• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நிழலாக துணையாக... 4

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
58
208
53
Chennai
நிழலாக துணையாக... 4
புது இடம், முதன் முறையாக உறவும் பெயரும் தொழிலும் மட்டுமே தெரிந்த ஒருவருடன் திருமணம், ஒரே அறையில், படுக்கையில் உறக்கம். நீண்ட நேரம் டென்ஷனுடன் அசையாது படுத்திருந்த அலர்மேல்வள்ளி, விட்ட உறக்கத்தை எல்லாம் முடித்துவிட்டே கண்விழித்தாள்.

மேகமூட்டமும் அடர்ந்த திரைச்சீலைகளும் அளித்த உபயத்தில் அறைக்குள் இன்னுமே இருள் பரவி இருக்க, மீண்டும் தூங்கலாமா என நினைத்தவள், அருகில் இருந்தவனைக் காணவில்லை என்பதோடு, நேரம் பத்தே கால் என்றது கடிகாரம்.

‘ஆச்சிக்குத் தெரிஞ்சா அஞ்சு நாளைக்கு அர்ச்சனை செய்யும்’

தேவசேனாதிபதியின் ரஜாய் துளிச் சுருக்கமின்றி மடித்து வைக்கப்பட்டிருந்தது. எழுந்து தன் ரஜாயை மடித்தவள் பெருமூச்சு விட்டாள்.

‘இந்த மாமா நேத்து என்ன பேச்சு பேசறாங்க! க்ளீனிக்ல நாய், பூனைகிட்ட கூட அத்தனை சாஃப்டா பேசறவங்க. அதைவிட உத்ரா கிட்ட பேசும்போது எத்தனை மென்மை!’

ஃப்ரெஷ் ஆகி, கீழே வந்து தானாகவே பூஜையறைக்குச் சென்று விளக்கேற்றினாள். பிரேக்ஃபாஸ்ட்டைத் தவிர்த்து ஹார்லிக்ஸும் வாழைப்பழமும் எடுத்துக்கொண்டாள்.

உத்ரா இரண்டு பெண் குழந்தைகளுடன் பின் பக்கத்தில் இருந்த ஷெட்டில் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
நேஹாவின் மகள்களாம்.

“நமஸ்தே ஆன்ட்டீ” என்றனர்.

‘ஒத்த கயத்துல என்னை அம்மாவா, ஆன்ட்டியா ஆக்கிப்புட்டீங்களேடா’

“ஸ்கூல் இல்லையா?” என்றதற்கு நேஹா சொன்ற “ஆஜ் பூசும்” என்ற பதிலுக்கு ‘இன்று தை பூசம் என்பதால் விடுமுறை’ என அர்த்தம் என்பதைக் கண்டுபிடிக்கவே இருபது நிமிடங்களாயிற்று.

தேவசேனாதிபதியைப் பற்றி அவளிடம் விசாரிக்கப் பிடிக்காமல் தயங்கியவளிடம் அவளே ‘சாப் க்ளீனிக், தோட்டம் எல்லாம் முடிந்து மதியம் இரண்டு மணிக்கு வருவார்” என்றதை மொழி பெயர்ப்பதற்குள் இரண்டு மூன்று அடவுகளைக் கற்றுக் கொண்ட அலருக்கு நாக்கு தள்ளியது.

‘ஏற்காட்ல எனக்கு இது தேவையா, ஹிந்தி தெரியாது போடா’

அலர்மேல்வள்ளியிடம் மொபைல் இல்லை. அங்கு Wi-fi மோடமுடன் கூடிய தொலைபேசி இருந்தது. அனுமதி கேட்காமல் உபயோகிக்கவோ, நேஹாவைக் கேட்கவோ விருப்பம் இல்லை.

அதைவிட, யாரிடமும் பேசவும் பிடிக்கவில்லை. தனக்கு உரிமையானதாக, பாதுகாப்பானதாக, தன் ஆசைகளை, தேவைகளை கேட்டுப் பெறும் சலுகை நிறைந்ததாக, தன்னுடைய மனிதர்களாக உணர்ந்த தன் வீட்டினரிடமே பேசப் பிடிக்கவில்லை.

