• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

காதல் காலமிது - தில்

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
10
0
1
chennai
காதல் காலமிது

தில்

ஏக்கர் கணக்கில் பறந்து விரிந்திருந்த அந்த ரிசார்ட்டில் அந்த நேரத்தில் 500 பேருக்கும் குறையாமல் இருந்திருப்பார்கள். ஆனால் மித்ரன் மட்டும் தனியாக இருந்தான். கடந்த ஒன்றரை நாட்களாக அந்தப் பூனை குட்டி மட்டும் அவனுக்கு துணையாக இருந்தது அது ஒரு பெர்ஷியன் வகை பூனைக் குட்டி. தூய பெர்ஷியன் ரகம் இல்லை வேறெதோ ஒரு ரகத்துடன் காதல் புரிந்து, கலப்பு மணமாகி அதன் விளைவாக பிறந்திருக்கும் போல. இதைப் போல நான்கைந்து பூனைகள் அந்த வளாகத்தில் இருந்தன. அது போக, வாத்துகளுக்கு என்று ஒரு தனி இடம், சிலபல வண்ண வண்ணப் பறவையினங்கள். சூழ்நிலை என்னவோ ரம்யமாகத் தான் இருந்தது. மித்திரனுக்குத் தான் மனதுக்குள் ஒரே ‘கசகசா’

இந்த இடத்தில் தான் ஒரு தேவையில்லாத ஆணி போல் தோன்றியது அவனுக்கு. வந்திறங்கி ஒன்றரை நாளாயிற்று. பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இவனும் அண்ணன் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் நடந்தான். அவனது அழுகையை சமாளித்ததும், அவனுக்கு சாப்பாடு ஊட்டியதும், நடந்து நடந்து கால் வலித்ததும் நான் மிச்சம். இதில் தொண்டையில் சிக்கிய முள்ளாக அந்தப் பெண் வேறு.

அண்ணிக்கு சித்தி பெண்ணோ, சித்தப்பா பெண்ணோ. ஏதோ ஒரு எழவு. பத்து வருடம் முன்பிருந்தே அவளைப் பிடிக்காது. அவ்வப்போது சலித்துக் கொள்வதும், தன்னைத் தானே திட்டிக் கொள்வதும் அந்த ஒரு பெண்ணால் தான். சலித்தபடி கையிலிருந்த கல்லை எடுத்து எதிரில் இருந்த குளத்தில் விட்டெறிந்தான். இவன் பக்கத்திலேயே படுத்திருந்த அந்தப் பூனை தலையைத் தூக்கிப் பார்த்து, எதுவும் உணவா என்று நினைத்து இல்லை என்று தெரிந்தவுடன் மீண்டும் படுத்துக் கொண்டது.

அப்போது பார்த்து அலைபேசி அழைத்தது அவனது நண்பன் தான். “தாஸ்! சொல்லுடா”

“என்னடா குரல் டல்லா இருக்கு?”

“போடா பத்து வருஷமா என்னை துரத்துற பிசாசு இப்ப என் கண்ல பட்டுக்கிட்டு இருக்கு. மனசுக்கு நல்லாவே இல்ல. எல்லாம் உன்னால வந்தது”

“அந்த சம்பவம் நடந்து ஒரு செஞ்சுரியே ஆயிடுச்சு. இன்னும் அதையே நினைச்சு புலம்பிகிட்டு இருக்க. ஃப்ரீயா விடுடா. அந்த பொண்ணே அதை மறந்திருக்கும்”

“மறந்த மாதிரித் தெரியல.. போகும் போதும் வரும் போதும் என்னையே பாக்குது குறுகுறுன்னு”

“ஆஹா குறுகுறுன்னு பாக்குதா! அப்ப வேற ஏதோ இருக்கு. சம்திங் சம்திங் அதுக்கும் உனக்கும்”

“அடி செருப்பால கண்ணு முன்னாடி இருந்தேன்னா செத்தடா நீ. என் வாழ்க்கையிலேயே அவ்வளவு அவமானப்பட்டது இல்லை தெரியுமா நான்? அதுக்கு முன்னாடியும் சரி, அதிலிருந்தும் சரி, எந்தப் பொண்ணையும் நான் நிமிர்ந்து பார்த்ததில்லை”

“அப்ப நீ நிமிர்ந்து பார்த்த ஒரே பொண்ணு அவ தானா? நீ கூட ஒரு பொண்ண லவ் பண்ணனும், அவளையே தான் கட்டணும்னு முப்பாத்தம்மன் கோவில்ல சத்தியம் பண்ணி இருக்கியே?”

“பக்கத்துல இல்லேங்குற தைரியத்துல பேசுறியா நீ? பேசு டா மகனே.. நான் எதையும் மறக்க மாட்டேன் தெரியும்ல” அதற்கு மேலும் நண்பனின் மொக்கையைக் கேட்க மனமில்லாமல் அலைபேசியை கட் செய்தான் மித்ரன்.

நினைவுகள் அவனை அந்த நாளுக்கு இழுத்துச் சென்றன. பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறையில் இருந்தான். பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த அரும்பு மீசைகள் எல்லாருமாகச் சேர்ந்து மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டு அண்ணன்மார்கள், காலேஜோ ஐடியோ படிப்பதாகச் சொன்னார்கள். அவர்களுக்கு மித்ரனைப் பார்த்ததிலிருந்தே பிடிக்கவில்லை. ஏதோ பொறாமை போலும். இவனை வம்பிழுப்பதிலேயே குறியாக இருந்தனர்.

பாஸ்கெட் பால் போல் ஏதோ ஒன்றை தூக்கிப்போட்டு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த அண்ணன்களில் ஒருவன் வேண்டுமென்றே அதை மொட்டை மாடிக்கு வெளியில் உதைக்க, அது பக்கத்தில் ஒரு சிறிய அறைக்கு மேல் போய் விழுந்தது.

