப்பாட்டு பாடற மாப்பிள்ளையாப் பாத்து செலக்ட் பண்ணு"

"ஷ்..ஷ் அப்பா.. ! என்னவனை, எனக்கானவனை நானே தேடிக் கண்டு பிடிச்சுக்கறேன்னு
உங்களுக்கு எத்தனை தடவைதான் சொல்றது? அவனைத் தேடிக் கண்டுபிடிச்சு ஆறு மாசமாவது ஜாலியாக் காதலிச்சப்புறந்தான் கல்யாணம்.

"காதலே வாழ்க்கையின்
வேதம் என்று ஆனது
கண்களால் சுவாசிக்க
கற்றுத் தந்தது
பூமியே சுழல்வதாய்
பள்ளிப்பாடம் சொன்னது
இன்று தான் என் மனம்
ஏற்றுக் கொண்டது"

"உன்னோட ராஜகுமாரன் எங்கிருக்கான்னு எனக்கெப்படி தெரியும்?" ஜெயச்சந்திரன் இப்ப சோகச்சந்திரனாக…

"உங்களுக்கு எதுக்குப்பா அந்தக் கவலை? அந்தக்கால ராஜகுமாரி சம்யுக்தாவைத் தேடி ப்ருத்விராஜகுமாரன் குதிரையேறி வந்தான். இந்தக்கால சம்யுக்தா தன்னோட ராஜகுமாரனை ஸ்கூட்டில ஏறிப்போய்த் தேடிக் கண்டு பிடிக்கப் போறா. அதனால நீங்க நிம்மதியா நீங்க உண்டு ..உங்க வாட்ஸேப், ஃபேஸ் புக் உண்டுனு நிம்மதியா இருங்க. இன்னொரு தரம் அந்த புரோக்கர் சண்முகம் குடுத்தார்னு ஜாதகத்தை என்கிட்ட குடுத்தீங்க..நடக்கிறதே வேற. அம்மா இருந்திருந்தா எம்மனசு புரிஞ்சு நடந்துக்குவாங்க.

இப்படி தாயில்லாப் பொண்ணா என்னைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டியேம்மா..!

"நீ சுமந்த பிள்ளை..சிறகொடிந்த கிள்ளை"

அம்மாவின் ஃபோட்டோக்கு முன்னால் நின்று கதறியவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவர்

"ஆராரோ ஆரோ இது தந்தையின் தாலாட்டு.."
பாசமாகப் பாடிய அப்பாவின் தோளில் சாய்ந்து விசும்பிய சம்மு..ஸாரி சம்யுக்தா சுதாரித்துக் கொண்டவளாக..

"வேணாம்ப்பா..வேணாம் இந்த சென்டிமெண்ட் பாடலு..
எங்கிட்ட நடக்காது இந்த எமோஷனல் ப்ளாக் மெயிலு "

தந்தையின் அணைப்பிலிருந்து விலகியவள்..ஓடிப் போய் உடை மாற்றிக் கொண்டு வந்தாள்.

"எங்கே அவன்..என்றே மனம் தேடுதே ஆவலாய் ஓடிவா.."

குதூகலமாகப் பாடியபடி ஸ்கூட்டி சாவியும், டென்னிஸ் ராக்கெட்டுமாக வெளியே கிளம்பினாள்.

ஜாதகத்தை தூக்கிகிட்டு வீட்டுப் பக்கம் வந்தீங்கன்னா டாஸ்மாக் பக்கம் உங்களைப் பாத்தேன்னு உங்க வீட்டம்மா கிட்ட போட்டுக் குடுத்துருவேன்னு அவ்வளவு சொல்லியும், திரும்பவும் ஜாதகத்தைக் கொண்டு வந்து தர்றீங்களா..? உங்களை அப்புறம் கவனிச்சுக்கறேன்"னு மனசுக்குள்ள சண்முகத்தை வறுத்தெடுத்தபடி ஸ்கூட்டியிலேறிப் பறந்தாள்.

"அவள் பறந்து போறாளே..! என்னை எதிர்த்துப் பேசறாளே..!

ஹ்ம்…இவ அலப்பறை தாங்க முடியலையே..!! இதெல்லாம் எங்க போயி முடியப்போகுதோ? ஓவரா செல்லம் குடுத்து அவளைக் குட்டிச்சுவராக்கி வெச்சிருக்கீங்கனு அப்பப்ப கனவுல வந்து அவ அம்மா வேற திட்றா. ஷ்ஷப்பா. இப்பவே கண்ணைக் கட்டுதே..! அவளோட ராஜகுமாரனை ஸ்கூட்டில போய் எப்படிக் கண்டு பிடிப்பாளாம் இந்த ராஜகுமாரி. அதுவும் இந்த ஊர்லயே அவளோட ராஜகுமாரன் இருப்பான்னு என்ன நிச்சயம்?
பலவாறாகத் தனக்குள்ளேயே புலம்பியவாறே டி.வியை ஆன் செய்தபடி
ஈஸிசேரில் சாய்ந்தவருக்குக் காலையில் சாப்பிட்ட வெண்பொங்கல் அனஸ்தீஷியா எஃபக்ட் கொடுக்க கண்கள் சொருக ஆரம்பித்தது.

