• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

தோற்ற மயக்கங்கள் 2

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
30
94
53
Chennai
தோற்ற மயக்கங்கள் 2


பர்ணாவிற்கு மகன் அருள்மொழி பேசுவதைக் கேட்கக் கேட்க, Butterfly effect (எ) பட்டாம்பூச்சி விளைவு என்பது இதுதானோ எனத் தோன்றியது.

உலகின் ஒரு கோடியில் ஒரு பட்டாம்பூச்சி தன் ஒற்றைச் சிறகை அசைத்தால், அதன் எதிரொலியாக மற்றொரு மூலையில் சூறாவளி வரக் கூடுமாம்.

ஒரு சின்ன மென்பொருள் தடுமாற்றம் (software glitch) பெரும் எதிர்விளைவுகளைத் தரக்கூடும்.

இன்னும் எளிதாகச் சொன்னால், தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனைமரத்தில் நெறி கட்டுவது இயற்கைதான் என்கிறது விஞ்ஞானம். அதை மெய்ப்பித்தான் அருள்மொழி.

தாத்தா புருஷோத்தமனின் ஐம்பதாவது மணநாள் விழா முடிந்து, தன் கல்லூரி விடுதிக்குச் சென்று, செமஸ்டர் முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பின் சென்னை வந்த அருள்மொழியிடம் கணிசமான மாற்றம்.

தான், தன் வேலை, படிப்பு, கிடார், டென்னிஸ் என்றிருந்தவன் எந்நேரமும் அரசியல் பேசினான்.

தாத்தாவும் அப்பாவும் அரசியலில் பிரபலமாக இருப்பதும், பழம்பெரும் கட்சியின் தேசியத் தலைவருக்கு மாலை போட, அவர் அவனுடன் நட்போடு பேசியதும், அது ஊடகங்களில் வைரலானதும், அதன் மூலம் கிடைத்த உடனடி பிரபல்யமும், தானாகவே அவனைப் பட்டத்து இளவரசனாக உணர வைத்திருந்தது.

அதுவரை மிக நெருங்கிய வட்டத்துக்கு மட்டுமே யாரென்று தெரிந்தவன், இப்போது கல்லூரி முழுவதும் பிரபலமாகி விட, நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் வந்த நட்பு அழைப்புகள் ஒருபுறம் எனில், அதில் கணிசமான எண்ணிக்கையில் பெண்கள்.

“உனக்கென்னடா, நெனச்சா காலேஜே கட்டலாம்”

“எதிர்கால மத்திய அமைச்சரோட ஒரு செல்ஃபி, ப்ளீஸ்”

“டேய் அருள், உன்னோட ஒரு ஃபோட்டோ போதும்டா, அதைக் காட்டியே எங்கூரு பஞ்சாயத்து போர்டுல சின்னச் சின்னதா காரியம் சாதிச்சுப்பேன்”

“மச்சான், ஃப்யூச்சர்ல எம்பி, மினிஸ்டர்னு ஆன பிறகு உன்னோட மூணு வருஷ ரூம் மேட், என்னை மறந்துடாதடா”

“டேய் மாப்ள, இந்த படிப்பு, கேம்பஸ், வேலை, நைட் ஷிஃப்ட், ஆன்சைட்னு
எங்களுக்குதான் வேற வழி இல்ல. நான் மட்டும் உன் இடத்துல இருந்தா இப்படி டிஜிட்டல், அனலாக், கால்குலஸ்னு உயிரை விட மாட்டேன்”

“மச்சான், அந்த ராம்நகர் டாக்டரோட பொண்ணு இல்ல, உன்னோட ஃபிரண்ட் பண்ணி விட முடியுமான்னு நம்ம கிரி கிட்ட கேட்டாளாம்டா. காலேஜே அவ பின்னால சுத்துது, இப்ப அவ உன் பின்னால”

நண்பர்கள் அனைவரும் தங்கள் ஆச்சர்யத்தை, ஆதங்கத்தை, பரிச்சயத்தை, மெலிதான பொறாமையை ஆளுக்கொரு பாட்டில் க்ளூகோஸாய் ஏற்றியதில், வந்து இறங்கியதுமே அருள்மொழி கட்சியின் அடிப்படை உறுப்பினராகச் சேர, அதுவும் செய்தியானது.

“இந்த வயசுல படிப்புதான்டா முக்கியம், ஒழுங்கா பிஜி பண்ண என்ட்ரன்ஸ் எழுது, இல்லையா கேம்பஸுக்கு போய் ஒரு வேலையை வாங்கு. இந்த அரசியல் எங்கேயும் ஓடிப்போகாது”

“நான் இந்த இன்ஜினீயரிங்கை முடிக்கற வரை நோ பாலிடிக்ஸ் ஓகேவாம்மா?”