நேஹா “மாஃப் கீஜியே மேம், ஸாப் கொடுக்க சொன்னாங்க, மறந்துட்டேன்” என ஒரு கவரைக் கொடுத்தாள். அதில்

‘அலர், என்னிடம் உன் மொபைல் நம்பர் இல்லை. ஏதாவது வேண்டுமெனில் லேண்ட்லைனில் இருந்து அழை. என் நம்பர் 94******. யாரிடம் பேச வேண்டுமானாலும் தயங்காது ஃபோனை உபயோகித்துக் கொள் - தேவா” என எழுதி வைத்திருந்தான்.

அலர்மேல்வள்ளிக்கு ஏனோ அழுகை வந்தது.

****************

பிரகாஷ் வந்து பெண் பார்த்த அன்றே பூ வைத்து, இரண்டே மாதங்களில் திருமணம் என நிச்சயித்தனர். அவனும் அவன் குடும்பத்தினரும் என்னமோ தேனொழுகத்தான் பேசினர். ஆரம்பம் முதலே அலருக்கு ஏனோ அவன் மீது நாட்டம் வரவில்லை.

அம்மா அபிராமியிடம் சொல்ல, அதை அவர் மேலிடத்திற்குக் கொண்டு சென்றதில் அவருக்குப் பொட்டப் புள்ளையை வளர்க்கத் தெரியவில்லை என்று பட்டமளித்தனர்.

இதன் பலனாக, வள்ளியம்மை ஆச்சி குத்திக் குத்திப் பேசத் தொடங்கினார். முன்பே பாட்டிக்கும் பேத்திக்கும் ஏகப் பொருத்தம். இப்போது தொட்டதற்கெல்லாம் முறைத்துக்கொண்டனர்.

இதில் பிரகாஷின் ஃபோன் இம்சை வேறு. அவன் மட்டுமின்றி, அவனது அம்மாவும் அக்காவும் வேறு அவ்வப்போது கால் செய்து அழை(று)த்தனர். எல்லா தடவையும் ஒரே வசனம்தான்.

அவர்கள் வீட்டுடன், குறிப்பாக அன்பான, கலகலப்பான, இனிமையான சுபாவமுள்ள, தங்கமான, பொறுப்பான, பண்பாடான, பாரம்பரியமான, உதவும் இரக்க குணமுள்ள, மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து, மதித்து நடக்கும் உத்தமனான பிரகாஷை அனுசரித்து நடக்க வேண்டும்.

‘இத்தனை நல்லவனை, ‘ங’ப்போல் வளைபவனை அனுசரிக்க வேண்டிய அவசியமென்ன, அதையே ஏன் திரும்பத் திரும்பச் சொல்கின்றனர்?’ என்பதுதான் அலர்மேல்வள்ளியின் முதல் சந்தேகமும் கேள்வியும்.

அதோடு, தங்கம், வெள்ளி, வாகனம், ரொக்கம் எல்லாம் நிர்ணயிக்கப்பட்டு, நிச்சயிக்கப்பட்ட ஏற்பாட்டுத் திருமணத்தை, சொடக்குப் போட்டதுபோல் அன்புசார் வசனங்களைப் பேசி காதல் கல்யாணமாக மாற்ற பிரகாஷ் முனைந்தது அலர்மேல்வள்ளிக்கு எரிச்சலைக் கொடுத்தது.

ஏற்பாட்டுத் திருமணங்களை அவள் வெறுக்கவும் இல்லை, உண்மையில் அதற்கான காரணங்களும் அவளிடம் இல்லை. எந்தவிதமான திருமணமாக இருப்பினும் அடிப்படை ஈர்ப்பும், அந்த வயதுக்கே உரித்தான எதிர்பார்ப்பும் கல்யாணம் குறித்தான ஆசைகளும் கனவுகளும் பரவசமும் நிச்சயமாக உண்டுதான்.

