• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நாணங்களும் எதற்காக? 6

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
62
242
83
Chennai
நாணங்களும் எதற்காக? 6


பெ
ங்களூரில் இந்த முறை மே மாத மத்தியிலேயே தொடங்கிய‌ பருவ மழை, சொல்லி வைத்தாற் போல் தினமும் மாலை முதல் இரவு‌ வரை‌ கொட்டித் தீர்த்தது.

என்னதான் ரெயின்கோட், ஹெல்மெட் என பாதுகாப்புடன் ஸ்கூட்டரில் சென்றாலும், இரவில் வீட்டுக்கு வரும்போது இரண்டு நாள்கள் தொடர்ந்து நன்றாக நனைந்து விட்டதில் சின்மயிக்கு நல்ல‌ சளியும் காய்ச்சலும் பிடித்துக் கொண்டது.

காய்ச்சல் சரியாகி விட்டாலும் சளியும் தும்மலும் விடுவேனா என்றது. குழந்தை மருத்துவரே தொற்றைப் பரப்பக்கூடாது என்பதால் மூன்று நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்தாள்.

நாள் முழுவதும் மழை பெய்ததில், ஹரி ஒர்க் ஃப்ரம் ஹோமிலும், பத்மினி விடுப்பிலும் இருக்க, பவானியுடன் இருக்கவென இங்கேயே தங்கி விட்டனர்.

காலையில் எழ முடியாமல் சின்மயி அவளது அறையில் அமைதியாகப் படுத்துவிட, சற்று நேரத்தில் குழந்தைகள் பசி என்பதும், யார் சமைப்பது என்ற விவாதமும் காதில் விழுந்தது.

பவானியா பத்மினியா என்ற போட்டியில் தோல்வியைத் தழுவிய பவானி சமையல் செய்ய, வேறு வழியின்றி ஹரி உதவினான். தோசை மாவு பத்தாமல், பொங்கல்‌ செய்து, இரண்டு ரவுண்டு காஃபி, பிள்ளைகளுக்குத் தேவையான பானங்கள் என காலை டிஃபன் கடை முடியவே பதினோரு மணியானது.

மழையில் பணிப்பெண்ணும் வராததில் வீடு கேவிக் கதற, பத்மினி பாத்திரத்தில் மாட்டிக்கொண்டாள். சின்மயி தன்னிடம் இருந்த ஒரு கன்னட ஹோம் கேட்டரிங் மாமியிடம் ஆர்டர் செய்த மதிய உணவை பலத்த விமரிசனத்துடன் உண்டனர்.
அன்று முதல் பவானி இருக்கும்வரை மதியமும் இரவும் உணவை டெலிவரி செய்ய ஏற்பாடு செய்தாள் சின்மயி.

சிங்கபிரான் ஒரு மலையாளப் படத்தில் பாடுவதற்கென ஐந்து நாள் பயணமாக திருவனந்தபுரம் சென்றிருந்தான்.

அவன் அழைக்கையில், சுற்றி எல்லோரும் இருக்க, இமோஜியிலேயே பேசியவளிடம் “என்ன புல்புல் ம் சொல்றியா‌ ம்ஹும் சொல்றியான்னே புரியலை” என்றவன், கரகரத்துக் கட்டிய குரலில் அவள் அனுப்பிய வாய்ஸ் நோட்டைக் கேட்டு பயந்துதான் போனான்.


திரும்பி வந்த பிறகும் அவன் ஆஃபீஸ்‌ வேலையில் பிஸியாக‌ இருக்க, மழையின் உபயமாக அடுத்த வாரம் முழுதும் சின்மயிக்கு நிமிர, நகர நேரமில்லாத அளவு ஹாஸ்பிடல், க்ளீனிக் இரண்டிலும் குழந்தைகளின் கூட்டம்.

புதன் கிழமை இரவு மெலிதான மழையைப் பொருட்படுத்தாது,
“கீழ வெயிட் பண்றேன்” என சிங்கபிரான் வாட்ஸ்ஆப்பினான்.

தன்‌ ஸ்கூட்டியில் அவனைப் பின் தொடர்ந்த சின்மயி, அணிந்திருந்த ரெயின் கோட்டை கழற்றி விட்டு, அவன் ஓரங்கட்டி நிறுத்திய காரில் ஏறிக்கொண்டாள்.