“தம்பி அதை போய் எடுத்துட்டு வாடா!” என்க, மித்ரனும் அந்த மோட்டார் மாடியில் இருந்து அந்த அறையின் கூரைக்கு இறங்குவது இலகுவாக இருந்ததால் உடனே போய் எடுத்தான்.

எடுத்துவிட்டுத் திரும்பியது தான் தெரியும்.

“ஐயோ! குளிக்கும் போது எட்டிப் பார்க்கிறான்” என்று ஒரு சத்தம்.

அதற்குள் அக்கம் பக்கம் எல்லாம் கூடிவிட்டது. கையில் பந்துடன் இவன் திருவென்று முழிக்க பாத்ரூமுக்குள் இருந்து ஒரு பெண் முழு உடையுடன் ஓடி வந்து, “நான் குளிக்கும் போது எட்டிப் பாத்துட்டான். விட்டா ரேப் பண்ணி இருப்பான்” என்றாள் கோபத்தில் சிவந்த முகத்துடனும், குக்கருக்கு நிகராக ஆவி பறந்த மூச்சுடனும்.

மிஞ்சிப் போனால் எட்டாம் வகுப்பு படித்திருப்பாள்.‌ அவ்வளவுதான். இவனுக்கே ரேப் என்றால் என்னவென்று சரியாகத் தெரியாது, அந்த சில்வண்டுக்கு என்ன தெரிந்திருக்கும்? ஏதோ கண்ட திரைப்படங்களையும், கதைகளையும் படித்துக் குழம்பிப் போயிருக்கிறது என்று மட்டும் நினைத்தான்.

இவனுடைய துப்பறியும் மூளை அந்தப் பெண்ணை ஒரு நிமிடம் ஆராய்ந்து, அவள் முழு உடையுடன் தான் இருக்கிறாள் என்று கண்டுபிடித்தது. அதுவும் சுடிதார் போட்டு ஷால் போட்டு இரண்டு பேரும் பின் குத்தி.

“ஏம்மா? நீ தான் ஃபுல் ட்ரெஸ் போட்டிருந்தேல்ல.. அப்ப நான் எப்படி பார்ப்பேன்? நான் பந்தைத் தான் எடுக்க வந்தேன், இது பாத்ரூம்னு கூட எனக்குத் தெரியாது” என்று அவன் சொல்ல,

அவன் சொல்ல வந்ததில் ஒரு பாதியை மட்டும் எடுத்துக் கொண்டு சுற்றி நின்ற பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தனர்.

“ஓ ஃபுல் டிரஸ் போட்டிருந்தான்னு ரொம்ப வருத்தமோ?” என்றது அந்த சில்வண்டுடன் சேர்ந்த இன்னொரு சிறு வண்டு.

அன்று கிடைத்த திட்டுகளும், அறிவுரைகளும் வாழ்நாள் முழுவதும் மறக்காது மித்ரனுக்கு. அதன் பின் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த போது முதலிடம் பிடித்தது, சிறந்த கல்லூரிக்குப் போனது, மிக அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தது, என்ற அவனுடைய சாதனைகள் எதுவுமே அவன் மனதை எட்டவில்லை.

அந்த பொய்ப் பழியே தினந்தோறும் அவன் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. அவன் நிம்மதியை குலைத்த அந்தக் கிராதகி, அவள் ஏன் இத்தனை வருடம் கழித்து கண்ணில் பட வேண்டும்? எப்போதுடா அங்கே இருந்து போகலாம் என்றிருந்தது அவனுக்கு. கிளம்ப முடியாத அளவிற்கு குடும்பம் போடும் கட்டுப்பாடுகள்.

அந்தப் பழைய சம்பவத்தைப் பலமுறை நெருங்கிய நண்பர்களிடம் பேசிப் புலம்பி தீர்த்து செய்து கொண்டவன் ஒரு விஷயத்தை மட்டும் அவர்களிடம் சொல்லவில்லை. அதற்கு அடுத்த நாளே அந்தப் பெண் (அப்போது சிறுமி) தனியாக சிக்கும் போது தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் ஒரு மூலையில் நிறுத்தி அவளின் மிக அருகில் சென்று அவன் முகத்தை வைக்க, அந்தப் பெண் திருதிருவென விழித்தாள்.

“என்ன ரேப் பண்ணிடுவேன்னு பயந்துட்டியா? ரேப்னா என்னன்னு தெரியுமா? விபரம் புரியாம உளறினா கொன்னுடுவேன்” என்றும் மிரட்டி விட்டு வெளியே வந்தான்.

அதற்கடுத்த இரண்டு நாட்களும், எதுவும் போலீஸ் நம்மை பிடிக்க வருகிறதா, யாராவது கூப்பிட்டுத் திட்டுவார்களா, குறைந்தபட்சம் அறிவுரையாவது சொல்வார்களா என்று எதிர்பார்த்தான்.

எதுவும் நடக்கவில்லை. “பயந்துடுச்சு போல சில்வண்டு. இந்த மித்ரன் கிட்டயேவா?” என்று நினைத்துக் கொண்டாலும், ஏன் இந்த விதி அந்தப் பெண்ணை இப்பொழுது தன்னிடம் காட்டுகிறது? அதுவும் அண்ணனும் அண்ணியும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து, குடும்பமே குருக்ஷேத்திரமாக மாறிவரும் இந்தச் சூழலில்?

“சே! நெகடிவ் எனர்ஜி!” என்றபடி அடுத்த கல்லைத் தூக்கி அந்தக் குளத்திற்குள் எரிந்தான் மித்ரன்.
 

Author: siteadmin
Article Title: காதல் காலமிது - தில்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.