“ஒண்ணும் தேவை இல்லை. இதோ, இன்னும் அஞ்சு மாசத்துல படிப்பு முடிஞ்சுடும். நீ ஃபாரின் போய் மேல படிச்சுட்டு வந்த பிறகும் இதே எண்ணம் இருந்தா, அப்ப ஊருக்கு உழைச்சா போதும்”

“என்னம்மா நீ, எல்லாருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா, அரசியலும் மக்களுக்கான ஒரு சர்வீஸ்தானே?”

“இந்த உருட்டெல்லாம் எங்கிட்ட வேணாம். வீணா என்னைப் பேச வைக்காதடா”

“ஏம்மா, அப்பா கிட்ட ரெகமண்ட் பண்ணுவன்னு பாத்தா, இப்படி பேச, எப்படியும் தாத்தா, அப்பா, அடுத்தது நான்தானே”

அமுதா “ஏன், நானா இருக்கக் கூடாதா?”

அருள்மொழி “கிழிச்ச, இன்ஸ்டால நாலு ரிக்வெஸ்ட்டும், நேர்ல ரெண்டு ப்ரபோஸலும் வந்ததுக்கே அழுது ஊரைக் கூட்டுற நீயெல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போற?”

“ கொஞ்சம் சும்மா இருக்கீங்களா, நீங்க ரெண்டு பேரும் வழிவழியா ஆட்சி செய்ய இந்தியா என்ன நம்ம பரம்பரை சொத்தா, அதுக்கு பேரு Nepotism”

“புரியாம பேசாதம்மா”

“யாரு நானா, சரிதான். வேணும்னா உன் அப்பாவும் தாத்தாவும் என்ன சொல்றாங்கன்னு போய்க் கேளேன். அவங்களும் படிச்சு ஒரு வயசுக்குப் பிறகுதான் அரசியலுக்கு வந்தாங்க”

“அவங்களை மாதிரியே நானும் இருக்கணும்னு என்ன அவசியம்?”

“நீ அவங்களை விட ஒருபடி மேலாவே இருந்தாலும், ஒரு விஷயம் ஞாபகத்துல இருக்கட்டும். இங்க ராஜேந்திர சோழன்களை விட ஹுமாயூன்கள்தான் அதிகம்”

“என்னம்மா சரித்திரம் படிக்கிற?”

“அம்மான்னு சொல்லுடா” என்றால், “ஒகே மாம்” என்பவன், தமிழ் என்ற பெயரில் ஒரு வாக்கியத்தில் ஒன்றோ, இரண்டோ தமிழ்ச் சொற்களைப் பேசுபவன், சரஸ்வதி சபதம் சிவாஜி போல் அடிக்கொரு தரம் அம்மா, அம்மா என்றதும், சங்கத்தமிழை வளர்க்கப் பிறந்தவன் போன்ற பாவத்துடன், தப்பாக இருந்தாலும், முயன்று தமிழிலேயே பேசியதும் அபர்ணாவுக்குப் புன்னகையை வரவழைத்தது.

ஹிந்தி ஆசிரியையைக் கண்டாலே காத தூரம் ஓடுபவனை, அமுதா “அண்ணா, நீ எம்பி ஆனா, ஹிந்தில பேசணும்” என்று வெறுப்பேற்றினாள்.

மாடி ஹாலில் இவர்கள் பேசுவதைக் கேட்டபடி படியேறி வந்த தந்தையைக் கண்டதும், ஒரு குட் நைட்டோடு மக்கள் இருவரும் நழுவி விட, சிக்கியது அபர்ணாதான்.

மகன் அருள்மொழி கட்சி அலுவலகத்துக்குச் சென்றது, கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தது, அரசியலில் ஆர்வம் காட்டிப் பேசியது என எல்லாவற்றையும், கணேசன் மூலம் அறிந்துகொண்டு பெருமிதத்துடன் வந்த அன்புநேசன் கேட்டது, அபர்ணா, தொழிலிலோ, அரசியலிலோ தந்தையை விஞ்சிய தனயனாக இருப்பவர்களின் எண்ணிக்கை வெகு குறைவு என்று சுட்டிக்காட்டியதை.

குளித்துவிட்டு வந்து, பரிமாற வந்தவளை நிறுத்தி இட்லி, இடியாப்பம், சட்னி, தேங்காய்பால் என தானே எடுத்து வைத்து உண்ட வேகத்தில் தெரிந்தது அவனது பசி.

கால் மணி நேரத்திற்கு முன் சுமூகமாக “மீட்டிங் முடிஞ்சுது. அப்பாவை இறக்கி விட்டு இதோ வரேன்” என்றவன், இப்போது முரண்டுவது ஏன் எனப் புரியாது, குழம்பினாள் மனைவி.

“என்னங்க, நம்ம அருள்…”

நேசப் புருஷோத்தமன், அபர்ணா சொன்னதைக் கவனியாதது போல் எதையோ தேடும் வேகத்தில் சாமான்கள் கலைந்தன.

“என்ன வேணும்?”

“தலைவலி மாத்திரை”

“மாத்திரை எல்லாம் வேணாம், இந்தாங்க தைலம்”

“...”

அபர்ணா நீட்டியதை வாங்காமல் பார்த்தவனின் எதிர்பார்ப்பு புரிய, படுக்கையில் அமர்ந்தவளிடம்,

“ஸோ, என்னை ஹுமாயூன்னு சொல்ற?”

புரியாமல் முழித்தவளிடம் “நான் இன்னமும் அப்பா நிழல்ல இருக்கற
உதவாக்கரை மகன், அப்படித்தானே?”

அருளிடம் தான் பேசியதை அரைகுறையாகக் கேட்டுத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறான் என்று அபர்ணாவுக்குப் புரிந்தது.

மலையப்பசாமியைத் தரையிறக்க அபர்ணாவிற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது.

“அம்மா, சின்னய்யாவோட துணிங்கள்லாம் இஸ்திரி போட்டு வந்திருச்சுங்கம்மா”

“சரி, அந்த டேபிள்ல வை. பெட்டி எங்க?”

“இதோங்கம்மா”

“சரி, மேல ஏறி அந்த லாஃப்ட்ல இருக்கற சாம்ஸொனைட் ஸ்கை பேகையும் எடு”

கண்டியூரைச் சேர்ந்த கணேசனும், அவன் மனைவி காவேரியும் புருஷோத்தமனின் குடும்பத்திற்குப் பரம்பரையாக ஊழியம் செய்பவர்கள். ஏராளமான எஜமான விசுவாசம். முக்கியமாக ஒரே இனம். இங்கே சென்னையில் அவுட்ஹவுஸில் வாசம். அவர்களது ஒரே மகள் இன்ஜினீயரிங் படிக்கிறாள். கணவனும் மனைவியும் நல்ல உழைப்பாளிகள்.

“நீ போ காவேரி”

இருபது செட் வெள்ளை வேட்டி, சட்டைகளை, அதில் பத்து புத்தம் புதிது, பெட்டியில் அடுக்கத் தொடங்கிய அபர்ணாவுக்குப் பழைய நினைவுகள்.

இவளது திருமணத்திற்கு முன் தங்கை ஹேமா “வெள்ளையுஞ் சொள்ளையுமா தலைவர் காஸ்ட்யூமே தனிதான்டீ அபூ. எதுக்கும் துணி தோய்ச்சு ப்ராக்டீஸ் பண்ணு”

“நானா, சான்ஸே இல்ல, ஊர்ல பாதி லாண்டரி இந்த பொலிடீஷியன்ஸைதான் நம்பி இருக்கு தெரியுமா”

அவளது அப்பா கவலையுடன் அம்மாவிடம் “நாம வேணா அபூக்கு வாஷிங் மெஷின் வாங்கிக் குடுத்துடுவோமா?”

இத்தனைக்கும் அன்புநேசன் அப்போது அரசியலில் இவ்வளவு தீவிரமாக இல்லை.

அத்தனை பெரிய அரசியல் தலைவரின், மத்திய அமைச்சரின் வீட்டையும், அதன் தினசரி பழக்க வழக்கங்களையும் கற்பனை கூட செய்யத் தெரியாத நாட்கள்.

திருமணத்துக்குப் பின் முதல் முறை டஜன் கணக்கில் வெள்ளை வேட்டிகளும் சட்டைகளும் வந்து இறங்கியதைப் பார்த்து, தீபாவளிக்கென பணியாட்களுக்காக என நினைத்தாள்.

காந்தியடிகள் தொடங்கித் தங்களை பரிசுத்தமானவராகக் காட்டுவதற்கும் நம் நாட்டின் வெயிலுக்கும், பளிச்சென மக்களை ஈர்ப்பதற்கும் இந்திய அரசியல்வாதிகள் தேர்ந்தெடுத்தது வெண்ணிறம்.

வெளுத்துக் கட்டுவதும், விதவிதமாகக் கட்டுவதும் அவரவர் நிலையைப் பொருத்தது.

அறைக்கதவு திறக்கப்பட்டதைக் கூட உணராது, எந்திரம் போல் உடைகளை எண்ணி அடுக்கினாள்.

பாராளுமன்ற பட்ஜட் கூட்டத்தொடர் என்பதோடு, பொதுத் தேர்தலுக்கு முன்பான கடைசி கூட்டத்தொடரும் என்பதால், தலைநகர் டெல்லியில் நீண்ட நாட்கள் தங்க வேண்டும். குளிருக்கான உடைகள் டெல்லி வீட்டிலேயே இருக்கிறது.

கப்போர்டின் இழுப்பறையைத் திறந்து, கணவனின் உள்ளாடைகள், கைக்குட்டைகள் என எடுத்தவளைப் பின்னிலிருந்து அணைக்கத் திமிறி அடங்கியவள், அவசரமாக அறைக் கதவைப் பார்க்க

“தாழ் போட்டுதான் இருக்கு”

“அமுதா…”

“வந்தா கதவைத் தட்டுவா”

“...”

அபர்ணாவைத் தன்புறம் திருப்பித் தாடையைப் பிடித்து முகத்தை நிமிர்த்தியவன் “உன்னால என்னோட வரமுடியாது, அப்படிதானே?”

‘கடவுளே, இவனுக்குப் புரியவே புரியாதா? அடுத்த வாரத்தில்
அமுதாவின் ப்ளஸ்டூ பரீட்சை ஆரம்பம். மார்ச் மாசம் வரப் போகுது. கம்பெனியின் வரவு செலவுகளைப் பார்க்க வேணாமா? இவனோட டெல்லிக்குப் போனா, மணிக்கணக்கா வீட்ல கொட்டு கொட்டுனு தனியா இருக்கணும். அது மட்டும் இல்லாம…’

‘அப்பு…”

“ஸாரிங்க, அம்முக்கு எக்ஸாம் இருக்கு. அவளைத் தனியா விட்டு நான் எப்படி வர முடியும்?”

“...”

அன்பு நேசனை அணைத்துக்கொண்டவள் “நேசா, ப்ளீஸ். அம்மு எவ்வளவு பயந்து போயிருக்கான்னு உங்களுக்குத் தெரியாதா?”

“இத்தனை செக்யூரிட்டியை மீறி, ஒருத்தன் எம் பொண்ணை ஸ்டாக் (stalk) பண்ணி, பக்கத்துல வந்து பேசி இருக்கான், அதுவும் அம்மு மைனர் வேற. உன்னாலயும் எங்கம்மாவாலயும்தான்டீ அந்தப் பொறுக்கித் *****லிய இன்னும் உயிரோட விட்டு வெச்சிருக்கேன். எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு… “

“...”

“பேசுடீ”

அபர்ணாவின் சிந்தனை அமுதா தன் மகள் என்பதைத் தாண்டி ஓடியது.

‘உன் பொண்ணுன்னா அத்தனை உசத்தி, ஊரான் வீட்டுப் பொண்ணுன்னா பரவாயில்லையா?’

‘எட்டு நாள் உம்மக பின்னால சுத்தினவன் உயிரோடையே இருக்கக் கூடாது, எட்டு மாசம் நான் போன நாட்டுக்கெல்லாம் என் பின்னால வந்த உன்னைக் கல்யாணம் பண்ணி, குடும்பம் நடத்தி, குழந்தை பெத்து… நல்லா இருக்குடா உன் நியாயம்’

“அப்ப்ப்பூ, என்னடீ நின்னுக்கிட்டே தூங்கற?”

“ம்… ம்ஹும்”

“மார்ச் ஏழாம் தேதி நாம பார்ட்டி ஹோஸ்ட் செய்யறோம், அதுக்கு வந்துடுவல்ல?”

“அம்மு…”

“அவளுக்கு கணக்கு பரீட்சைக்கு முன்னால ஆறுநாள் லீவு இருக்கு. அவளுக்கும் சேர்த்துதான் டிக்கெட் போட்டிருக்கேன். நோ எக்ஸ்யூஸ். படிக்கிற குழந்தை எங்க இருந்தாலும் படிக்கும். அப்படி இல்லைன்னா கடைசி நிமிஷத்துல படிச்சுதான் என்ன ஆகப்போகுது?”

“சரி, வரேன்”

“குட், இது என் பொண்டாட்டி”

கறுப்பு நிற கால் சராயுடன் நின்றவன், கதவு தட்டப்பட, அபர்ணாவை ஒரு முறை இறுக்கி அணைத்து, விடுவித்தான்.

கதவு திறந்து அமுதா நுழைகையில், வெகு இயல்பாக நீல நிற டெனிம் ஷர்ட்டை அணிந்து, பெல்டடை மாட்டிக் கொண்டவன்,

“அம்மு, டாடியோட ஹேண்ட் லக்கேஜ்ல திங்ஸ்லாம் சரியா இருக்கான்னு செக் செய்டா”

சரி பார்த்த அம்மு, தந்தையின் மொபைலை சார்ஜரில் இருந்து எடுத்துக் கையில் தந்தவள், சார்ஜரையும் பவர்பேங்க்கையும் பையில் வைத்தாள். மகளை உச்சி முகர்ந்தான்.

“டாடீ”

“என்னடீ பட்டு?”

“பயமா இருக்கு டாடீ”

“டாடி இருக்கும்போது என்னடா பயம்?”

“நீங்க டெல்லிக்கு போய்தான் ஆகணுமா டாடீ?”

“ஆமாண்டா தங்கம், உனக்குத் தெரியாதா?”