ஹெல்மெட்டையும் ரெயின்கோட்டையும் மீறி சிறிது நனைந்திருந்த சின்மயி அமர்ந்த வேகத்தில் அவள் முகத்தைத் தன்புறம் திருப்பி, ஈரத்தில் ஒட்டி இருந்த அவள் முன்னுச்சி முடியை, நெற்றியைத் தொட்டுப் பார்த்து, மேலும் கீழும் ஆராய்ந்த சிங்கபிரான் “இன்னும் சளி ஃபுல்லா போகலை போல… ஜுரம் இருக்கா… பத்து நாள்ல இளைச்சுப் போய்ட்ட புல்புல்… ஆர் யூ ஆல்ரைட்?”

“ம்…”

“பவானி & கோ வந்தாச்சா?”

“ம்”

“நீ இப்டி தினமும் மழைல‌ நனைஞ்சா‌ ஜுரம் வராம என்ன செய்யும்?”

அவனது பார்வையில் கூச்சமும் சிரிப்பும் வர, நெளிந்தவள் “என்ன பண்ற ச்சிங்கா?”

அதற்கு பதில் சொல்லாத சிங்கபிரான் “உனக்கு‌ கார் ஓட்டத்‌ தெரியுமா புல்புல்?”

“தெரியும். லைசன்ஸ் இல்ல”

“நாட் எ ப்ராப்ளம். அதை வாங்கிக்கலாம். இனிமே ஸ்கூட்டர் வேணாம் புல்புல். நீ பேசாம கார்ல போ”

“அதுக்கு முதல்ல கார் வாங்கணும்”

“யார்றீ இவ… ஒண்ணுக்கு மூணு கார் தண்டமா நிக்கறது. அதுல ஒண்ணை ஓட்டுன்னா… புதுசு வாங்குவியா?”

“?!?!”

மளமளவென கூகுள் செய்தவன்,

“புல்புல், எதுக்கும் நீ ஒரு நாலஞ்சு நாளைக்கு காரை ஓட்டிப் பாரு. உன் க்ளீனிக் இருக்கற அம்ரபாலி ஆர்க்கேட்லயே ஒரு ட்ரைவிங் ஸ்கூல் இருக்கு. போய் பேசலாம். ஒரு ரெண்டு வாரத்துல லைசன்ஸ் வாங்கிடலாம்…”

இதை சற்றும் எதிர்பாராத சின்மயி அதிர்ச்சி, திகைப்பு, வியப்பு, நெகிழ்வு என நவரசமும்‌‌ காட்டினாள்.

‘அவனோட BMWவையும்‌ பென்ஸையும் நான் ஓட்டவா… எங்கேயாவது போய் இடிச்சு வெச்சேன்னா… இந்தச் ச்சிங்கா ஏதாவது புரிஞ்சுதான் பேசறானா?’

பதில் இல்லாது போகவும், நிமிர்ந்த சிங்கபிரான்

“ஹலோ டாக்டரம்மா, நான் பாட்டு பேசறேன்… நீ என்ன முழிக்கற?”

“...”

“புல்புல்… .” சின்மயியை உலுக்கினான்.

“ம்ப்ச்… விளையாடாத‌ ச்சிங்கா. லைசன்ஸ் கூட இல்லாம அத்தனை காஸ்ட்லியான காரைப் போய்… பாலா‌ மாமிக்கும் எங்கப்பாக்கும் யார் பதில் சொல்றது. அது மட்டும் இல்லாம, காருக்கு ஏதாவது ஆயிட்டா… அதெல்லாம் சரியா வராது ச்சிங்கா... “

“ஏன், காஸ்ட்லி‌ கார்னா நீ ஓட்டினா ஓடாதா?”

“...”

“காஸ்ட்லி சீப் எல்லாம் வாங்கும்போதுதான்.‌ நம்ம கைக்கு வந்துட்டா அது யூஸ் பண்ற பொருள். அவ்ளோதான்”

“...””

“அம்மா கிட்ட நான்‌ பேசிக்கறேன் புல்புல்…”

“கொஞ்ச நாள் போகட்டும் ச்சிங்கா… நானே சின்னதா ஒரு காரை…”

“அதுவரைக்கும் இப்டி மழைல நனைஞ்சு, உடம்புக்கு‌ வரவழைச்சுப்பியாடீ?”