டி. வி.நியூஸ் சேனலில் ப்ரேக்கிங் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது. கோவை நகரில் பரபரப்பான டவுன் ஹாலில் ஓர் இளம்பெண் கையில் வாளை உயர்த்திப் பிடித்தபடி குதிரையின் மீது அமர்ந்து வரும் காட்சியும் சாலையில் வாகன ஓட்டிகள் வண்டி ஓட்டுவதை நிறுத்திவிட்டு அந்தப் பெண்ணைப் பிரமிப்போடு பார்த்தபடி இருப்பதையும் திரும்பத் திரும்ப காட்டியபடி இருந்தது.

இந்தப் பொண்ணை எங்கயோ பாத்த மாதிரி இருக்கே !

"எங்கேயோ பார்த்த முகம்" னு ஹம் செய்தபடியே கண்கள் மசமசக்கப் பார்த்த ஜெயச்சந்திரன்…

"ஆ…ஐயையோ சம்மு நீயா?

இப்பதானே நீ ஸ்கூட்டி ல டென்னிஸ் ராக்கெட்டும் கையுமா கெளம்பினே? அதுக்குள்ள ரோட்டு மேல குதிரை, குதிரை மேல நீ, உன் கைல வாள்… இதெல்லாம் எப்படி? ஸ்கூட்டி குதிரையாகவும், டென்னிஸ் மட்டை உடைவாளாகவும் மாறிய மாயமே நானறியேன். மெய்யாலுமே ப்ருத்விராஜனைத் தேடி இந்த கெட்டப்புல கெளம்பிட்டியா? பாக்கறவங்க உனக்கு புத்தி பேதலிச்சுப் போச்சுன்னு நினைக்க மாட்டாங்களா? இப்பவே என்னோட வளர்ப்பு சரியில்லைன்னு ஊரும் உறவும் வறுத்தெடுக்குது.

சம்மு என் அருமை மகளே..! உன்னை நல்லபடியா பாத்துக்கறதா உங்கம்மாவுக்கு செஞ்சு குடுத்த சத்தியத்துல இம்மியளவும் நான் பிறழ்ந்ததில்லையே சம்மு! உம்மனசுக்கேத்த மணாளனை என்னால் தேடித் தர முடியாதுன்னே முடிவு பண்ணிட்டியா? எம்மேல நம்பிக்கையில்லையா?

அதற்குள் ..

"மன்னர்மன்னனே எனக்குக் கப்பம் கட்டு நீ..
ஜென்ம ஜென்மமாய் எனக்குக் கட்டுப் பட்டு நீ "

குதிரையிலமர்ந்தபடி உடைவாளை விஷ்க்..விஷ்க் என்று காற்றில் வீசிய படி சம்யுக்தா பாட..

"அம்மம்மா நல்லபடி தானே நான் உன்னை வளர்த்தேன்
தாயென்றும் தந்தையென்றும் என்னை நினைத்தேன்..இது உனக்காக வாழும்
உள்ளமல்லவா "

மகளே சம்மு ! எப்பப் பாத்தாலும்
"மகாராணி நான் மகராசி நான்"னுதானே பாடுவே. ஒருநாள் கூட சண்டிராணி நான்னு பாடுனதே இல்லையே. உலகம் பூராவும் இந்த நியூஸ் ஒளிபரப்பாகி இருக்குமே!"

பதறிக் கதறி உருண்டு புரண்டவர் தொபுகடீர் என்று ஈஸிசேரிலிருந்து கீழே விழுந்த அதிர்ச்சியில் கண் விழிக்கவும், இத்துடன் செய்திகள் முடிவடைந்தன என்று செய்தி வாசிப்பாளர் வணக்கம் சொல்லி விடை பெறவும் சரியாக இருந்தது.

'அடச்சே..டி. விய ஆன் பண்ணதும் தூங்கியிருக்கோம். அதுவும் இப்படி ஒரு கனவு காண்ற அளவுக்குத் தூங்கியிருக்கோமே' என்று தன்னையே நொந்தவராக.. மகள் இன்னும் வீடு திரும்பவில்லையே என்ற எதிர்பார்ப்பில்

"வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா" பாடியபடியே வாசலுக்கு செல்ல..
இன்றும் தன் ப்ருத்விராஜனை சந்திக்க முடியவில்லை என்ற ஏக்கத்தில்

"நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா..
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா "

என்று மேகக்கூட்டத்தின் நடுவே எட்டிப் பார்த்த முழுநிலவைத் துரத்தியடித்தபடி
ஸ்கூட்டியைக் கொண்டு வந்து நிறுத்தினாள் சம்யுக்தா.

விஜி சம்பத்,(விஜயலக்ஷ்மி எஸ். கே)
 

Author: siteadmin
Article Title: ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி -விஜி சம்பத்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.