ஆனால், அதற்கும் குறைந்தபட்ச அவகாசம் உண்டல்லவா? அப்படி ஒன்றும் தன்னை மீறி பிரகாஷின் வசம் ஈர்க்கப்படாத அலர்மேல்வள்ளிக்கு அவனது முயற்சிகள் எரிச்சலைத் தர, முடிந்த வரை மேலோட்டமான உரையாடல்கள், மழுப்பலான, பிடிகொடுக்காத பதில்கள் என நழுவியவள், சமயத்தில் அவனைத் தவிர்க்கவும் செய்தாள்.

அலரின் நாட்டமின்மை வெளிப்படையாகத் தெரிந்ததில், வியாழ நோக்கம், ஜாதகப் பொருத்தம், அழகு, அந்தஸ்து, பணம், படிப்பு என தினசரி நடந்த மூளைச்சலவை ஒருபுறம், நகை, புடவை, சீர், மற்ற ஏற்பாடுகள் ஒருபுறம் என துரிதகதியில் நாள் பறந்து, பத்திரிகை அடித்து வந்து விநியோகிக்கவும் தொடங்கி விட்டனர்.

ஒரு கட்டத்தில் இனி தன் மறுப்புகள் எதுவும் எடுபடாது எனப் புரிந்துவிட, அலர்மேல்வள்ளி தன் வீண் பிடிவாதத்தைக் கை விட்டுத் திருமணத்தை ஏற்கத் தயாரானாள்.

மேலும் தன்னை உற்சாகமாக்கிக் கொள்ள தன் வீடு, தன் அறை, திருமணப் புடவைகள், நகைகள், மாப்பிள்ளைக்கென இவர்கள் வாங்கி இருந்த உடை, செயின், பிரேஸ்லெட், Citron கார், தன் மேக் ஓவர், வீடு தயாராவது, உறவுகளுக்கான உடைகள், நட்பு வட்டத்திற்கான பரிசுகள், திருமண அழைப்பிதழ், வீட்டினர் பார்வையிடுவது, சிரித்துப் பேசியபடி பேக்கெட் செய்வது என அனைத்தையும், வீடியோ எடுத்து ,அதை நேர்த்தியாக எடிட் செய்து, பொருத்தமான இசையுடன் தொகுத்தாள்.

கல்யாணக் களையும் செல்லமாய் வளர்ந்து, மணமாகித் தன் வீட்டை , பெற்றோரை, உறவுகளை, முதன்மை உரிமையைப் பிரியப்போகும் வருத்தமும் அந்தக் காணொளியில் வெகு அழகாய் வெளிப்பட்டிருந்த விதம் அலருக்கே பிடித்துவிட்டது.

அவளது உற்சாகம் மீண்டதே பெரியவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. அதைத் தன் நட்பு வட்டத்திற்குப் பகிரவும் செய்தாள். அதன் பிறகுதான்…

திருமணத்திற்கு முன்பான கடைசி ஒருவாரத்தில் அலர் கேட்ட, பார்த்த விஷயங்களும் அவளுக்குக் கிடைத்த நேரடி அனுபவங்களும் சேர, சட்டென மு டிவெடித்து வெளியேறினாள்.
பிறகு நடந்த எதுவும் அவளது கட்டுப்பாட்டில் இல்லை.

“மேம் ஸாப்”

நிர்மல் வந்து புதிதாகப் பறித்த நாட்டு பப்பாளிப் பழங்களையும் ஆரஞ்சுகளையும் சாவியையும் கொடுத்தான்.

‘இன்று ஆச்சர்ட்ஸுக்கு போவதாகச் சொல்லிச் சென்ற தேவா எங்கே, இவன் மட்டும் வந்திருக்கிறான்?’

அலரின் கேள்வி புரிந்ததுபோல் “ஸார் கோடா ராஞ்ச்சுக்கு (குதிரை லாயம்) போய் இருக்கார். வர நேரமாகும்னு சொல்ல சொன்னார்”

“சரி”

*****************

மற்றொரு நாள்.