‘உன் சித்தியே டாக்டர். அவளுக்குத்‌ தெரியாத மருந்தா?’ என்ற கேலியும், கேடரரின் காரமான ரசமும் ஊசி போன்ற சாதமும்…
தானே மாத்திரையை விழுங்கி விட்டுப் படுத்திருந்ததும்…

அவளிடம் அவன் எப்போதுமே அப்படித்தான் என்றாலும் சின்மயிக்கு‌ இன்று சிங்கபிரானின்
கோபமும்‌ அக்கறையும் அத்தனை பிடித்தது. கூடவே, அதன்‌ வேகமும் அழுத்தமும் சிறிது பயத்தைக் கொடுத்தது.

இருவரும் மௌனமாக இருந்தனர். நீண்ட, அமைதியான நிமிடங்களுக்குப் பின், அவனே “மணி பத்து புல்புல். நீ கிளம்பு”

“ச்சிங்கா…”

“போடீ” என்றவனிடமிருந்து
சனிக்கிழமை மாலை வரை ஒரு குறுந்தகவல் கூட இல்லை. சின்மயியும் அமைதியாக இருந்தாள்.

அவளுக்கும் சிங்கபிரானுக்கும் இடையை பணமோ அந்தஸ்தோ தடையில்லைதான். வீட்டிலிருந்து வேலை செய்யும் அவளது சொந்த அண்ணா ஹரி சொல்லாததை சிங்கபிரான் சொன்னதே அவன் மனதில் அப்படி ஒரு எண்ணமே இல்லை என்கிறதே!

ஆனாலும் ஸ்ரீரங்கத்தில் இருந்ததைப்‌ போன்ற‌ சாதாரண அல்லது சமநிலையோ அது பற்றிய சிந்தனையோ கவலையோ இல்லாத வயதும்‌ இருவருக்குமே இப்போது இல்லைதானே?

சிங்கபிரானின் இசைக்குழுவினரின் குறுகுறுப்பான பார்வையும், அவனது நண்பர்கள் இருவரும் அவனைக் கேலி செய்து எதையோ கிசுகிசுப்பதும், கேசவின் நேரடியான கிண்டலும் சின்மயிக்குத் தெரியாமல் இல்லை.

அதே சமயம், சிங்கபிரானின் நட்பை தனக்கு‌ சாதகமாக வளைக்கவும் அவள்‌ நினைக்கவில்லை. ஆனால், அவளே அறியாது தன்னை யாரும் அப்படி நினைத்து விடக்கூடாதென்ற‌ எச்சரிக்கை உணர்வு‌ அவளிடம் இருந்தது. சின்மயி அவனது கோபம் தணியக் காத்திருந்தாள்‌.

அந்த சனிக்கிழமை ஹரி-பத்மினியின் நான்காவது திருமண நாள் எனத் தெரிந்துகொண்ட பவானியின் மகளும் மகனும் முந்தைய நாளே “பார்ட்டி வேணும் மாமா. ஹோட்டலுக்குப் போகலாம்” என்றனர்.

சின்மயி காலையில் புறப்பட்டபோதே ஹரி சொல்ல…,

“ வீக் என்ட் வேற. க்ளீனிக்ல‌ கூட்டமா இருக்கும். பாதில விட்டுட்டு வர முடியாது ஹரி”

“சுட்டி போட்டு‌ வா சித்தி” என்றனர் குழந்தைகள்.

“லேட் ஆனா பரவாயில்லடீ சின்மயி.‌ நீ‌ நேரா ஹோட்டலுக்கே வந்துடு” என்றாள் பவானி.

“பாக்கறேன்” என்றவளின் பார்வை தந்தையிடம் இருந்தது. பரசுராம் அவர் வழக்கம்போல் இவர்களின் பேச்சு காதில் விழாத பாவனையுடன்‌ நியூஸ் பேப்பரில் மூழ்கி இருந்தார்.‌ கடைசிவரை ஆழம் பார்த்துக் குறை சொல்லா விட்டால்‌‌ அது‌ பரசுராம்‌ அல்லவே?

‘எப்படியும் பத்மினியின்‌ பெற்றோர் வருவர்’

‘இந்த ஆட்டத்தில் அப்பா உண்டா அல்லது அவருக்கு அழைப்பே கிடையாதா?’

