• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

தோற்ற மயக்கங்கள் 10

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
99
542
83
Chennai
தோற்ற மயக்கங்கள் 10

NGO க்கள் எனப்படும் அரசு சாரா நிறுவனங்கள் அல்லது தனியார் தொண்டு நிறுவனங்களில் உள்நாட்டில் இயங்குபவையும் உண்டு. உலகெங்கும் கிளை பரப்பிச் செயல்படும் என்ஜிஓக்களும் உண்டு.

என்ஜிஓக்களின் அடிப்படை நோக்கம் கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, பொதுநலன் போன்ற சமூக சேவைதான் எனினும், அவற்றிற்கான நிதியுதவி பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்தே வருகிறது.

பரப்புரை, விளம்பரம், வரி, மக்களிடம் நற்பெயர், மதிப்பைப் பெறுவதற்காகவும் கார்ப்பொரேட் நிறுவனங்கள் என்ஜிஓக்களுக்கு ஆதரவு தருகின்றன.

இந்த ஆதரவு CSR - Corporate Social Responsibility என்று அழைக்கப்படும் இது இந்நிறுவனங்களின் சமூகப் பொறுப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிலும், குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களின் குறிக்கோள் லாபமன்றி வேறில்லை. வணிக முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் அந்நியச் செலாவணியும் அயல்நாடுகளின் மேல் நமக்குள்ள அசைக்கவியலாத நம்பிக்கையும் விஸ்வாசமுமே (!) இந்நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு உதவுகின்றன.

அவர்களது நோக்கம் நிறைவேற அரசு, தனியார், தனிநபர் என எந்த இடத்திலும், எந்த வித மனிதர்களிடமும் எல்லை தாண்டி நெருங்குமளவு பக்குவமான முகவர்கள் / தரகர்களை (Agents & lobbyists) நியமிக்கின்றனர்.

இது போன்ற என்ஜிஓக்களில் Think Tank எனப்படும் சிந்தனைக்குழுக்கள் உண்டு.
இவர்கள் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, மருத்துவம், கல்வி, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் தங்கள் அறிவுசார் கருத்துகளைப் பரிந்துரை செய்கின்றனர்.

இவர்களின் தர்க்கரீதியான, நடைமுறைச் சிக்கல்கள் இல்லாத, இருக்கும் போக்கை பாதிக்காத பல கருத்துகள் அரசியல்வாதிகளாலும், அரசு அதிகாரிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சட்ட மற்றும் ஒழுங்குமுறை மேம்பாட்டுத் துறைகளின் (Legislature & Regulatory Authority) மூலம் தகுந்த மாற்றம் பெறுவதும் உண்டு.

இது ஒரு சங்கிலித் தொடர். இதில் அல்பா லால்வானி ஒரு கண்ணி மட்டுமே. அவளுக்குக் கொடுக்கப்படும் வேலை, அதுபற்றிய அறிவு, அதை அறிந்துகொள்ளும் சுதந்திரம், செயல்படுத்தும் விதம் என எல்லாமே எல்லைகளுக்கு உட்பட்டது.

பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை, பெருமாளுக்குப் புளியோதரை, அனுமாருக்கு வடை, அம்மனுக்கு மாவிளக்கு, கருப்புசாமிக்கு ஆடு என வேண்டுதல் வேண்டாமை இலாத தெய்வங்களுக்கே தரம் பிரித்து நேர்த்திக்கடன் செலுத்தும் நம் நாட்டில் அரசியல்வாதிகள், அதிகாரத்தில் உள்ளவர்களிடம் எதை வேண்டினாலும் அவர்கள் வேண்டுவதைத் தரவேண்டும் என்பதுதானே நியதி?

ஐயாரப்பனுக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் புருஷோத்தமனுக்கும் சொன்னதைச் செய்யுமளவு ஆசைகாட்டி, ஆளைக்காட்டி அனுசரித்த அல்பா லால்வானி
அந்த மல்டிநேஷனல் மருந்து கம்பெனியின் இந்திய சிஇஓவைக் கை காட்டிய இடத்தில் இந்த பிராஜக்ட்டில் இருந்து அந்தர்த் தியானமானாள். ஆனால், அவள் அவர்களைத் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் அவளை எய்தவர்களிடம் இருந்தது.

********************

அன்புநேசன் மிகுந்த கோபத்திலும் குழப்பத்திலும் இருந்தான். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து, கட்சித் தலைமையுடன் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய ஆலோசனை கூட்டங்கள் எல்லாமும் முடிந்து மூன்று நாளாகிறது.

சென்னைக்குத் தானும் வராது, இவனையும் கிளம்ப விடாது ‘இருடா போகலாம்” என்கிறார் தந்தை. ஐயாரப்பன் இன்னும் டெல்லியில்தான் இருக்கிறானா என்றும் தெரியவில்லை.
அல்பாவும் ஐயாரப்பனும் சிரித்தும் சீரியஸாகவும் பேசிய அந்தக் காட்சி மீண்டும் மீண்டும் அவன் மனதில் ஓடியது.

ஏனோ, அவனை இங்கு பார்த்ததைத் தந்தை உள்பட யாரிடமும் கேட்கப் பிடிக்கவில்லை. ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் எனினும், எண்பது வயதில் அவர் வேறு அடிக்கடி எங்கோ தனியே போய் வருகிறார். திடீரென அம்மா துளசியை குமாரோடு ஊருக்கு அனுப்பிவிட்டார்.

‘இந்த அப்பு… எங்கிட்ட கேக்காம அவளே முடிவெடுத்து அம்முவை அவ தங்கை கிட்ட அமெரிங்காவுக்கு அனுப்பி வெச்சிருக்கா. இதுல என்னை யாரோ இங்க புடிச்சு வெச்சிருக்காப்பல ‘ஜாக்கிரதையா இரு, பத்திரமா இரு, யாரையும் நம்பாதன்னு அடிக்கொரு தரம் கால் பண்ணி வேற இம்சை பண்றா. ஏதாவதுன்னா சொல்லுடீன்னாலும் சொல்றதில்ல…’

தன் அறைக்குள்ளேயே நடந்தபடி யோசனையில் இருந்தவனை நிறுத்தியது அலைபேசி அழைப்பு.

‘மணிசங்கரா?’

“ஸார், அந்த சமீர் கேட்கர் இன்னைக்கும் வந்தார். உங்க முடிவு என்னன்னு கேட்டார். அதோட… “

“அதோட?”

“எல்லா அத்லெட்ஸுக்குக்கும் காம்ப்ளிமென்ட்டா அவங்க கம்பெனியோட புரோட்டீன் பவுடர் பாக்கெட்ஸ் குடுத்துட்டுப் போய் இருக்கார் ஸார்”

“ம்ம்…. அதோட ஃபோட்டோ அனுப்புங்க மணி ஸார். நான் ரெண்டொரு நாள்ல சென்னை வந்துடுவேன். நாம நேர்லயே கலந்து பேசி முடிவு பண்ணலாம்”

“டன் ஸார்”

சும்மா இருப்பதற்கு கூகுளில் incognito modeஐ ஆன் செய்து, அந்த சர்வதேச மருந்து கம்பெனியின் பின்னணியைத் தேட, அவர்களது வீச்சு வியப்பளித்தது.

தன்னோடு படித்த, வெளிநாட்டில் பழகிய, நெருங்கிய, நம்பிக்கையான நட்பு வட்டத்தில் விசாரித்தான்.

“செம கம்பெனிடா அன்பு. இன்னி தேதில உலகத்துல இருக்கற எல்லா நாட்லயும் வியாபாரம் பண்றான். அதை விடு, உனக்கேன் இது… நீ அரசியலை விட்டு மருந்து விக்கப் போறியா என்ன?” என்றனர்.

‘மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், ஏன் சென்னையிலேயே அளவில், பயிற்சி பெறும்
வீரர்களின் எண்ணிக்கையில் பெரிதும், இந்த உதவிகளுக்கான அவசியமும் உள்ள எத்தனையோ விளையாட்டுப் பயிற்சிப் பள்ளிகள் இருக்கையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஏன்?’ என்ற கேள்வி எழுந்தது.

முதல் வேலையாக இரவு பத்தரை மணி ஃப்ளைட்டில் சென்னைக்கு டிக்கெட் புக் செய்தவன், தன் கையில் கிடைத்த முக்கியமான சாமான்களை பேக் செய்து, தந்தையிடம் சொல்ல எண்ணி, அவரது அறைக்குச் செல்ல, வேலையாள் “சாப் இன்னும் வரவில்லை” என்றான்.

‘எம்பது வயசுல நைட் எட்டு மணி வரை எங்கதான் போவாரோ’ என்று எண்ணியபடி, புருஷோத்தமனுக்கு புலனத்தில் பை சொல்லிப் பறந்துவிட்டான்.

********************

அம்மா சீதாவுடனும் மகள் அமுதாவுடனும் நீண்ட நேரம் அலைபேசிய அபர்ணா, எல்லா சேனல்களையும் சிறிது நேரம் ஓட்டிப் பார்த்து, உடல் சில்லிடும் வரை ஷவருக்கு அடியில் நின்றவள், பிறகு லேப்டாப்பை திறந்து சற்று நேரம் அலுவலக வேலையைப் பார்த்தாள். மணி பன்னிரண்டைத் தாண்டவும் விளக்கை அணைத்துப் படுத்தும் தூக்கம் பிடிக்காமல் புரண்டாள்.

மொபைலைக் கையில் எடுத்து, தன்னைப்போல் வாட்ஸ்ஆப் பக்கம் செல்ல, அன்புநேசனை கடந்த நான்கு மணி நேரத்துக்கு மேலாக ஆன்லைனில் காணோம். ஒன்பது மணியிலிருந்து எத்தனை முறை அழைத்தாயிற்று. நேரத்தைப் பொருட்படுத்தாது அழைக்க, மீண்டும் யாரோ ஒரு ஹிந்திக்காரி ஸ்விட்ச்டு ஆஃப் என்றாள்.

அழைப்பு மணி அடித்தது. வாசலில் கூர்க்காவும் அவுட்ஹவுஸில் கணேசன்- காவேரியும் இருக்கிறார்கள்தான். ஆனாலும், சற்றுப் பயமாக இருந்தது.

கையில் கிடைத்த சில்க் ரோபை நைட்டியின் மேல் (அன்புநேசனுடையது) மேல் அணிந்தபடி, வழியெங்கும் குறைந்தபட்ச விளக்குகளைப் போட்டுக்கொண்டே கீழே இறங்கி வாயில் கதவை நோக்கிச் சென்றவள், ‘தெரியாத ஆளா இருந்தால் செக்யூரிட்டி உள்ள விடுவானா, சேஃப்டி அலாரம் அடிக்காதா, சிசிடிவி ஆன்ல தானே இருக்கு… ‘சும்மா எல்லாத்துக்கும் பயந்து நடுங்கறடீ’ன்னு அவர் சொல்றது கரெக்ட்தான்’ எனத் தன்னையே தைரியப்படுத்திக்கொண்டு கதவைத் திறக்க, அந்த அவரே சுவர் போல நின்றான்.

சட்டென கதவைத் திறக்காத எரிச்சலில் அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவன், எப்போதோ வாங்கிய தன் இரவு உடையில் மனைவியைப் பார்த்ததும் “ஏங்கிப் போய்ட்டியாடீ, என்னோடதைப் போட்ருக்க… நம்ப முடியலையே…”

திடீரென வந்து நின்ற கணவனைக் கண்டு மகிழ்ச்சியும் ஆசுவாஸமும் அடைந்தவள், அவன் சொன்னபிறகே தன்னைக் குனிந்து பார்த்து, எதுவும் சொல்லாது அவனை ஆராய்ந்தாள்.

“என்னடீ…?”

“என்ன தீடீர்னு… ஏன் சொல்லலை… ஏர்போர்ட்டுக்கு கார் கூட அனுப்பச் சொல்லலையே…”

“...”

அவனை நெருங்கிய அபர்ணா “நேசா, ஆர் யூ ஆல்ரைட்… எதுவும் பிரச்சனை இல்லையே?” என அவனைத் தொட… பட்டென வாசல் கதவைச் சார்த்தியவன், தன்னையே ஒரு முறை சுற்றினான்.

“முழுசா பார்த்துட்டியா… பசியைத் தவிர எனக்கு வேற ஒன்னும் இல்ல. நான் போய் குளிக்கறேன். ஏதாவது சாப்பிடக் கொண்டு வா, ப்ளீஸ்”

“ப்ச்… இதுக்கு என்னத்துக்கு ப்ளீஸ்…”

“சீக்கிரம் மேல வாடீ!”

மிளகாய்பொடியுடன் சுடச்சுட ஐந்து இட்லிகளும் பனங்கல்கண்டு போட்ட பாலும், தேடி எடுத்த வாசனை பாக்கும் எடுத்துக்கொண்டு படியேறியவளுக்கு ஏனோ சிரிப்பு.

அபர்ணா அறைக்குள் நுழைகையில், குளித்துவிட்டு டீ ஷர்ட்டை மாட்டிக்கொண்டிருந்த அன்புநேசனுக்கு இட்லி தீர்ந்த பிறகுதான் பேச்சே வந்தது.

“அப்பு, கிச்சன்ல வேர்க்கலயா உனக்கு, அந்த ரோபை அவுரு முதல்ல”

“...”

பால் மக்கை எடுத்து உறிஞ்சியவன் “வெரி நைஸ்… அப்பு, நீ கொஞ்சம் குடிச்சுப் பாரு, வா”

“பரவாயில்ல”

“வான்னா வரணும்”

அருகில் அமர்ந்தவளிடம் பாலைக் கொடுத்தவன், அவள் நெற்றியில் வியர்வை பொடித்திருந்ததை ஊதி, அவனே அவள் அணிந்திருந்த ரோபின் நாடாவைத் தேடி விடுவித்து விலக்க, அபர்ணா நெளிந்தாள்.

“ஏய்… எங்கிட்ட என்…”

இதுநாள் வரை அவன் எப்போதோ சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்து, அபர்ணா அணியாது உள்ளேயே கிடந்த ஸ்லீவ்லெஸ் நைட்டியை அவளது சில்க் ரோபின் உள்ளே கண்ட அன்பு நேசன் பேச்சை நிறுத்தி விசில் அடித்தான்.

அபர்ணா மெதுவான குரலில் “யாரும் இல்லன்னு…”

“ஆ…ஹான்”

**********************

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி…

மறுநாள் காலையிலேயே அகாடமிக்கு சென்ற அன்புநேசனுக்கு முன்பே, கையில் நிறுவனத்தின் லோகோ பதிக்கப்பட்ட ஜெர்ஸி, வாட்டர் பாட்டில், ஷூ, ஹெட் மற்றும் ரிஸ்ட் பேண்டுகள், தொப்பி சகிதம் காத்திருந்தான் சமீர்.

அன்புநேசனைப் பார்த்ததுமே, தன் நிறுவனத்தின் நோக்கம், திட்டம், விளம்பரம், அதன் பின்னணி என கடகடவென ஒப்பித்து, தன் விசுவாஸத்தைக் காட்டினான்.

‘நான் வந்ததை அப்பாக்கே நைட் ஒம்போதரைக்குதான் மெஸேஜ் போட்டேன். அம்மா கிட்ட கூட இன்னும் பேசலை. அதுக்குள்ள இவனுக்கு யாரு சொன்னது?’

“மிஸ்டர் சமீர், ஏற்கனவே சர்வ தேசப் போட்டிகள்ல பங்கு எடுத்துக்கிட்டவங்க, தங்கம், வெள்ளி, வெண்கலம்னு மெடல் வாங்கினவங்க ஹரியானாலயும், நார்த் ஈஸ்ட்லயும் நிறைய… அவங்கள்ல பலர் பிரபலமானவங்க கூட. அப்படி இருக்கும்போது எங்களை எப்படி தேர்ந்து எடுத்தீங்க?”

“அங்கேயும் சில இடங்கள்ல ஸ்பான்ஸர் செய்யறோம் ஸார். வசதி இல்லாத வீரர்களுக்கு வாய்ப்பு தரணும்கறதுதான் எங்க லட்சியம். அதனாலதான் நீங்க செய்யற சேவைக்கு எங்களால ஆன ஒரு சின்ன பங்களிப்பு….”

‘எதே, இந்தியாக்கு வந்து ஆறு மாசம் கூட ஆகல, அதுல ஒத்த அகாடமிக்கே ஆறுகோடி ரூவா சின்ன பங்களிப்பா… சரிதான்!’

“ம்…”

“அது மட்டும் இல்லை ஸார். உங்க அகாடமி இருக்கற ஏரியா, பேக்ரவுண்ட்…சப் ஆட் ஃபிலிம் கே லியே பஹுத் அச்சா ஹே…”

“ஓகே மிஸ்டர் கேட்கர். நான் நாளைக்கு ஈவினிங் கன்ஃபர்ம் பண்றேன்”

“வில் வெய்ட் ஸார். இது உங்களுக்கு ஸார்…” என்ற சமீர், ஒரு பெரிய புரோட்டீன் ட்ரிங்க் டப்பாவும், கம்பெனி லோகோ போட்ட அழகான இன்சுலேட்டட் வாட்டர் பாட்டிலும் கிச்சன் எடை பார்க்கும் கருவியும் அடங்கிய ஒரு பையைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான்.

முதலில் மறுக்க எண்ணிய அன்புநேசன் அதை விடுத்து,

“சமீர், இது உங்களுக்கும் எனக்கும் நடுவுல. ஜஸ்ட் ஓரு க்யூரியாஸிடி… இதனால உங்களுக்கு… ஐ மீன்.. உங்க கம்பெனிக்கு என்ன ஆதாயம்?”

“வெல்ஃபேர் ஸார்…. வழக்கமான கார்ப்பொரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிடி… அதாவது CSR தான் ஸார்” என்றான் சீரியஸாக.

சமீருக்கு சம்பளத்தைத் தவிர, அரைக்கிலோ புரோட்டீன் பவுடர் கிடைத்தாலே அதிகம் என்று புரிய, அன்புநேசன் புன்சிரிப்புடன் அவனை அனுப்பினான்.

******************

அன்புநேசன் வீடு திரும்பியபோது அபர்ணா மின் ஸ்ருதிப் பெட்டியுடன் பாடிக்கொண்டிருந்தாள்.

‘ஓ… இன்னும் நாலு நாள்ல கச்சேரி இருக்கோ?’

அவளைத் தொந்தரவு செய்யாது, மாடி ஹால் சோஃபாவில் அமர்ந்தவன், அப்படியே உறங்கிவிட, பாடி முடித்து எழுந்துவந்த அபர்ணா திகைத்தாள்.

கீழே சென்று மதிய சமையலில் சில மாற்றங்கள் சொல்லி, அன்னாசி + சாத்துக்குடி ஜூஸுடன் (சங்கீதா!) மேலே வர, மாமியார் துளசி அழைத்தாள்.

“அன்பு வந்துட்டானாமே?”

“ஆமாம்மா. ராத்திரி ஒரு மணிக்கு…”

“ஊர்ல இருந்து வந்தா எங்கிட்ட சொல்றது இல்லையா? அவனுக்குதான் வேலை இருக்குன்னா, நீ என்ன செய்யுற?”

“...”

‘ஒரு பிரபல கைனகாலஜிஸ்ட் மாதிரியா பேசறார்… டிபிகல் மாமியார் மெட்டீரியல்… பொண்ணு பக்கத்துலயே இருக்காளோ…’

“ஹலோ… நான் பாட்டு இங்க கத்திக்கிட்டு இருக்கேன்… நீ பதிலே சொல்லலைன்னா என்ன அர்த்தம்?”

“அதெல்லாம் இல்லம்மா… அவர் வரப்போறார்னு எனக்கும் தெரியாது. காலங்கார்த்தாலயே வெளில கிளம்பிப் போய்ட்டார்…”

அபர்ணா குரலைத் தழைத்தாலும், அம்மாவின் குரல் அன்புநேசனை எழுப்பி விட,

“அப்பு, ஃபோனை எங்கிட்ட குடு”

‘சண்டை போடற மாதிரி எதுவும் சொல்லிடாத…’ என்ற பார்வையுடன் கொடுத்தாள்.

“அம்மா, அன்பு பேசறேன்… சொல்லுங்க”

“நீ அங்க இருக்கும்போது கூட அவ என்னை உங்கிட்ட பேச விடலை பாருடா”

“அம்மா, அக்கா கூட இருக்காளா?”

“ஆமா, ஏன்?”

“நெனச்சேன். அது சரி… ஐய்…ம்ஹ்ம்… மாமா எங்க, நல்லா இருக்காரா?”

“யாரு, மாப்பிள்ளையா… இருவது நாளுக்கு மேல ஆச்சு… பொன்னி கிட்ட .அவங்க ஊருக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போனவரை இன்னும் ஆளைக் காணும்…”

‘அடப்பாவி!’

“சரிம்மா, நான் அப்புறம் வந்து பாக்கறேன்”

அபர்ணா கொடுத்த ஜூஸை ஒரே மூச்சில் குடித்தவன்,

“அப்பு, கேட்டியா… இந்தாளு பொய் சொல்லிட்டு
டெல்லில எவளோடயோ பொறுக்கறான்…’

கவலையோடு இடம் வலமாகத் தலையாட்டிவளிடம், சமீர் கேட்கர் கொடுத்த பையைக் கொடுத்தான்.

“என்னதிது?”

“பாரு” என்றவன், விவரம் சொல்ல, அபர்ணா முகம் மாறினாள்.

‘ஓ, அதுக்குள்ள இங்கேயே வந்தாச்சா?’

“என்னடீ?”

“என்ன மாதிரி ஆட்? ஸ்டார்ட் அப் ஆரம்பிச்ச பத்து வருஷமா நம்ம அகாடமிக்கு நாங்கதானே ஆட்ஸ் பண்றோம்?”

“நோ ஐடியா… பட், இது வழக்கமான பேப்பர், போஸ்ட்டர், சின்ன விளம்பரமா இருக்காதுன்னு தோணுது. டீவி சேனல்ஸ்ல, யூட்யூப், இன்ஸ்டால பிராட்காஸ்ட் ஆகுற மாதிரி இருக்கலாம். கொஞ்சம் பெரிய்ய்ய ஆடா (Ad) இருக்கலாம்”

“நீங்க எஸ் சொல்லிட்டீங்களா?”

“இன்னும் இல்ல. இவ்ளோ நல்ல ஆஃபரை மிஸ் பண்ணவும் மனசு வரல. அத்லெட்ஸுக்கு ரொம்ப உதவியா இருக்கும். ஆனா… ம்ப்ச்… என்னால ஒரு முடிவுக்கும் வர முடியலடீ”

சில நிமிட மௌனத்திற்குப் பின், எழுந்த அபர்ணா “என்னோட வாங்க” என,

“அப்…பூ…” எனக் கிண்டலாகத் தொடங்கியவன், மனைவியின் முகத்தில் தெரிந்த தீவிரத்தில், அமைதியாக அவள் இழுத்த இழுப்பிற்குச் சென்றான்.

லேப்டாப்பின் இன்டர்நெட் கனெக்ஷனைத் துண்டித்து விட்டு, ஒரு ஃப்ளாஷ் கார்டை பொருத்தியவள்,

“என்னை திட்டக்கூடாது, எங்கிட்டக் கோபப்பட்டுக் கத்தக் கூடாது. சம்மதம்னா எனக்குத் தெரிஞ்சதை, நான் கண்டு புடிச்சதை சொல்லுவேன்”

சிரிப்புடன் அபர்ணாவின் மூக்கைப் பிடித்து ஆட்டியவன்,
“என்னடீ கண்டிஷன்லாம் பலமா போடற?”

வாக்குக் கேட்டு அமைதியாக நீண்ட அவள் கையில் கையை வைத்தான் அன்புநேசன். எதிரே திரை ஒளிர்ந்தது.

*********

அல்பா லால்வானியின் பின்னணி, அவள் வேலை பார்க்கும் ஸ்போர்ட்ஸ் என்ஜிஓ, அதற்குப் படியளக்கும் ஊள்ளூர் மற்றும் சர்வதேச மருத்துவ மற்றும் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் (FMCG (Fast-Moving Consumer Goods)…

‘வெயிட்.. வாட்…?’

அந்த என்ஜிஓவின் பெரும்பகுதி முதலீட்டுப் பங்குதாரர்களில்
அதிமுக்கியமான இடத்தில் அந்தக் குறிப்பிட்ட சர்வதேச மருந்து தயாரிக்கும் நிறுவனமும் இருந்தது. இந்த நிறுவனங்கள் அனைத்துமே மருந்துகள், மருத்துவ உபகரணங்களைத் தயாரிப்பதைத் தவிர, புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தனர்.

அல்பா லால்வானி ஒரு லாபியிஸ்ட், தரகு வேலை செய்பவள் என்பது அன்புநேசனுக்கு மட்டுமின்றி, டெல்லியின் அநேக அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியும். ஆனால், அவளது வியாபகம் எதிர்பாராத பரிமாணத்தில் இருந்தது.

‘அதான் அலட்சியமா ஆறுகோடிய தரேங்கறான்’

‘அப்பா புருஷோத்தமனுக்கு தெரியாம ஐயாரப்பனோட வால் டெல்லி வரை நீளாது’ என யோசிக்கும்போதே அடுத்தடுத்து விரிந்த ஆதாரங்களால், அன்புநேசனின் ரத்தத்தில் கோபமும் அழுத்தமும் ஏறியது.

அவன் முகம் போன போக்கில், திரையில் அடுத்து வரப்போவதை அறிந்திருந்த அபர்ணா, ஃபைலை சிறிது ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து தவிர்க்க முனைய,

“கைய எட்றீ, என்ன கருமமா இருந்தாலும் பார்த்துத் தொலைக்கிறேன்” என்று எரிந்து விழுந்தான்.

கம்பெனி விஷயத்தை விட மலை, பனி, அருவி, பசுமை, வனம் என வெவ்வேறு பின்னணியில், நாடுகளில், அழகான பால்கனிகளில், வீடு அல்லது ரிஸார்ட்டின் நுழைவாயில்களில், மொட்டை மாடியில், நீச்சல் குளத்தில் என தந்தை புருஷோத்தமனை அவனுக்கு முகம் தெரிந்த, தெரியாத பெண்களுடன்…

அம்சமானதொரு பண்ணை வீட்டில் அழகானதொரு அம்மாயியுடன் பசுவும் கன்றுமாய் கிருஹப்பிரவேசம் செய்வதைப் பார்த்ததில், அபர்ணாவைப் பார்க்கவே கூசியவன், திடீரெனப் பன்மொழிப் புலவனாகி தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி என எல்லா பாஷையிலும் உள்ள கெட்ட கெட்ட வார்த்தைகளால் ஐயாரப்பனைத் திட்டினான்.

அன்புநேசனின் கையைப் பற்றிய அபர்ணா “ம்ப்ச்… என்னதிது?” என்றவள், ஸ்கிப் பட்டனை அழுத்தினாள்.

“என்னை விடு சொல்றேன். அதை ஆன் பண்ணு. மொத்த அசிங்கத்தையும் பார்த்துடறேன். இந்தாளுக்கு இந்த வயசுல தேவையா இதெல்லாம்… அது சரி…இது எத்தனை வருஷமா நடக்குதோ… ஒன்னுதானா இல்ல…”

“...”

மீதமிருந்த காணொளியில்…

வெவ்வேறு நாடுகளின் காப்புரிமைச் சட்டங்களின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இருக்கும் தடை, அது எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்கள்…

கடந்த சில வருடங்களில், ஓரிரு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சிலர் இதுபோன்ற ராட்சதப் பன்னாட்டு மருந்து மற்றும் FMCG (உதாரணம்: குளிர்பானங்கள், கன்ஃபெக்ஷனரி, காஸ்மெடிக்ஸ் போன்ற சுலபமாக உபயோகிக்கக் கூடிய பொருள்கள்) பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் மருந்துகளை/ மற்ற தயாரிப்புகளை பயன் படுத்தியவர்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஊக்கமருந்து ஊழலில் (Doping scandal) ஈடுபட்டதாக எழுந்த புகார்களில் இந்தக் குறிப்பிட்ட நிறுவனமும் இருந்தது.

அபர்ணா லேப்டாப்பை அணைத்து, ஃப்ளாஷ்கார்டை பத்திரப்படுத்தியதை உணராத அன்புநேசன் இலக்கற்ற பார்வையுடன் அமர்ந்திருந்தான்.

நிறுவனத்தின் பிரம்மாண்டமும் அவனது அகாடமி மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய வசதி வாய்ப்பு ஒருபுறம்…

உதவி, விளம்பரம் தனது அகாடமியை நேரடியாக நெருங்கியதோடு நில்லாமல் அல்பாவை வைத்து ஐயாரப்பனைத் தொடர்பு கொண்டதற்கான காரணம் என்ன என்ற கேள்வி ஒருபுறம்…

பொதுவெளியில் சிறந்த தம்பதிகளாக அறியப்படும் பெற்றோர்… தடம் மாறிய தந்தை…

‘யாரு கண்டா, எத்தனை வருஷமா அம்மாக்கு துரோகம் செய்யறாரோ?’

‘இந்த ஐயாரப்பன்… க்ரிஞ்சா சொல்லணும்னா பாம்புக்கு பால் ஊத்தி, இடுப்புல கட்டிக்கிட்டு அலையறார் அப்பா…”

‘அவனைப் பத்தி அப்பு எத்தனை தரம் சொல்லி இருப்பா?’

‘அம்மாவைப் பத்தி கூட ஏதோ சொன்னாளே…’

‘அப்பா ஏன் இப்டி மாறிப்போனாங்க… அந்த ஐயாரப்பன் மட்டும் என் கைல சிக்கட்டும்…’

‘அவன் சொன்னா… இந்த அப்பாக்கு மூளை வேண்டாம்? வளர்ந்த பேரப் பசங்களை வெச்சுக்கிட்டு… ஐயாரப்பன் கம்மனாட்டி ***** கல்யாணம் செய்யுற வயசுல பொண்ணை வெச்சுக்கிட்டு…’

“இந்தப் பொன்னி அக்கா… அபர்ணாவை ஆராய்ச்சி செய்யுறதை விட்டு புருஷங்காரன் எங்க போறான், வரான்னு பார்க்கலாம். எங்க, எங்களை நகர்த்தி விட்டா அதிகாரம் தனக்குதான்னு நெனச்சுக்கிட்டு கண்ணுல பட்டி போட்டுக்கிட்டிருக்கா. அவன் என்னடான்னா பன்னி மாதிரி தான் ஊர் மேயுறதோட இல்லாம அப்பாவையும் சேர்த்துக் கெடுத்து வெச்சிருக்கான்”

திடும் என “அப்பு, இதெல்லாம் அம்மாக்கு தெரியுமாடீ?” என்றவனின் குரலில் எப்போதும் இருக்கும் தெனாவெட்டு மறைந்து வேதனை தொனித்தது.

“...”

“கேக்கறேன்ல?”

“அப்பாவைப் பத்தி அம்மா புலம்பறான்னு எப்போவே சொன்னேன். முன்னால எல்லாம் அம்மா இப்டி வெடுவெடுன்னு பேச மாட்டா”

சற்றே தயங்கியவள் “உங்க அக்கா சொல்றதுல இன்ஃப்ளூயன்ஸ் ஆனாக் கூட எங்கிட்ட ஓரளவு சரியாதான் பேசுவா…”

“...”

அன்புநேசன் கண்களை மூடிக்கொண்டான். கண்ட காட்சிகள் தந்த கற்பனையில் தலையை உலுக்கினான்.

‘தீர்வில்லாத இந்தப் பிரச்சனையை யோசித்து என்ன பலன்? தள்ளாத வயதில் எதையும் ‘தள்ளாத’ அப்பா. மிஞ்சிப் போனால் இன்னும் எத்தனை நாள்?’

‘அம்மா கிட்ட போய் இதை எடுத்து வெச்சுப் பேசிப் பஞ்சாயத்தா பண்ண முடியும்?’

“நேசா…”

நெற்றியில் பதிந்து விலகிய இதழ்களின் இதத்தில் கண்களைத் திறந்தான்.

“சாப்பிட வாங்க. மணி நாலாகப் போறது”

********************

மாலையில் அபர்ணாவுடன் பயிற்சி செய்யவென பக்க வாத்தியக் காரர்கள் வந்துவிட, அன்புநேசன் மீண்டும் அகாடமிக்கு சென்றான். இரவில் தூக்கம் வராது புரண்டவனை வற்புறுத்தி ஒரு லாங் டிரைவ் அழைத்துச் சென்றாள் மனைவி.

மறுநாள் காலையிலேயே சமீரிடமிருந்து யூட்யூபில் வெளியான இரண்டு விளம்பரங்கள் (ஹரியானா, அஸ்ஸாம்) வாட்ஸ்ஆப்பில் வந்தது.

அந்த விளம்பரத்தில் இருந்த ஹரியானாவைச் சேர்ந்த தடகள வீரர்கள் பயிற்சி பெற்ற நிறுவனம் அன்புநேசனைப் போன்றே இந்தியன் அதெலெடிக் ஃபெடரேஷனின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருடையது. எம்பியாக இருந்தவர். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்.

விளம்பரத்தை அபர்ணாவிடம் காட்டினான். கணவனின் செய்கை ஆச்சரியம் அளித்தாலும், அமைதியாகப் பார்த்தவள்,

“எனக்கு ஒரு சந்தேகம்”

“கேளு”

“என்னதான் சிட்டிங் எம்பின்னாலும், நீங்க, உங்கப்பா ரெண்டு பேருமே எதிர்க்கட்சில இருக்கீங்க. அப்புறம் ஏன் உங்க கிட்ட வராங்க?”
 

Author: VedhaVishal
Article Title: தோற்ற மயக்கங்கள் 10
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Active member
Jun 19, 2024
178
28
28
Chennai
தள்ளாத வயதில் எதையும் தள்ளாத அப்பா😡😡😡😡😡
அன்பு என்ன பண்ணப் போறான்?
 

Thani

New member
Jun 7, 2026
15
1
3
Deutschland
பெண் ஆசை இந்த வயதிலும் , இதனால் தான் இவருக்கு அழிவு வரப்போகுது,
கெட்ட எண்ணம் கொண்டவர்களை பக்கத்தில வைத்து இருக்கார் பெரியவர் ,இதுவும் ஒரு காரணம் தான்,
 
Jun 19, 2024
49
70
18
Trivandrum
😍😍😍

இந்த எண்பது வயசுல, பேரன், பேத்தி எடுத்ததுக்கு அப்புறம் இவருக்கு இது தேவையா? 🤦🤦 அன்பு இதை எப்படி டீல் பண்ண போறான்? 🤔🤔
 

saradhavasan

Active member
Oct 3, 2024
121
38
28
சென்னை
இன்னும் கண்மூடிதனமா இல்லை வேற ஏதோ உள்ளது இந்த அன்புக்கு..
செயல் வீரனாக இந்த நேசன் எப்போது களம் இறங்குவான்?