“மேம் சாப், சமையல் ரெடி, நீங்க சாப்பிடறீங்களா…?” என்ற நேஹாவின் வாக்கியத்தில் ‘ உன் புருஷனுக்காக வெய்ட் பண்ணப் போறியா, இல்ல நீ பாட்டு சாப்பிடப் போறியா?’ என்ற கேள்வி ஒளிந்திருப்பதாக அலருக்குத் தோன்றவே, பசித்தாலும் “இல்ல, சார் வரட்டும்” என்றாள்.

திருமணமாகி, இங்கு வந்து பத்து நாட்களாகி விட்டன.
அலர்மேல் வள்ளி “எனக்குத் தெரியும், நீ என்னோட மம்மிதான்” என்ற உத்ராவின் நம்பிக்கைக்கும் ஆசைக்கும் தடைபோட விரும்பவில்லை.

இந்தத் திருமணம், வீடு, உத்ரா, நேஹா, தேவசேனாதிபதியின் கூர்மையான கேள்விகள், குத்திக்காட்டுவது போன்ற கேலிகள், அதைத் தாண்டி அவளது தேவைகளை அவன் யோசிப்பது போன்ற அனைத்தும் ஏதோ நீண்ட நாட்களாய் நடப்பதுபோல் தோன்றியது.

நிற்க நேரமில்லாது ஒரு விஷயத்தில் ஆழ்ந்து விட்டால் நேரம் பறப்பதே தெரியாது. அதேபோல் எதுவும் செய்யாது பொழுதை நெட்டித் தள்ளினாலும் நீண்ட காலமாகத் தோன்றும்தானே?

ஒருநாள் மதிய உணவின்போது “உங்க வீட்டுக்கு, அட்லீஸ்ட் உங்க அம்மா கிட்டயாவது கால் பண்ணி பேசு, அலர். பாவம், அத்தை என்கிட்ட புலம்பி, அழறாங்க”

“...”

“உன் மொபைல் எங்க, நம்பர் கேட்டேனே”

“உங்க கிட்ட அழுத எங்கம்மாவுக்கு என் மொபைல் எங்கிட்ட இல்லைன்னு தெரியாதா, இல்ல, இந்த லேண்ட்லைன் நம்பரை வாங்கி எங்கிட்ட பேச முடியாதா?”

“மெதுவாடீ, சர்வன்ட் புழங்கற வீட்ல சத்தம் போடாம பேசணும்னு உனக்குத் தெரியாதா?”

“ஸாரி”

தேவசேனாதிபதி அன்று மாலை லேட்டஸ்ட் ஆன்ட்ராய்ட் மொபைலுடன் வந்தான். அலர்மேல்வள்ளி தான் அவனுக்கு பாரமேற்றுவதாக உணர்ந்தாள்.

“உங்க அம்மா, அப்பாவோட பேசு அலர். உனக்குதான் அந்தக் கல்யாணம் வேணான்னு நீ நினைச்சது நடந்துடுச்சுல்ல, இன்னும் என்ன?”

“...”

“என்னடீ முறைக்கிற, அது சரி. இந்தக் கல்யாணம் மட்டும் வேணும்னா சொன்னேன்னு கேக்குற, அதானே, புரியுது, புரியுது”

தேவசனாதிபதியின் பாவனையில் அலர் பக்கெனச் சிரித்துவிட்டாள்.

அவன் கூறியதுபோல் புது எண்ணில் இருந்து தன் பெற்றோரை அழைத்து அவ்வப்போது பேசவும் செய்தாள்.

*****************

முந்தைய நாள் மாலை, தேவா க்ளீனிக்கில் இருந்து வந்து குளித்துவிட்டுக் கீழே வந்து, உள் அங்கணத்தில் தன் லேப்டாப்பில் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தான்.

கார்பெட்டில் அமர்ந்து கலர் அடித்துக் கொண்டிருந்த உத்ராவுடன் அலர்மேல்வள்ளி அமர்ந்திருந்தாள். அழைப்பு மணி ஒலித்தது.

நேஹா இரவு உணவைத் தயாரிப்பதில் மும்முரமாக இருக்க, சென்று கதவைத் திறக்க சிறிது தாமதமானது. வந்தது தேவசேனாதிபதியின் நெருங்கிய நண்பன் வாசுதேவன்.