‘ஒரு வேளை தான் அங்கிருந்து நேரே போனால், இவருக்கு டின்னர்?’

‘வெளியில் உண்ணும் பட்சத்தில் பவானியும் பத்மினியும் நிச்சயம் எதுவும் செய்யப் போவதில்லை’

‘வீட்டில் இருக்கும் அவரை அழைக்காது ஒதுக்குவதும் அவருக்கு எதுவும் சமைக்காது‌ போவதும் தெரிந்தே பட்டினி போடுவதற்குச் சமம் இல்லையா?’

‘அப்பாவும் நம்மோட வராரா ஹரி?’ என்று‌ காலையிலேயே கிணறு வெட்டி, பூதம் கிளம்புவதைக் காண சின்மயிக்கு நேரமில்லை.

“நான்‌ ஈவினிங் கால் பண்றேன்” என்று‌ புறப்பட்டாள்.

மாலை நான்கு மணிக்கே நல்ல மழை பிடித்துக்கொள்ள, க்ளீனிக்கிலும் கூட்டம் குறைவாக இருக்கவே, ஏழு மணிக்கே வீடு திரும்பியும், அவர்கள் கிளம்பிச் சென்றிருந்தனர். அவள் எதிர்பார்த்தபடி பரசுராம் மட்டுமே வீட்டில் இருந்தார்.

பெஸரட் மாவு இருக்கவே, பெஸரட் தோசையும் தக்காளி தொக்கும் செய்து வைத்து, உடைமாற்றி, கேப் வரவழைத்து ஹரி சொன்ன உணவகத்துக்குச் சென்றாள். அதற்குள் ஹரியும் பவானியும் மாற்றி மாற்றி அழைத்தனர்.

“நீங்க ஸ்டார்ட் பண்ணா, நான் வந்துடுவேன்” என்றாள். ஜெயநகருக்கு உள்ளேயேதான் ரெஸ்ட்டாரன்ட் என்பதால் சீக்கிரம் சென்றுவிட்டாள்.

சின்மயி பத்மினிக்கு கைப்பையும் ஹரிக்கு ஷர்ட்டும் வாங்கி வந்திருந்தாள்.

“நேர இங்க வராம அங்க ஏன் போன?” - பத்மினி.

“சீக்கிரம் கிளம்பிட்டேன். ஹாஸ்பிடல் ட்ரெஸ் வேற. அதான்…”

பவானி “சமைச்சியா சின்மயி?”

“ம்…”

“எதுக்கு… இத்தனை பேசறவர் என்னவோ பண்ணட்டும்னு‌ விட்டு வர வேண்டியதுதானே?”

“...”

“நீ செய்ய செய்யத்தான் அவர் எதிர்பார்க்கறார்”

என்னதான் தாழ்ந்த குரலில் பேசினாலும், எதிர் வரிசையில் அமர்ந்திருந்த‌ பத்மினியின் அம்மா தங்களையே கூர்ந்ததில், அவரது காதுகள் கூராகி விடைப்பது போன்ற
கற்பனை எழ, சின்மயி சிரித்துவிட்டாள்.

பவானி “ஏன்டீ, நான் இப்ப என்ன சொன்னேன்னு நீ சிரிக்கற?”

“இது வேற… அப்புறம் சொல்றேன்”

மனைவியின் குடும்பத்திற்கும் சகோதரிகளுக்கும் நடுவே திணறிய ஹரி “சீக்கிரம் முடிச்சு விடேன்’ என்பதுபோல் சின்மயியைப் பரிதாபமாகப் பார்த்தான்.

“நாம எல்லாரும்‌ இத்தனை செலவு பண்ணி விதவிதமா சாப்பிடும்போது‌ அப்பாவை பட்டினி போடறதா பவானி?”

“...”

“புடிக்கலைன்னா ஒட்டாம ஒதுங்கிப் போறது வேற. அது பர்ஸனல் சாய்ஸ். இது‌ வேற. ஸாரி டு ஸே திஸ். எனக்கு செரிக்காது பவானி”

“...”

“அவரை இங்க கூப்பிடலைன்னா அது ஹரியோட இஷ்டம். அதுக்காக அவர் சாப்பிடாம இருக்க முடியுமா?”

“நீ உன் வேலை, நேரத்தை மெனக்கெட்டு செஞ்சதுக்கு அவர்கிட்ட ஏதாவது மதிப்பு உண்டாடீ‌ சின்மயி… அம்மஞ்சல்லிக்குப் பிரயோஜனம் இல்ல”

“நிச்சயமா உண்டு பவானி. என்னால கில்ட் இல்லாம நிம்மதியா தூங்க முடியும்”

பவானி ஏதோ கேட்க யத்தனிக்க “ நீ கேட்டதுக்கு சின்மயி பதில் சொன்னா… விடு பவானி” என்ற ஹரியின் குரல் சற்றே கம்மி இருந்ததோ?

சின்மயியை பாலாமணி அழைக்க, ஒரு “எக்ஸ்க்யூஸ் மீ” யுடன் எழுந்து சென்றாள்.

எடுத்ததுமே “எங்க ஆளையே காணும், சிங்கம் ஊர்ல இல்லைன்னா இங்க வர மாட்டயா, ஒரு போன் கூடப் பண்ணக் கூடாதா சின்மயி?”

“அது வந்து மாமி…”

“சும்மாடீ பொண்ணே…உன் உடம்பு இப்ப தேவலையா? பவானி வந்துருக்காளாமே?”

“ஆமாம் மாமி”

“சரி, திங்கள் கிழமை எல்லாரும் ரெண்டு, மூணு கோவிலுக்குப் போறோம். காலம்பற ஆறு மணிக்கெல்லாம்‌ புறப்படணும்”

“சூப்பர் மாமி.‌ என்ஜாய்”

“அடடா, சின்மயி‌ நாச்சியார் உத்தரவு இல்லாம பெருமாளைப் பார்க்க முடியாதோ… இது எனக்குத் தெரியாம போச்சே”

“மாமி…”

“நானேதான். நீயும் எங்களோட வர. புரியறதா?”

“நான்… ஹாஸ்பிடல், க்ளீனிக்… ஜுரம்னு போன வாரமே நிறைய லீவ் போட்டேனே மாமி”

பின்னணியில் ‘அப்ப இன்னிக்கு ஏன்‌ க்ளீனிக் லீவாம்னு‌ கேளும்மா?’ என்ற சிங்கபிரானின்‌ குரல் கேட்டது.

‘என்னைப் பார்க்க ச்சிங்கா அங்க வந்திருந்தானா?’

சின்மயி “ஹரிக்கு இன்னிக்கு ஆனிவர்ஸரி. டின்னருக்கு வெளில வந்திருக்கோம்… அதான்… நான் நாளைக்கு கன்ஃபர்ம் பண்றேன் மாமி”

சின்மயி அழைப்பைத் துண்டித்த மறுநொடி சிங்கபிரானின் மெஸேஜ் வந்தது.

‘என் காரை ஓட்ட வேண்டாம். அட்லீஸ்ட் ஏறலாம் இல்லையா?’

‘காஷ்! இவன் வேற… பேசித் தீர்க்காம ஓய மாட்டான்’

‘நான் வரேன். போறுமா?’

‘தட்’ஸ் மை கேர்ல்’

********************

திங்களன்று காலை நாலரை மணிக்கே எழுந்து புது சல்வாரில் தயாரான சின்மயி, மழை தூறவே எதற்கும் இருக்கட்டும் என கை(பை)யோடு ஒரு மாற்றுடை எடுத்துக்கொண்டாள்.

பவானியும் குழந்தைகளும் உறங்க, ஹரியும் பத்மினியும் நேற்றே அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.

ஐந்தேகாலுக்கு வெளியில் வர, சோஃபாவில் அமர்ந்திருந்த
பரசுராம் கேள்வியாகப் பார்த்தார்.

“ஒரு எமர்ஜென்ஸி. வரேன்” என்றபடி நிற்காது வெளியேறினாள்.

மருத்துவத் தொழிலில் இது ஒரு நன்மை. எங்கிருந்தும், எப்பவும் இதைச் சொல்லிக் கழண்டு கொள்ளலாம்.

சிங்கபிரானை சந்திப்பதையும் பேசுவதையும் மறைப்பதும்… இப்படி அவன் அழைக்கும்போதெல்லாம் அப்பாவிடமும் ஹாஸ்பிடலிலும் பொய் சொல்வது‌ம் சின்மயியை உறுத்தியது.

‘இனிமே இப்படி பொய் சொல்லக் கூடாது. ஒரு சமயம் போல ஒரு சமயம் இருக்காது’

‘ஏதோ ஒரு காரணம், அவசரம்னு தேடி, நான் அங்க இல்லைன்னா மாட்டிப்பேன். அப்புறம் என்னை யாரும், எதுக்குமே நம்ப மாட்டா’

‘இந்தச் சிங்காவாலதான்…’

‘ஏய், அவனா உன்னைப் பொய் சொல்லச் சொன்னான்?’

‘எங்க, அப்பாக்குத் தெரிஞ்சா சிங்கபிரானோட பேச, பழகக் கூடாது…‌அவன் சங்காத்தமே வேண்டாம்னு சொல்லிடுவாரோன்னு உனக்கு பயம்’

‘பயம்னு இல்ல… அதுவா தெரியும்போது தெரியட்டுமே. எதுக்கு நானா‌ போய்‌ வம்பை விலைக்கு வாங்கணும்?’

‘அம்மா‌ போனதுல இருந்து , இந்த ஆறேழு மாசமா, ச்சிங்காவை பார்க்கு‌ம்போதும், அவன் கூட இருக்கும்போதும்தான் நினைச்சதை பேசறேன். மனசு அமைதியா இருக்கு’

‘இந்த தரம் யார்‌, என்ன சொன்னாலும் ச்சிங்காவை விட மாட்டேன். அதுக்காக நான்‌ பொய் சொல்றது தப்புன்னா தப்பாவே இருந்துட்டுப்‌ போகட்டும்’

மழை‌யில் நனைந்த காலை நேரத்துக்‌‌ காலியான சாலையில், சிங்கபிரானின் வீட்டுக்குச் செல்ல ஆன பதினைந்து நிமிடங்களுக்குள் சின்மயி இத்தனையும்‌ யோசித்துவிட்டாள்.

சிங்கபிரானின் வீட்டு வாசல் சிட்அவுட்டில் ஒரு பெரியவர் நின்றிருக்க, தயங்கிய சின்மயியை “வாம்மா” என வரவேற்றார்.

குழப்பத்துடன் ஹாலில் பிரவேசிக்க, “வா‌ சின்மயி, ஆள் வளர்ந்தாலும் அந்தக் குழந்தை முகம் மட்டும் மாறவே இல்ல. டாக்டராமே நீ?” என்று படபடத்த பாலாமணியின் தங்கை நாகமணி, பேச்சில் தான் கேசவின் அம்மா என்பதை நிரூபித்தார்.

சின்மயிக்கு யாரென்று நினைவு வந்துவிட, “சௌக்யமா மாமி?”

அந்நேரத்துக்கே சமையலுக்கு உதவும் மாமி வந்திருக்க, கேசவ் இரண்டு, மூன்று பைகளை டொயோடா ஃபார்ச்சூனரில் ஏற்றினான்.

தங்கைக்கும் சின்மயிக்கும்‌ பூ கொண்டு வந்த பாலாமணி “வா, சின்மயி”

மேலிருந்து இறங்கி வந்த சிங்கபிரான் எதுவும் கூறாது, சமையலறைக்குச் சென்று பூஸ்ட்டுடன் வந்து “இதை அவ கிட்ட குடும்மா” எனவும், கேசவ் “இன்னுமாடா உங்க சண்டை தீரல?”

அட்லான்ட்டாவில் இருக்கும் கேசவின் அக்காவிற்கு திருமணமாகி எட்டு வருடங்களுக்குப் பின் குழந்தை பிறந்திருக்கிறது.
அதற்கான வேண்டுதல்களில் ஒன்றை நிறைவேற்றதான் இந்தப் பயணம்.

பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் வழியில் இருக்கிறது தொட்டமல்லூர் எனும் கிராமம். ஊர் சிறிதானாலும் இதன் பேர் பெரியது.

இங்குள்ள பெருமாளுக்கு ஸ்ரீ அப்ரமேய ஸ்வாமி என்று பெயர். மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்.

இங்குள்ள கையில் வெண்ணையுடன் தவழும் கிருஷ்ண விக்ரஹம் வாதிராஜ ஸ்வாமிகளால் நிறுவப்பட்டது. ஒற்றை சாளக்கிராமத்தால் ஆன இந்தக் குழந்தை கிருஷ்ணன் வெகு விசேஷம். வரப்பிரசாதி.

ஏழரை மணிக்கெல்லாம் கோவிலில் இருந்தனர். திங்கள்கிழமை, மழைக்காலாக வேறு இருந்ததில், கோவிலில் வெகு சிலரே இருக்க, ஏகாந்தமான தரிசனம்.

கேசவின் பெற்றோர் தங்களின் வேண்டுதல் நிறைவேறியதில் வெள்ளியிலான சிறிய தொட்டில் ஒன்றும் அரைஞாண் சலங்கையும் காணிக்கையாகத் தந்தனர்.

சிங்கபிரான் ‘ஜகதோதாரண…’ என்ற‌ காபி ராகத்தில்அமைந்த பாடலைப் பாடவும், கோவிலுக்குள் ஆங்காங்கே இருந்தவர்கள் கூடி விட்டனர். இருபது பேர் வரை இருக்கும்.

அது சிங்கபிரானின் குரலின் ஈர்ப்பு மட்டுமன்றி, அந்த அம்பேகால் கிருஷ்ணனின் அழகில் மயங்கிய புரந்தரதாஸர் பாடிய மிகப் பிரபலமான அந்தப் பாடலும்‌ ஒரு காரணம்.

கோவிவில் சூடான பொங்கல் பிரசாதம் தந்தனர்.

அங்கிருந்து ஸ்ரீரங்கப்பட்டணத்திற்குச் சென்றனர். வழியில் சென்னப்பட்னாவில் , மர பொம்மைகளையும் மைசூர் சில்க் ஃபேக்டரியையும் பார்த்த நாகமணி “முதல்ல ஷாப்பிங்கை முடிச்சுக்கலாம்” என்றார்.

சிங்கபிரான் சின்மயிக்கு ஒரு குரங்கு பொம்மை வாங்கிக் கொடுத்தான். இருவரும் காரைப் போலவே, புடவைக்கும்‌
சண்டை‌போட்டு முறைத்துக் கொண்டனர்.

சின்மயி பார்த்த மஞ்சளில் பச்சைக் கரையிட்ட புடவையை வாங்கியவனை முறைத்தவளிடம் “இது உனக்கில்லை. எனக்கு. நானே கட்டிக்கறேன். ஹேப்பி?”

பக்கென்று சிரித்த கேசவ் “கட்டுக்குடுமியும் மஞ்சள் புடவையும்… எனக்கே ஆசையா இருக்கேடா சிங்கம்…”

“ஒட்டுக் கேக்காதடா”

“அதுக்கு நீங்க ஓரமா போய் சண்டை போடணும்”

கர்நாடகாவின் ஸ்ரீரங்கப்பட்டினத்திலும் நம் ஸ்ரீரங்கத்தைப் போலவே பள்ளிகொண்ட ஆதிரங்க பெருமாளும் காவிரியும் உண்டு. இது திப்புசுல்தானின் தலைநகரமும் கூட.

அங்கே காவிரிக் கரையில் இருந்த நிமிஷாம்பா கோவிலுக்குச் சென்றனர். இடைவிடாது, சத்தமின்றி மழை தூறிக்கொண்டே இருந்தது.

இரண்டு வாரங்களுக்கு மேலாக நல்ல மழை பெய்ததில்‌ காவிரி இரு கரைதொட்டு சுழித்து ஓடியது. அதிகக் கூட்டம் இல்லாததில் பெரிய கல்மண்டபமும் படித்துறையும் தாழ்ந்து படர்ந்த மரங்களும் அங்கேயே தங்கச் சொன்னது.

ஸ்ரீங்கமும் அரங்கனும் அம்மாமண்டபத் துறையும் ரத்தத்தில் கலந்தவர்களுக்கு அந்த இடத்தை விட்டு நகரவே மனதில்லை.

பாலாமணி “இவ்ளோ தூரம் வந்துட்டு காவேரில ஒரு முழுக்கு கூட போடாம எப்படி?”

“விளையாடாதம்மா… மழை வேற பெய்யறது” என்றான் சிங்கபிரான்.

“அடப்போடா. மிஞ்சிப் போனா சளி புடிக்கும். பரவாயில்லை. நீ வாடீ நாகம்” என தங்கையோடு நதியில் இறங்கிவிட, அதன் வசீகரம் மற்றவர்களையும் இழுத்தது.

பிறர் கவனத்தைக் கவராது ஆற்றில் குளிக்கும் வித்தை தெரிந்த சின்மயி, இரண்டு வாலிபர்கள் உடன் இருக்கும் லஜ்ஜை‌ சிறிதுமின்றி, மூத்த‌ பெண்களுடன் வெகு லாகவமாகக்‌ குளித்துக் கரையேறினாள்.

பெண்கள் மூவருமே உடை மாற்றி வர, கேசவின் தந்தை “முன்னாடியே போட்ட ப்ளானா இது?” என்றார்.

கையோடு எடுத்து வந்த கட்டுசாதத்தை உண்டனர். சிங்கபிரானின் முடி காற்றில் காய்ந்து எல்லாப் பக்கமும் பறந்து, முகத்திலும் தட்டிலும் விழ, பாலாமணி “முதல்ல வெட்டி எறிடா இதை”

“...ம்மா…” என்றான் சிங்கபிரான்.

உண்டு முடித்திருந்த சின்மயி, எழுந்து தன் பையிலிருந்து பேண்ட் ஒன்றை எடுத்து, தட்டும் கையுமாக இருந்த சிங்கபிரானின் தலை முடியைக் கோதி நிதானமாகக் கொண்டை போட, சிங்கபிரான் அவளைப் பார்த்து சின்னதாகச் சிரித்து, ஏற்பாகக் கண்களை மூடித் திறந்தான்.

கேசவ் “இத… இதத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்பது போல் சிரிக்க, சின்மயியின் இயல்பான செய்கையும் சிங்கபிரான் அதை அலட்டலின்றி ஏற்ற விதமும், தேடினால்‌ கூடத் தவறாகத் தெரியாத‌ அந்தக் காட்சியில் பெரியவர்கள் மூவரும் திகைத்தனர்.

குளுமையான சூழல் கண்களை இழுக்க, புறப்பட மனமின்றி பாலாமணியும்‌ நாகமணியும் மண்டபத்திலேயே படுத்துவிட்டனர். தூணில் சாய்ந்து அமர்ந்த சிங்கபிரானுக்கு தூக்கம் கண்ணை இழுத்தது.

மழைச்சாரல் தெறித்ததில் விழித்தவன், மற்ற எல்லோரும் உறக்கத்தில் இருக்க, சின்மயியை காணாததில் பதட்டத்துடன் எழுந்தான்.

ஏழெட்டுப் படிகள் கீழே இறங்கி ஒரு மரத்தின் அருகே பிரவாகிக்கும் காவேரியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
விருட்டென எழுந்து ஓடியவன், மெதுவே அருகில் சென்று அமர, சின்மயி அழுவது தெரிந்தது.

ஸ்ரீரங்கப்பட்டினமும் ஆதி ரங்கனும் காவேரியும் படித்துறையும் சின்மயிக்கு சிறுவயது நினைவுகளோடு அம்மா‌ கல்யாணியின் மறைவை ஞாபகப்படுத்தி இருப்பது புரிய, அவள்‌ திடுக்கிடாமல்‌ மிக‌ மென்மையாக அழைத்தான்.‌

“புல்புல்”

“...”

“எதுக்குடீ அழற?”

“காவேரின்னா எனக்கு எத்தனை புடிக்கும்னு உனக்குத்‌ தெரியும்தானேடா?”

“ம்…”

“ஆனா, இப்ப பயமா இருக்கு‌ ச்சிங்கா!”

“நான் உன்‌ கூட இருக்கும்போது என்ன‌ பயம்…ம்?”

சிங்கபிரான் அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.

மகன் எழுந்து சென்ற வேகத்தில் விழித்து, என்னவோ எனப் பின்னோடு வந்து பார்த்த பாலாமணி கவலையுடன் நின்றார்.
 
Last edited:
Jun 19, 2024
20
29
18
Trivandrum
😍😍😍

ச்சிங்கா...❤️❤️❤️

உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்
வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே
நானும் இணையலாம்..