• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

தோற்ற மயக்கங்கள் 9

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
93
434
53
Chennai
தோற்ற மயக்கங்கள் 9


புருஷோத்தமன் நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக அரசாங்கம் தரும் சலுகைகள், மரியாதைகள், செல்வாக்கு இத்யாதிகளோடு, அதிக ஆபத்தில்லாத, மாட்டிக்கொள்ள வாய்ப்பே இல்லாத, தானாகக் கேளாது, அதுவாக வந்த ஆதாயங்களைத் தவிர்க்கவில்லை. பெரும்பாலும் நேர்மையாளராகவே அறியப்பட்ட மத்திய மந்திரி புருஷோத்தமனுக்கு ஆதாய ஸ்ருதியாக, அலாவுதீன் விளக்காக வந்து சேர்ந்தான், மாப்பிள்ளை ஐயாரப்பன்.

தஞ்சை மாவட்டத்தில் இருந்த தனது திரண்ட சொத்துக்கள், இந்தியப் பெரு நகரங்களில், ஓரிரு தமிழக மலைவாச ஸ்தலங்களில் வீடுகள், காய்கறி, பழப் பண்ணைகள், சில தொழில்கள் என்றிருந்தவர், துபாய், சிங்கப்பூரில் வீடுகள், பல்வேறு நிறுவனங்களில் பினாமி பெயரில் பங்குகள் என வளர்ந்தார்.

அது மட்டுமின்றி, அழகான, இளமையான நடிகைகள், முன் முப்பதுகளில் இருந்த செழுமையான ஒரு தெகுங்கு அம்மாயி என ‘வாழ்வதோ ஒருமுறை’ தத்துவத்தைப் போதித்த ஐயராப்பன், மாமனுக்கே மாமாவானான்.

மனம் போல் அனுபவித்து சுகத்தில் ஊறித் திளைத்த புருஷோத்தமன் (Indulged), லெட்டர்பேடு கம்பெனிகளில் முன்னூறு கோடி வரை முதலீடு செய்த பணமோசடி வழக்கில் சிக்கும் நிலை வர, ஐயாரப்பன் வெகு சாமர்த்தியமாக பழியையும் ஊடகங்களின் கவனத்தையும் அன்புநேசனின் பக்கம் திருப்பி விட்டான்.

இதனிடையே ஆட்சி மாறியதில், புருக்ஷோத்தமனின் மந்திரி பதவி போய்விட, வழக்கு பதியப்பட்டு, CBI, ED கைகளுக்குப் போய்விட, அன்புநேசன் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்கு CBI போலீஸாரின் கஸ்டடியில் வைக்கப்பட்டான்.

வெளியில் வந்த அன்புநேசன் பெற்றோரைப் பார்க்க வராது, ‘தன்மீது வீண் பழி சுமத்தியவர்களை வெளிப்படுத்தாமல் ஓயமாட்டேன்’ என்று சபதமிட்டு, மனைவி, பிள்ளைகளுடன் வெளிநாடு சென்று விட, வேறு வழியின்றி, ஐயாரப்பனின் விருப்பத்திற்கு எதிராக,
புருஷோத்தமன், தானும் தன் மகனும் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி (witch hunt) காரணமாகத் தங்கள் மீது பொய்யாகப் புனையப்பட்ட வழக்கு இது என மகனுக்கு வக்காலத்து வாங்கினார்.

பல அரசியல்வாதிகளின் ஏராளமான மோசடி வழக்குகளைப் போல் இதுவும் இன்றுவரை அவ்வப்போது வாய்தா வாங்கிக்கொண்டு தீர்ப்பின்றி நிலுவையில் நிற்கிறது.

பல சந்தர்ப்பங்களில் தான் சொல்லாத, தனக்கு ஒவ்வாத கருத்துகள் எல்லாம் தன் பெயரில் அறிக்கைகளாக ஊடகங்களில் வெளி வரக் கண்ட அன்புநேசன் திகைப்புடன் தந்தையைக் கேட்க, அவரோ “கட்சிக்காக நான்தான் உன் பெயரில் வெளியிடச் சொன்னேன். இதனால் கட்சிக்குள் உன் மதிப்பு உயரும். உன் நல்லதுக்குதான்” என்றார்.