அதுமட்டுமின்றி, தேவா, வாசுதேவன், செல்வராஜ் மூவருமே ப்ளஸ் டூ வரை ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்தவர்கள்.

வாசுதேவனின் தந்தை சேலத்தில் பிரபல ஆடிட்டர். இப்போது வாசுதேவனும் அங்கேயே. ஏற்காட்டின் அநேக காஃபி, மிளகு, காய்கறி மற்றும் பழத்தோட்ட உரிமையாளர்களின் சொத்து, வருமான, வரி விவரங்கள் அனைத்தும் அவர்களிடமே. கூடுதலாக, வாசுதேவன் இங்கே அவர்கள் வீட்டிலேயே ஒரு ஆஃபீஸ் திறந்திருக்கிறான். இன்னும் சொல்லப்போனால், ராஜ் ரோஸ்ட்டர்ஸின் கணக்கு வழக்குகள் அனைத்தும் வாசுதேவனின் தந்தையிடமே.

தேவசேனாதிபதியின் அத்தனை உணர்வுகளும் புரிந்தவன். தேவா போஸ்டிங்கில் இருந்த எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கிறான். மிக முக்கியமான தருணங்களில் ஆதரவாகவும் ஆலோசகராகவும் உடன் நின்றிருக்கிறான். உத்ரா யாரெனத் தெரிந்தவன். உறவுகள் அனைத்தும் விலகி நின்றபோதும் தொலைவில் இருந்தே தோள்கொடுத்தவன்.

இரண்டாவது பிரசவம் ஆன மனைவி, குழந்தைகளை அழைத்துவர சென்னைக்கு சென்றிருந்தவன், தேவாவின் திருமணம் பற்றிக் கேள்விப்பட்டு வந்த கையோடு, விசாரிக்க வந்துவிட்டான்.

“வாங்கண்ணா” என்று வரவேற்றவளைப் பார்த்துப் புருவம் உயர்த்திய வாசுதேவனிடம் அலர் சங்கடமாகப் புன்னகைத்தாள். இவளது திருமண அழைப்பிதழ் அவனுக்கும் போய் இருக்குமே? ‘

‘இவன் எதுவும் ஏடாகூடமா கேக்காம காப்பாத்திடு, ஆண்டவா!’

அதைப் பொருட்படுத்தாத வாசுதேவன் “அலர், நீ உன் கல்யாணத்தை ஏன், எதுக்கு நிறுத்தினேன்னு எனக்குத் தெரியாது. ஆனா, ஒண்ணு மட்டும் சொல்றேன், நீ எத்தனை அதிர்ஷ்டசாலின்னு போகப் போகப் புரியும். என் தேவா ரொம்ப ஸ்பெஷல்” என்றவன் நண்பனைத் தோளோடு அணைத்துக்கொண்டான்.

வால்பாறை ஜங்கிள் ஸ்டே ரிஸார்ட்டில் ஒருவாரம் தங்குவதற்கான ஒபன் புக்கிங் கார்டை பரிசாகக் கொடுத்தான்.

“உங்க ரெண்டு பேரோட நிலமையும் எனக்குப் புரியறது. ஆறு மாசம் டயமிருக்கு. போய் மனசு விட்டுப் பேசிட்டு நடந்ததை ஏத்துக்கோங்க. அகெய்ன், நான் ஃபோர்ஸ் பண்ணல. சஜஸ்ட் பண்றேன்”

“...”

“தேவா, அலர், நீங்க ரெண்டு பேருமே எதுலயாவது செட்டில் ஆகி, எதுக்காவது கட்டுப்பட்டுதான் ஆகணும். ஒரு வாரம் உத்ராவை நான் பார்த்துக்கறேன். என் குட்டிப்பையனைப் பார்த்தா, கொஞ்சவும் கேள்வி கேக்கவுமே நேரம் போதாது அவளுக்கு” என்றவன் “ என்னடீ குட்டீ, என் கூட வரயா?” என்றான் உத்ராவிட்ம்.