“டாடீ, அவன் திரும்ப வந்தா…”

‘எங்கேருந்து திரும்ப வர்றது? இனி அவன் எழுந்து நிக்கறதே கஷ்டம்’

“இங்க பாரு, அழக்கூடாது, தைரியமா இருக்கணும் . அப்பா எங்க இருந்தாலும் உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன்”

அபர்ணாவின் காதுகளில் ‘என் சக்திக்கு முடிஞ்ச வரைல பேசிப் பார்த்துட்டேன். அபூவும் ஹேமாவும் நல்ல பேரோட, மரியாதையா சௌக்யமா வாழணும்னா நாம இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சுதான் ஆகணும்டீ சீதா” என்ற தந்தை ஸ்ரீநிவாசனின் குரல் ஒலித்தது.

முற்பிறவியாகத் தோன்றிய அந்த நாட்கள்…

அபர்ணாவின் தாய் சீதா BSNL லிலும், தந்தை ஸ்ரீநிவாசன் தேசிய வங்கியில் அதிகாரியாகவும் இருந்தனர். ஒன்றரை வயது வித்தியாசத்தில் அபர்ணாவின் தங்கை ஹேமா.

ஸ்ரீநிவாசனின் தந்தை மகனது சிறு வயதிலேயே இறந்துவிட, தாயார் ராஜலக்ஷ்மி அரசு பள்ளியில் இசை ஆசிரியையாக இருந்தார். மிக நன்றாக வீணை வாசிப்பார். பணியிலிருந்து ஓய்வு பெற்றுப் பேத்திகளைப் பார்த்துக் கொண்டதோடு பாட்டு வகுப்புகளும் நடத்தினார்.

பாட்டியின் பென்ஷன், பெற்றோரின இரட்டை வருமானம் அளவான சிக்கனமான செலவு எனத் திட்டமிட்ட சீரான வாழ்க்கை.

இவர்கள் பெஸன்ட் நகரில் இருக்க, சீதாவின் பெற்றோர் மகனுடன் நங்கநல்லூரில் இருந்தனர்.

பாட்டு, வீணை என இசையோடு இணைந்து வளர்ந்த அபர்ணா சிறு வயதிலேயே அற்புதமாகப் பாடினாள். ஹேமாவும் பாடுவாள் எனினும், அத்தனை நாட்டமில்லை.

பதின்ம வயதின் தொடக்கத்தில் திருவையாறு தியாகராஜ ஆராதனையில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த மூன்றே வருடங்களில், டிஸம்பர் சீஸனில் அபர்ணா ஸ்ரீநிவாசனின் கச்சேரி இல்லாத சபாவே சென்னையில் இல்லை எனலாம்.

கல்லா நிறையட்டும் என மகளைக் கணக்கின்றி கச்சேரி செய்யப் பெற்றோர் அனுமதிக்கவில்லை.

ஆனாலுமே தொலைக்காட்சிகள், வானொலியில் பாடும் வாய்ப்புகள் தேடி வந்தன. குறுந்தகடுகள் வெளியானது.

குறிப்பாக முத்துஸ்வாமி தீக்ஷிதரின் சமஷ்டி சரணங்களின் தொகுப்பும், காவடிச் சிந்து பாடல்களின் தொகுப்பும் பதிந்த வேகத்தில் பறந்தன.

அபர்ணா தன் கீர்த்தி தன்னையும் தன் இயல்பு வாழ்க்கையையும் பாதிக்காது நடக்க அவளது வீடு உதவியது.

சங்கீத சாதகத்தைத் தவிர, சினிமா, டீவி, படிப்பு என வழமையான வாழ்க்கைதான். அளவான நட்பு வட்டம்.

பாட்டையும் படிப்பையும் சமமாகப் பாவித்த அபர்ணா, சென்னை, குரோம்பேட்டையில் உள்ள MITல் கணினித் துறையில் சேர்ந்தாள்.

திரையிசையின் தேவனாகப் போற்றப்படும் மியூஸிக் டைரக்டர், அபர்ணாவைப் பாட அழைத்தார்.

“கர்நாடக இசையை அடிப்படையா கொண்ட பாட்டுகள். புதுக் குரலா இருந்தா நல்லா இருக்கும்னு சார் அபிப்ராயப் படுறார்” என்றார் அவரது காரியதரிசி.

‘சினிமால பாடணுமா, நமக்கு சினிமா சரியா வருமா, முதல்ல சினிமா நமக்குத் தேவையா , கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு” போன்ற விவாதங்களுக்குப் பின் ‘இந்த ஒரு தரம் மட்டும்’ என்ற நிபந்தனையோடு சம்மதித்தனர்.

“உங்க பொண்ணு வந்ததும், பாடினதும் ரெண்டாம் பேருக்குத் தெரியாம நான் பாத்துக்கறேன். நீங்க கூடவே வரலாம். அவங்க சேஃப்டிக்கு நான் கியாரண்டி” என இசையமைப்பாளரே உறுதி கூறினார்.

அப்போது கல்லூரியில் இரண்டாம் வருடப் படிப்பு முடிந்து விடுமுறை சமயம். அமைதியாகப் போய் பாடிவிட்டுத் திரும்பியவள், தன் தந்தையுடன் கச்சேரிக்கென ஒரு மாதம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்குப் பயணமானாள்.

அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்ஸி என மூன்று இடங்களில் கச்சேரி இருந்தது.

சீதாவின் அண்ணா பிள்ளை முகுந்தன் நியூஜெர்ஸியில் இருந்ததால், முதலில் அங்கே சென்றனர். ஐந்து வருடங்களாகத் தானே சமைத்து சாப்பிட்டு, வீடு, வேலை, கணினி என்றே காலம் கடத்திய முகுந்தனுக்கு இவர்களது வருகை உற்சாகத்தைத் தந்தது.

அவன் இங்கு வரும்போது சிறுபெண்ணாக இருந்த அபர்ணாவின் தோற்றத்திலும், அந்த சிறிய அபார்ட்மென்ட்டில் மெலிதான கொலுசொலியுடன் அவளது அசைவுகளும், ஆறு வருடங்கள் பெரியவன் என்றாலும், முன்பு பேசுகையில் முகுந்தன் என்று பெயர் சொல்லி அழைப்பவளின் புதிதான தயக்கமும் முகுந்தனைப் பித்துப் பிடிக்கச் செய்ததில், இது நாள் வரை இல்லாதபடி அபூ, அபர்ணாவாக இருந்தவளை அத்தை மகளாகப் பார்த்தான்.

அபர்ணா சாதகம் செய்ததும், நடுவில் ஒரு நாள் அவன் அலுவலகம் சென்று வந்தபோது, செய்து வைத்திருந்த கமகமவென்ற வெங்காய சாம்பாரும் கத்தரிக்காய் பொடிபோட்ட கறியும் அவனது வீட்டை இல்லமாக உணரச் செய்தது.

நியூஜெர்ஸியில்தான் முதல் கச்சேரி என்பதால், ஆரஞ்சில் பச்சைக்கரையிட்ட பட்டுப்புடவை உடுத்தி, வழக்கமான செயினோடு, பச்சைக்கல் டாலர் வைத்த மெல்லிய சங்கிலி, பச்சை நிறக் கண்ணாடி வளையல்கள் அணிந்து மிக மெலிதான ஒப்பனையோடு வந்து நின்றவளைக் கண்டவனது கற்பனை கண்டபடி ஓட, தன் ‘நல்ல பையன்’ இமேஜைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடினான்.

‘யூ லுக் கிரேட்’, ‘லுக்கிங் குட் அபூ’, ‘கார்ஜியஸ்’ போன்ற எளிதான ஆங்கிலப் பதங்களைக் கூட சொல்லும் தைரியம் வரவில்லை. பற்றாக்குறைக்கு கூடவே அவளது தந்தை வேறு.

நிகழ்ச்சியை கேன்டி கேமில் பதிந்து கொண்டவன், எப்படியாவது கச்சேரி முடிந்ததும் பாராட்டிவிட உறுதிபூண்டான்.

ஆனால், கச்சேரி நடந்த சவுத் இந்தியன் அஸோஸியேஷனில், இவனுக்கு அபர்ணா உறவென்று தெரிந்ததும்,

“அபர்ணா உன் கஸினா?’

“டேய் முகுந்தா, நிஜமாவே அபர்ணா உன்னோட சொந்த அத்தை பொண்ணாடா?”

“எவ்வளோ பெரிய செலிபிரிட்டி சிங்கர், ரெண்டே பாட்டுதான் சினிமால. மொத்த தமிழ்நாடும் ஃப்ளாட், தெரியுமா?”

“டேய், டேய் ஒரு இன்ட்ரோ குடுடா”

என நண்பர்கள், தெரிந்தவர்கள் அனைவரும் தன்னை மொய்த்ததில் அபர்ணாவின் புகழையும் உயரத்தையும் உணர்ந்து கொண்டவனின் கொஞ்ச நஞ்ச தைரியமும் போயே போச்.

நியூயார்க்கில் இந்தக் கச்சேரிகளை ஏற்பாடு செய்த ஸ்ரீநிவாசனின் நண்பர் வீட்டில் தங்கி, இரண்டு நிகழ்ச்சிகள் முடிந்ததும் நியூஜெர்ஸிக்கே திரும்பினர்.

வாஷிங்டன் நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்தே அபர்ணாவும் ஸ்ரீநிவாசனும் லண்டன் செல்வதால், முகுந்தனே அழைத்துச் சென்றான்.

மாலை மூன்று மணிக்குக் கச்சேரி இருக்க, தந்தையும் மகளும் காலையில் எழுந்து தங்களது உடமைகளை, அவசர அவசரமாக ஷாப்பிங் செய்தவற்றை பேக் செய்ய, முகுந்தன் பெட்டிகளை எடை பார்த்தான்.

காலையில் முகுந்தனின் பொங்கலைப் பாராட்டிய அபர்ணா, அவனுடன் சேர்ந்து கையில் கொண்டு செல்ல, சான்ட்விச்சுகளும் தயிர்சாதமும் செய்தாள்.

அந்தச் சிறிய ஓப்பன் கிச்சனில் அருகருகே நின்று வேலை செய்ததில் கிளர்ச்சியும், தன் மனதை சொல்ல முடியாத தவிப்புமாக இருந்தான் முகுந்தன்.

தன் பெற்றோருக்கும் அக்கா குடும்பத்திற்கும், அபர்ணா வீட்டினருக்கும் விதவிதமான சாக்லேட்டுகளும், கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், பிஸ்தாவும் வாங்கிக் கொடுத்தான்.

ஸ்ரீநிவாசனுக்கு மைத்துனனின் மகன் தங்களைக் கவனித்துக் கொண்ட விதத்தில் வெகு திருப்தி. இருபத்தாறு வயதில், நல்ல படிப்பு, உத்தியோகம், வருமானம், ஹோண்டா சிவிக் கார் என வசதியோடு வெளிநாட்டில் இருந்தாலும் தன்மையும் பண்பும் மாறாமல் இருந்தவனின் மீது நல்லதொரு அபிப்பிராயம் விழுந்தது.

சிறப்பாக நடந்த கச்சேரியும், பாராட்டும் முடிந்து, அரங்கில் இருந்த க்ரீன்ரூமில் அபர்ணா உடை மாற்றி வந்தாள்.

கையில் கொண்டு வந்ததை உண்டு முடித்து, காபி ஷாப்புக்கு அழைத்துச் சென்றான். ஸ்ரீநிவாசன் ஓய்வறைக்குச் சென்றார்.

முகுந்தனுக்குத் தன் பெற்றோரிடம் சொன்னால் அபர்ணாவின் வீட்டில் பேச மறுப்பேதும் சொல்லக் காரணமில்லை என்பது தெரிந்தாலும், தனது விருப்பத்தை, ஆசையைத் தானே அபர்ணாவிடம் சொல்ல விரும்பினான்.

இதை விட்டால் இந்தத் தனிமையும் இப்படி ஒரு சந்தர்ப்பமும் அமையாது என்பதால் “அபர்ணா” என்றவன் தன் பேக் பேகில் இருந்து ஒரு கிஃப்ட் பேக்கை எடுத்து நீட்டினான்.

“இதெல்லாம் ஏன்?”

“சும்மாதான். நிதானமா பிரிச்சுப் பாரு. Fragile”

முகுந்தன், தந்தை அங்கே இல்லாதபோது பரிசைக் கொடுக்கவும், தயக்கத்துடன் பெற்றுக்கொண்டாள்.

“தேங்க் யூ”

ஃப்ளைட்டுக்கு இன்னும் நேரம் இருந்தது. நகரத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு ஏர்போர்ட்டை நோக்கிக் காரை செலுத்தினான்.

வழியனுப்பும் இடம் வரை சென்று, ட்ராலியில் பெட்டிகளை அடுக்க, ஸ்ரீநிவாசன் பாராட்டும் நன்றியுமாக முகுந்தனின் தோளைத் தட்டினார்.

“கரன்ஸி இருக்கா அத்திம்பேர், நான் தரவா?” என்று பர்ஸை எடுத்தவனிடம் மறுத்தார்.

“இருக்குப்பா, போறும்”

ஸ்ரீநிவாசன் இருக்கையில் அமர்ந்து தங்களது பாஸ்போர்ட், டிக்கெட் இத்யாதிகளை மீண்டும் ஒருமுறை சரி பார்த்தார்.

அபர்ணா முகுந்தனிடம் “இது வரைக்கும் ஒண்ணுமே சொல்லலியே?”

“எதைப்பத்தி?”

“...”

“அபூ”

“ம்?”

லக்கேஜ் ட்ராலியின் மேலிருந்த அவளது சிறிய கையைத் தன் அகலமான, வலிமையான, வெப்பமான கையால் அழுத்தினான்.

“அழகுடீ நீ”

“ஹான்…?” என கண்களை விரித்தவளிடம்

“வில் வெய்ட் ஃபார் யூ அபூ”

“!!!”

ஓரளவுக்குப் பிரபலமான, கல்லூரி மாணவியான அபர்ணாவுக்குப் பாராட்டும், ப்ரபோஸல்களும் புதிதல்ல. அக்காவும் தங்கையும் சேர்ந்து தங்களுக்கு வரும் காதல் கடிதங்களை, வாழ்த்து அட்டைகளை படித்துச் சிரித்துக் கிழிப்பது அடிக்கடி நடக்கும்.

ஆனாலும் இரண்டு வாரமாக முகுந்தனோடு இருந்ததும் உறுத்தாத அவனது உபசரிப்பும், தன்மையான, சுவாரசியமான பேச்சும் தந்த தாக்கத்தோடு, தனக்காக காத்திருப்பேன் என்று அவன் சொல்லவும் அபர்ணாவின் கனவுகள் வண்ணம் கொண்டன. மாமன் மகன் மீது மிக மெலிதான ஒரு ஈர்ப்பு எழுந்தது.

“பை” என்றவனிடம் தலையசைத்தவள், சட்டென பார்வையைத் தழைத்துப் புன்னகைத்ததில், சிவந்தவளைக் கண்ணில் நிரப்பிக் கொண்டு விடைகொடுத்தான் முகுந்தன்.

சூரியனே அஸ்தமிக்காத லண்டன் மாநகரம்…

இண்டு நாள் ஓய்வுக்குப் பின் அபர்ணாவின் இசை நிகழ்ச்சிகள் தொடங்கின. முதலில் லண்டன் தமிழ்ச் சங்கத்தில் இரண்டு நிகழ்ச்சிகளும் பிறகு லிவர்பூலில் ஒன்றும் இருந்தது.

கடைசி இரண்டு நாட்கள் ஊர்சுற்றிப் பார்த்தனர். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்றனர்.

வார இறுதி என்பதால், கோவிலில் கணிசமாகக் கூட்டம் இருக்க, அபர்ணாவைச் சூழ்ந்து கொண்டு பாடச் சொல்லிக் கேட்டனர். அதில் நிறைய வயதானவர்கள்.

ரசிகர்களின் நேயர் விருப்பத்தை மறுக்க இயலாது இரண்டு பாடல்கள் பாடினாள்.

“ஒரு காவடிச்சிந்து, ப்ளீஸ்”

“இதான் லாஸ்ட் பாட்டு” என்றவள்,

“வள்ளிக் கணவன் பேரை, வழிப்போக்கன் சொன்னாலும்” எனத் தொடங்கி, பார்வையை சுழற்ற, அங்கே தூண் மறைவில் நின்றவனை முன்பே பார்த்தது போல் தோன்றியது. யோசிக்க, பிரிட்டனில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் அவனைப் பார்த்த நினைவு.

அதோடு அவனை அலட்சியம் செய்தவள், மூன்று மாதங்களுக்குப் பின் சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மீண்டும் அவனை முதல் வரிசையில் பார்க்கும் வரை மறந்தும் போனாள்.

அதன் பிறகு அபர்ணாவின் கச்சேரி எங்கு நடந்தாலும் அவனது முன்னிலையில்தான் நடந்தது. தன்னையே துளைக்கும் அவனது பார்வையின் தீக்ஷண்யத்தில், அவனது கண்களை சந்திப்பதைக் கவனமாகத் தவிர்த்தாள்.

நம் வீட்டில் மின்சாரம் இல்லையெனில், டீவி சேனல்கள் சீரியலை நிறுத்திவிடுமா என்ன?

அவளை அவன் பார்ப்பதை இந்த உலகம் கூர்ந்து பார்ப்பதை அறியாத அபர்ணா, முகுந்தன் கொடுத்த கண்ணாடியினால் ஆன ஆழ்நீல நிற ரோஜாக்களை,
வாழ்வில் முதல்முறையாக ரகசியமாக ரசித்தாள்.

நீலநிற ரோஜாக்களைப் பரிசளிப்பது ஆழ்ந்த காதலையும், நம்பிக்கையையும், உறுதியான மனதையும் பிரதிப்பலிப்பதாகத் தேடித் தெரிந்து கொண்டாள்.

காத்திருப்பேன் என்றவனுக்காக காத்திருந்தாள் அபர்ணா.

 

Author: VedhaVishal
Article Title: தோற்ற மயக்கங்கள் 2
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Member
Apr 28, 2025
77
14
18
Chennai
அருளுக்கு நேரெதிரா அமுதா இருப்பா போல 😂

அரசியல் வாரிசு உருவாகிறதா?😜

அபர்ணாவிற்கு ஒரு தோற்றமயக்கம் ஏற்பட்டதா?😍😍😍 முகுந்தன் பாவம் தான் 😔

இந்த தலைப்பு எல்லோருக்கும் பொருந்தும் போலயே 🤣 🤣 🤣

அல்பாவை அம்போன்னு விட்டுட்டீங்களே?😜😂 டில்லியில் திரும்ப வருவாளா?
 
  • Like
Reactions: vidya Prasad

kothaisuresh

Active member
Jun 19, 2024
140
6
28
Chennai
முதல் வரிசை ஆள் தான் நம்ப அன்போ? பாவம் முகுந்தன்
 
Jun 19, 2024
13
3
18
Trivandrum
😍😍😍

காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போயிட்டானா? 😏😏