ஐயாரப்பனின் நிழல்வேலைகள் குறித்த சந்தேகம் இருந்தாலும், தந்தையின் மீது நம்பிக்கை இழக்காத அன்புநேசன், பொதுவெளியில் அவரை மறுக்கவியலாது அமைதி காத்துவிட்டு, ஆத்திரத்தில் அபர்ணாவிடம் பொடுபொடுப்பவன், ஆசுவாஸத்துக்கும் அவளையே வடிகாலாக்கினான்.

கட்டாயத்தின்பேரில் அரசியல் குடும்பத்துக்குள் வந்தாலும், இயல்பிலேயே கூர்மையான அறிவும் மதிநுட்பமும் உடைய அபர்ணா, அன்புநேசனின் சிக்கல்களுக்கும் அவன் சிக்கியதற்கும் காரணம் ஐயாரப்பன்தான் எனவும்,சமீபமாய் மாமனார் புருஷோத்தமனின் போக்கு சரியில்லை என மாமியார் துளசி புலம்பியதாகவும் கணவனிடம் சொல்ல,
சுள்ளென “உன் வேலையை மட்டும் பாரு” என்றான்.

அடுத்து வந்த வருடங்களில் அருள்மொழியும் அமுதாவும் ஓரளவு வளர்ந்து விட, கணவனை நச்சரித்து, பிடிவாதம் பிடித்து, அவனது அம்மா இன்னும் மருத்துவராக ப்ராக்டீஸ் செய்வதை அவனது அக்கா பொன்னி கூட ‘பட்டுப் பொன்னி’ என்ற பெயரில் மிகப்பெரிய புடவைக் கடை தொடங்கி இருப்பதை சொல்லிச் சொல்லி,

“மோஸ்ட்லி ஒர்க் ஃப்ரம் ஹோம்தான். மேக்ஸிமம் ஒரு மூணு, நாலு மணி நேரம் ஆஃபீஸ் போய்ட்டு வருவேன். உங்களோட எல்லா கமிட்மென்ட்டும் எனக்கு ஓகே”

தேர்தல் உறுதி மொழிகளைவிட அதிகமாக அள்ளி வீசி, தேனாய் குழைந்து, அவனை வெல்லமாகக் கரைத்த பின்னும்,

“ஒரு ஆஃபீஸை எப்டி நடத்தணும்னு உனக்குத் தெரியுமா, உன் கீழ வேலை பாக்கற ஒருத்தன் ஏதோ சண்டைல உன்கிட்ட சத்தம் போட்டா, வரம்பு மீறி நடத்துட்டா என்ன செய்வ?”

மனதில் ‘அன்புநேசன் பொண்டாட்டி கிட்ட பிரச்சனை பண்ண அவனுக்கு என்ன பைத்தியமா?’ என நினைத்தவள்,

“என்னை நம்புங்க ப்ளீஸ்”

“நீ வேணா உன் ஆஃபீஸை நம்ம வீட்லயே வெச்சுக்கோயேன்”

‘இதுக்கு நான் இப்ப மாதிரி சும்மாவே இருக்கலாம்’

“அது சரியா வராது”

‘நானும் இன்டர்வ்யூல இருப்பேன்’

“சர”

‘ஓகே, உன் ஸ்டார்ட் அப்போட ப்ளூ ப்ரின்ட்டை கொண்டு வா, பார்க்கலாம்”

“...”

“அட்வர்டைஸ்மென்ட்டுக்கு ஐடியாஸ், ஸ்லோகன், லே அவுட் டிஸைன், வீடியோக்கு பேக்ரவுண்ட்…. ம் ஐடியா ஓகே, ஆனா, உங்கிட்ட யாரு வருவா?”

“...”

“ம்… இதெல்லாம் சரிதான்… பத்து லட்ச ரூபான்னு பட்ஜெட் போட்டுருக்கியே, இதுக்கான பணத்துக்கு என்ன பண்ணப் போற?”

“...”

அன்புநேசனின் சுபாவம் தெரிந்ததால், அதுவரை அவனது எள்ளலான கேள்விகளை இயல்பாக எதிர்கொண்ட அபர்ணா, முதலீட்டைப் பற்றி அவன் இப்படிக் கேட்பான் என்று சற்றும் எதிர்பாராததால் திகைத்து நின்று விட்டாள்.

அவள் தந்தை காலமாகி மூன்று வருடங்களாகி இருக்க, அம்மா சீதா பெஸன்ட்நகர் வீட்டில் தன், மற்றும் கணவரின் பென்ஷனுடன் தனியாகத்தான் இருக்கிறாள். பெண்களுக்கு, மாப்பிள்ளைகளுக்கு, பேரக் குழந்தைகளுக்கு என அவ்வப்போது எதையாவது செய்வது, மருத்துவச் செலவு, ஹேமாவிடம் அமெரிக்கா சென்று வந்தால் அதற்கான செலவு என தன் போக்கில் இருப்பவளிடம் என்ன கேட்பது?

அதுவும் நாட்டின் பாரம்பரியமான, பணக்கார அரசியல் குடும்பத்தின் மருமகள்… ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ… தொடர்ந்து சிட்டிங் எம்பியாக இருப்பவனின் மனைவி, திருமணமாகி பனிரெண்டு வருடத்தைக் கடந்த நிலையில் யாரிடம் பணம் கேட்பது?

முதலில் வங்கியில் கடன் வாங்குவது, தன் நகைகளை விற்பது என பலதும் யோசித்துவிட்டு, ஒன்று சம்மதிப்பான் அல்லது மறுதலிப்பான் என்ற நினைப்பில்தான் கணவனிடம் தன் விருப்பத்தைச் சொன்னாள்.

இப்போதும் பழைய இசைத்தட்டுகளில் இருந்து ராயல்டி என எதோ வருகிறதுதான். ஆனால் அது போதாதே… தொடர்ந்து கச்சேரி பண்ணி இருந்தாலாவது கையில் பணமிருக்கும்…

சிந்தனை ஓட்டத்தில் கழிவிரக்கம் மேலிட்டதில், சட்டென கண்களில் நீர் தளும்பி விட, கட்டிலில் இருந்த அவளது லேப் டாப்பையும் பேப்பர்களையும் எடுக்கக் குனிந்தவளைத் தன்னிடம் இழுத்து இருத்திக்கொண்ட அன்புநேசன்

“பைத்தியமாடீ நீ… நீதான்டா நேசா காசு குடுக்கணும்னு அடிச்சு சொல்றதை விட்டுட்டு அழற…?”

“...”

“இன்னுமே நீ என்னை கட்டாயக் கல்யாணம் செஞ்சுக்கிட்டவனானேய்ய்…”

திரும்பி அன்புநேசனின் இதழில் பதிந்தவளின் மென்மையில் தொலைந்தவன்

“அப்பு…”

அடுத்த ஒரு மாதத்திற்குள் வீட்டிலிருந்து இரண்டு கிலேமீட்டர் தொலைவில், பரபரப்பான இடத்தில், அளவான, அழகான அலுவலகம் ஒன்றை அன்புநேசனே அமைத்துக் கொடுத்ததோடு, அவனது நண்பர்களின் நடுத்தர நிறுவனங்களுக்கு, அவனது ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு என இணையத்தில், நாளிதழ்களில் வெளியிடும் விளம்பரங்களை வடிவமைக்கும் வாய்ப்பையும் தந்தான்.

அபர்ணாவின் ஸ்டார்ட்அப் சீராக வளர்ந்து வந்த நிலையில்தான், ஐயாரப்பனின் தகிடுதத்தங்களால் அன்புநேசன் சிக்கவும், அவனைப் பின்தொடர, தானோ ராகவனோ ஈடுபட்டால், கணவனிடம் மாட்டிக்கொள்வோம் என்பதால், தன் ஒன்றுவிட்ட சகோதரனும் சில கச்சேரிகளில் தனக்கு ஃப்ளூட் வாசித்தவனும், மிகச்சிறந்த ஃப்ரீலான்ஸ் எத்திகல் ஹேக்கர்களில் ஒருவனுமான சாரங்கனைத் தொடர்பு கொண்டாள்.

இன்று மதியம் சாரங்கன் கொடுத்த flash disk ல் இருந்தவற்றைப் பார்த்ததில், இதோ தூக்கமின்றித் தவிக்கும் அபர்ணாவால், இப்போதும் பட்டென கணவனிடம் எதையும் உடைத்துப் பேச முடியவில்லை.

பதினேழு வருடங்களாக அரசியலில், தேசியக் கட்சியில், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலுமே, தந்தையின் நிழலில் பாதுகாப்பான அரசியல் செய்பவனாகவே கருதப்படுவதில் ஒருவித முரட்டுத்தனமும் எதிர்ப்புக் குணமும் தாழ்வு மனப்பான்மையும் கொண்ட அன்புநேசனிடம் எதையும், குறிப்பாக அவனது அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை நேரிடையாகப் பேசிவிட முடியாது.

இதற்கு முந்தைய சந்தர்ப்பங்களிலும், கணவனின் அழுத்தங்களைத் தாங்கிய பின்னரே, தனக்குத் தெரிந்ததைச் சொல்லி இருக்கிறாள். இம்முறை வலை பெரிதாக இருப்பது புரிந்தாலும், எங்கே, எப்போது விரிக்கப்படும் என்பது தெரியாததால், அபர்ணாவால் ஆனது சாரங்கனின் சமிஞ்கைக்குக் காத்திருப்பது மட்டுமே.

*********************

அடையாறு தியாஸாஃபிகல் சொஸைட்டி இருக்கும் பகுதியில் கம்பீரமாகப் பரந்து விரிந்திருந்தது அன்புநேசனின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி.
உடற்பயிற்சிக்கும் பொழுது போக்கிற்குமான டென்னிஸ், பேட்மின்ட்டன், நீச்சல், பேஸ்கெட் பால், வாலிபால், ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளைக் கற்கவும் பயிலவும் நிறைய மேல் தட்டு மக்களும் மத்திய தர மக்களும் வயது வித்தியாசமின்றி வந்தனர்.

கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் மக்களின் விழிப்புணர்வு அதிகரித்ததில் எட்டு வருடங்களாக சர்வதேசத் தரத்திலான ஜிம் ஒன்றும் இயங்குகிறது.

ஒரு அளவில் பயிற்சி பெற்று, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற, வெற்றி பெற்ற மாணவர்களை சில தனியார் பள்ளி, கல்லூரிகள் சிறப்புப் பயிற்சிக்கென அவர்களே செலவு செய்து இங்கு அனுப்புகின்றனர். திறமையின் அடிப்படையில் அவர்களுக்கு கட்டணத்தில் சலுகை உண்டு.

இது தவிர, ஆண்டு தோறும் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் (Long jump), உயரம் தாண்டுதல் ( High jump), ஜாவ்லின் த்ரோ, ட்ரையத்லான், லான் டென்னிஸ், டேபிள் டென்னிஸ், நீச்சல் என பல்வேறு விளையாட்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட, பயிற்சி பெறும் திறமையுள்ள, பொருளாதார வசதி இல்லாத அடித்தட்டு வீரர்கள், வீராங்கனைகள் இருபது பேருக்கு பள்ளிக்கல்வி, உணவு, உறைவிடம் மற்றும் விளையாட்டுப் பயிற்சி முற்றிலும் இலவசமாக அன்புநேசனால் வழங்கப்படுகிறது. இவர்களை அன்புநேசனே நேரடியாகத் தேர்ந்தெடுக்கிறான்.

அவனது அகாடமியில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கென பயிற்சி பெறும் ஒவ்வொருவரையும், பயிற்சியாளர்களின் துணையுடன் தனிப்பட்ட முறையில் அவனே நேர்காணல் செய்த பிறகே சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இன்று…. மாலை நேரம். பள்ளி மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடக்கும் நேரமாதலால், பறிற்சி பெறுபவர்களில் கல்லூரி மாணவர்களும், விளையாட்டையே முழு நேரமாகப் பயில்பவர்களும்தான் அதிகம் தென்பட்டனர். ஆயிற்று, அடுத்த வாரம் தேர்வுகள் முடிந்ததும் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெறப் போகும் காமன்வெல்த் வெளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சிகள் தீவிரமடைந்துவிடும்.

ஜிம்மிலும் நீச்சல் குளத்திலும் கூட்டம் இருந்தது. வளாகத்தை மேற்பார்வையிட்டபடி மெதுவே சுற்றி வந்த அகாடமியின் தலைவரும் கேர்டேக்கரும் முன்னாள் விளையாட்டு வீரருமான மணிசங்கர், தன்னை நோக்கி ஓடி வந்த உதவியாளர் “ஸார்… ஸார்… என உரக்க அழைத்தபடி” வரவும் நின்றார்.

“என்ன பாண்டியா, ஏன் ஓடி வர?”

“ஸார், உங்க கிட்ட மதியம் ஃபோன் செஞ்சு பேசினாங்களாமே, ஏதோ ஒரு கம்பெனி பேர் சொன்னாங்க ஸார்… உங்களை பார்க்க நேர்லயே வந்துட்டாங்க, ரிஸப்ஷன்ல வெயிட் பண்றாங்க”

“சரி, நீ போய் அவங்களுக்கு லெமன் ஜூன் கொண்டு வா” என்ற மணிசங்கர் அலுவலக அறையை நோக்கி நடந்தார்.

வரவேற்பறையில் கோப்பைகளும் ஷீல்டுகளும் சான்றிதழ்களும் புகைப்படங்களும் அழகாக, முறையாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்க, அங்கே காத்திருந்த இருவரையும் “கம் இன்” என வரவேற்றபடி உள்ளே அழைத்துச் செல்ல, அங்கே அகாடமி மேனேஜர் தினகரன் கணினியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்ன தினகரன், சீக்கிரம் போகணும்னு சொன்னீங்க, இன்னும் கிளம்பலையா?”

“இதோ ஸார். ஆரம்பிச்ச வேலையை முடிச்சிடலாம்னு…”

“ஓகே, கன்டின்யூ…”

வந்திருந்த இருவரில் ஒருவர் வட இந்தியர் எனத் தெளிவாகத் தெரிந்தது. அவரே ஒரே வாக்கியத்தில் தமிழ், ஹிந்தி, இங்கிலீஷ் என எல்லா பாஷையிலும் பேசினார்.

“ஹலோ மிஸ்டர் மணிசங்கர், ஐ’ம் சமீர் கேட்கர். நான் ****** இந்த கம்பெனில இருந்து வரேன். உங்க ஸ்போர்ட்ஸ் அகாடமியோட செயல்பாடுகள், பயிற்சி முறைகள், வளர்ச்சி, வெற்றி, பராமரிப்பு எல்லாம் பஹூத் அச்சா ஹே. எங்களை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணி இருக்கு. ”

அவர்களே தொடர்ந்து பேசட்டும் என்று எண்ணிய மணிசங்கர் ஆமோதிப்பாகத் தலையசைத்தார்.

குறிப்பா இந்தியாவில் வெகு சில இடங்களில் மட்டுமே கிடைக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் ட்ரெய்னிங், உங்க அகாடமில சிறப்பா நடைபெறுவதால, எங்க கம்பெனில இருந்து உங்க கிட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி பெறும் சிறந்த இரண்டு வீரர்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் ஷூ, உடைகள், மற்ற ஆக்ஸெசரீஸ், எலக்ட்ரோலைட் அண்ட் ப்ரோட்டீன் ட்ரிங்க்ஸ், விட்டமின், இரும்பு சத்து மாத்திரைகள், மருத்துவ உதவிகளையும் மற்ற செலவுகளையும் மற்ற ஸ்போர்ட்ஸ்ல எட்டு பேருக்கும், மொத்தம் தஸ், அதாவது பத்து பேருக்கு ரெண்டு வருஷத்துக்கு நாங்க ஸ்பான்ஸர் பண்றதுக்கு நீங்க எங்களை அனுமதிக்கணும்”

இப்போது மணிசங்கர், தினகரன் இருவருமே இமையைக் கூட அசைக்காது அமர்ந்திருத்தனர். இருவர் மனதிலும் ஓடியது ஒரே விஷயம்தான்.

‘இந்தாளு ஏதாவது புரிஞ்சுதான் பேசுறாரா, இவுரு சொல்ற கணக்குக்கு சராசரியா ஒரு வருஷத்துக்கே அஞ்சு கோடி ரூவாய்க்கு மேல ஆகும். அரசாங்க மானியம், தனியார் நன்கொடை, அன்பு ஸாரோட ட்ரஸ்ட் பணம் எல்லாம் சேர்ந்தே காசு பத்த மாட்டேங்குது. போகட்டும், இத்தனை செலவு செய்யணும்னா நம்ம கிட்ட இருந்து இவங்களுக்கு என்ன வேணும்?’

“மணிசங்கர் ஸார், என்ன ஸோச் (யோசனை) பண்றீங்க?”

“ஸார், இந்த விஷயத்துல நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. அகாடமி ஓனர் அன்புநேசன் ஸார் கைலதான் எல்லாம் இருக்கு. ஸார் எம்.பி தெரியும்ல, . இப்ப டெல்லில இருக்கார். நீங்க விவரமா எழுதிக் குடுத்துட்டு போங்க. இல்லை, இந்த இமெயில் ஐடிக்கு மெயில் அனுப்புங்க. அவர் பார்த்துட்டு பதில் சொல்லுவார்”

“ம்…. கித்னா தின் ஆகும்?”

“ஒரு வாரம், பத்து நாள்…”

“ஓகே, வீ வில் வெய்ட்”

அவர்கள் வெளியில் சென்ற பத்தாவது நிமிடமே அகாடமியின் மெயில் ஐடிக்கு மெயில் வந்து விட, அன்புநேசன் பார்ப்பான் என்றாலுமே, அதை அவனுடைய தனிப்பட்ட மெயில் ஐடிக்கு அனுப்பிய மணிசங்கர், புலனத்திலும் தகவல் அனுப்பி, பேசலாமா ஸார் எனக் கேட்டதில், உடனே அழைத்துவிட்டான்.

“சொல்லுங்க மணி ஸார்” என்றவன், அவர் பேசப்பேசவே, இமெயிலை செக் செய்து,

“கேள்விப்பட்ட கம்பெனி மாதிரி பரிச்சயமாவும் இருக்கு, புதுசு போலவும் இருக்கு. செக் பண்ணுவோம். வெளிநாட்டுக் கம்பெனியான உங்களுக்கு எங்களால அந்த சொல்ப லோக்கல் இன்கம்டாக்ஸ் தள்ளுபடியைத் தவிர, இத்தனை பெரிய தொகை ஸ்பான்ஸர் செஞ்சா இதனால உங்களுக்கு என்ன லாபம், அல்லது எங்க கிட்ட இருந்து நீங்க என்ன எதிர்பார்க்கறீங்கன்னு கேட்க வேண்டியதுதானே?” - அன்புநேசன்.

“கேட்டோம் ஸார். நாங்க ஸ்பான்ஸர் பண்ற விஷயங்களை விளையாடும்போது யூஸ் பண்றது, உங்க அகாடமிலயோ, செட்லயோ… விளம்பரப் படங்கள்ல நடிக்கிறது… இது போலன்னு சொன்னார் ஸார்”

“ஓகே மணி ஸார், நான் க்ராஸ்செக் பண்ணிட்டு யோசிச்சுட்டு சொல்றேன், அவசரப்பட வேண்டாம்”

“ஓகே ஸார்”

*******************

டெல்லி - சண்டிகர் ஹைவேயில் பயணித்த அந்த மெர்ஸிடிஸ், மஹாபாரதக் கர்ணனின் ஊராகக் கருதப்படும் கர்னால் மாவட்டத்தில் உள்ள கர்ணா ஏரியைத் தாண்டியதும் இடப்புறமாகத் திரும்பி செப்பனிடப்படாத மண் ரஸ்தாவில் ஆறு கிலோமீட்டர்கள் பயணித்தபின் ஒரு சிமெண்ட் கூட பூசப்படாத செங்கற்கள் பல்லிளிக்கும் ஒரு சாதாரண வீட்டு வாசலில் நின்றது.

அல்பா முன்னே செல்ல, பின் தொடர்ந்து, வீட்டினுள் சென்ற புருஷோத்தமன், ஐயாரப்பன் இருவரும் திகைத்தனர். வெளித் தோற்றத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாது, ஒவ்வொரு மில்லி மீட்டரும் பணத்தில் பளபளத்தது.

“இது மிஸ்டர். மாத்துர், ******* மல்டிநேஷனல் ஃபார்மசூட்டிகல்ஸ் கம்பெனியோட இந்திய சிஈஓ, இது எக்ஸ் சென்ட்ரல் மினிஸ்டர். புருஷோத்தமன்”

ஐயாரப்பனைக் கேள்வியாகப் பார்த்த மாத்தூரிடம் “அவர் நம்ம ஆள்தான், நம்பலாம்’ எனும் பொருள்பட, அல்பா ஹிந்தியில் எதையோ சொன்னாள்.

அதுவரை இந்த டீலிங்கில் முக்கியமான இடைத்தரகியாக இருந்த அல்பாவை வெகு அலட்சியமாக ‘நீ வெளியில் காத்திரு’ என்ற மாத்துர், புருஷோத்தமனிடம் தன் கம்பெனி சார்பாக தனது கோரிக்கைகளை, தேவைகளை, அவற்றை யார் மூலம், எப்படி அரங்கேற்ற வேண்டுமென்பதை விளக்கியவன், அதற்காக புருஷோத்தமன் அடையப்போகும், இங்கிலாந்தின் பெவர்லி நகரத்தில் (Beverly) பல ஏக்கரில் விரிந்துள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாளிகையின் வீடியோ வெளிச்சத்தில் பார்த்துக்கொண்டிருந்த இருவரது கண்களிலும் மின்னிய ஆசையின் விலை?

துரோகம்.
 

Author: VedhaVishal
Article Title: தோற்ற மயக்கங்கள் 9
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.