“குட்டி பேபியா அங்கிள்?” என உடனே கிளம்பியவளைப் பார்த்து வாசுதேவன் வாய்விட்டுச் சிரித்தான்.

வழியனுப்பச் சென்ற தேவசேனாதிபதியிடம், வாசலில் நின்று நீண்ட நேரம் தாழ்ந்த குரலில் எதையோ பேசிக்கொண்டிருந்து விட்டே அங்கிருந்து சென்றான்.

அன்றிரவு தேவசேனாதிபதி “நீ இங்க வந்து பத்து நாளாகுது. என்னை லல் பண்றேன்னு சொல்லிக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, வாசல் கதவைத் திறக்கக் கூட யோசிச்சா என்ன அர்த்தம்?”

“அது….”

“நீ இப்படி மத்தவங்க எதிர்ல ஏனோ தானோன்னு இருந்தா பாக்கறவங்களுக்கு, ஏதோ நான்தான் உன்னை கட்டாயப்படுத்திக் கட்டிக்கிட்டு வந்தாப்பல தோணாதா?”

“...”

“நீ ஏன் உன் வீட்டை விட்டுப் போன,, என்னை லவ் பண்றதா சொல்லி, கல்யாணம் பண்ணிக்க ஏன் ஒத்துக்கிட்ட, இனிமே உன் ப்ளான் என்னன்னு சத்தியமா எனக்குப் புரியலைடீ”

“...”

“ஆனா, நீ இப்படி எதுலயும் ஒட்டாம, எப்போதும் ஏதோ யோசனைல இருக்கறதும், யாரோ உன்னை உத்ராக்கு கவர்னெஸ்ஸா அப்பாயின்ட் செஞ்ச மாதிரி அவ பின்னாலயே சுத்தறதும்… சின்னப் பொண்ணைத் தூக்கிட்டு வந்து ஜெயில்ல அடைச்சு வெச்சு இருக்கேனோன்னு எனக்கு கில்ட்டியா இருக்கு மா”

“மாமா…”

“அன்னைக்கே லவ்வும் இல்லை, ஒண்ணும் இல்லைன்னு மூர்க்கமா மறுத்து இருக்கணுமோன்னு தோணுது. ஆனா, எல்லார் முன்னாலயும் உன்னைத் தப்பாக் காட்டத் தோணலைடீ”

“...”

“ஒண்ணே ஒண்ணு மட்டும் செய். இந்த வீட்டுப் பொண்ணா, உரிமையோட இரு. நமக்குள்ள இருக்கறது அடுத்தவங்களுக்குத் தெரியாம பார்த்துக்கோ”

“...”

“இல்ல, இது சும்மா தற்காலிகமா தப்பிக்க…”

“நான்தான் சொன்னேனே மாமா, உங்களுக்காகதான் ஓடி வந்தேன்னு”

“வேணாம்டீ…”

“நம்புங்க மாமா”

“போடீ, பக்லி(பைத்தியக்காரி)”
 
Jun 19, 2024
30
40
18
Trivandrum
😍😍😍

ஒருவேளை கல்யாணத்தை நிறுத்தி அவனுக்காக ஓடி வந்த இந்த மாமானோட மனசு மல்லிகை பூ போல பொன்னானதா இருக்குமோ? 🤔🤔😁😁

 
  • Love
Reactions: VedhaVishal

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
58
208
53
Chennai
😍😍😍

ஒருவேளை கல்யாணத்தை நிறுத்தி அவனுக்காக ஓடி வந்த இந்த மாமானோட மனசு மல்லிகை பூ போல பொன்னானதா இருக்குமோ? 🤔🤔😁😁

இருக்கும், இருக்கும்🙈😍
 

S HEMA

New member
Mar 18, 2026
11
9
3
CHENNAI
எழுதிப் பாருங்க. எது அதிகம் வளையுதுன்னு தெரியும். ஞ எங்கேயுமே வளையலை
Hahah... All straight lines baby... This has big circle🤪cool cool I just loved that comparison...
 
Last edited: