அத்தியாயம் – 4
தட்சசீலம், பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காந்தார தேசத்தின் தலைநகரம். அலெக்சாண்டரின் படைகள் அதன் எல்லையில் அணிவகுத்து நின்றன. சுற்றிலும் பார்த்தாலே நல்ல வளமான தேசம் என்று தெரிந்தது. உயரமாக வளர்ந்து நின்ற கரும்பைப் பார்த்தவர்கள் அது என்ன என்பது தெரியாமல் விழித்தார்காள். உண்ணக் கூடிய பொருள்தான் என்று அறிந்த போது அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது. இனிப்பான அதன் சுவை வீரர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. “இங்கே மதுவை விளைவிக்கின்றார்கள்” என்று தங்களுக்குள் வியந்து கொண்டார்கள்.
அலெக்சாண்டர் தனது தளபதிகளிடம் அந்த தேசம் பற்றி விசாரிக்கத் தொடங்கினான். மேலும், அதன் மன்னனுக்குத் தனது வருகையை அறிவிக்கும்படியும் கூறினான்.
அதன் இப்போதைய அரசன் அம்பி, ஐம்பதுகளின் முற்பகுதியில் இருந்தான். தனது இருபது வயதில் தந்தை இறந்து போனதால் அம்பி அரசனாகப் பொறுப்பேற்றான். ஆரம்பத்தில், தனது அண்டை ராஜ்ஜியத்தின் மீது படையெடுத்து தனது பிரதேசங்களை விரிவுபடுத்த முயலத்தான் செய்தான்.
தொடர்ச்சியான தோல்விகள், அவன் ஒரு இயல்பான போர்வீரன் அல்ல என்றும், போர்களில் வெற்றி பெறத் தேவையான தீர்க்கமான பார்வை அவனிடம் இல்லை என்றும் புரிய வைத்தன. அதன் பிறகு, தனது விரிவாக்கத் திட்டங்களைக் கைவிட்டு, தனக்கு மரபுரிமையாகக் கிடைத்தவற்றுடன் திருப்தி அடையக் கற்றுக் கொண்டான்.
அந்த ராஜ்ஜியம் ஹிந்துகுஷ் மலையில் உள்ள கணவாயின் முகப்பில் அமைந்திருந்ததால், அது இந்தியாவிற்கான ஒரு நுழைவாயிலாகவும், வர்த்தகத்திற்கு ஒரு முக்கிய இணைப்பாகவும் செயல்பட்டது. இது நாட்டுக்கு நல்ல வருவாயை வழங்கியது, அவனது ராஜ்ஜியத்தைப் பராமரிக்கப் போதுமானதாகவும் இருந்தது.
காலப்போக்கில், அவனுக்கு ஆட்சி செய்வதில் ஆர்வம் குறைந்தது, மேலும் அவன் மேற்கொண்ட பெரும்பாலான நடவடிக்கைகள் அவனது மன்னர் பதவியைக் காப்பாற்றுவதற்கான சம்பிரதாயங்களாகவே இருந்தன. அம்பியின் வாழ்க்கை ஒரு சாதகமற்ற சூழ்நிலையில் இருந்தது, அவனது திட்டங்கள் எதுவும் அவனுக்குச் சாதகமாக அமையவில்லை. தனது ராஜ்யத்தின் எல்லைகளை விரிவுபடுத்துவதில் தோல்வியடைந்ததோடு மட்டுமல்லாமல், அவனால் அந்த ராஜ்யத்திற்கு ஒரு வாரிசை உருவாக்கவும் முடியவில்லை. அவன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டான். பல முயற்சிகளுக்குப் பிறகும், தனது ராஜகுரு மற்றும் ராஜ வைத்தியர் அறிவுறுத்திய சடங்குகளைப் பின்பற்றியும், வாரிசு இல்லை. இதன் காரணமாக அம்பி பெரும்பாலும் அரசவை நடவடிக்கைகளில் ஆர்வமின்றிப் போனான். அவன் ஒல்லியான, மெலிந்த உடலமைப்புடனும், சராசரி உயரத்துடனும் இருந்தான். அவனைப் பார்த்தால், சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஒரு இளம் இளவரசன் போன்ற தோற்றம் ஏற்படும். அவனை உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே அவனது உண்மையான வயதை யூகிக்க முடியும்.
இந்த நிலையில் எல்லையில் மாசிடோனியப் படைகள் அணிவகுத்து நின்றன. இது பற்றிய தகவல் வழக்கம் போல அம்பிக்குத் தெரிவிக்கப்பட்டது. அம்பி, இச்செய்தியைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனான்.
உடனே அமைச்சர்களையும், தளபதிகளையும் அழைத்து அவசர ஆலோசனை நடத்தினான். “எவ்வளவு பெரிய மாவீரன் அலெக்சாண்டர்! பாரசீக மன்னனையே தோற்கடித்த மாவீரன் ஆயிற்றே! அவர், நமது நாட்டிலா? அவருடன் போரா! நமது வீரர்கள் தலைகள் மட்டுமல்லாமல் என் தலையும் அல்லவா சிந்து நதியில் மிதக்க விடப்பட்டு விடும்! அமைச்சர்களே! இது போன்ற ஒரு ஆபத்தான நிலையில் நாம் என்ன செய்வது? எவ்வாறு தப்பிப்பது?” என்று பரபரப்பாக, முகம் முழுவதும் வியர்வையால் நிரம்பி வழிய, மிரட்சியோடு கேட்டான் அம்பி.
அரசரே இவ்வாறு அஞ்சி நடுங்கினால் மற்றவர்களுக்கு எவ்வாறு வீரம் வரும்? அவர்கள் இன்னும் அதிகமாகக் கோழையாகிப் போய் விட்டார்கள்.
“தன்மானம், கௌரவம், வீரம் என்றெல்லாம் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்வது தற்கொலை செய்வதற்கு நிகராகும். சரணாகதி மட்டுமே நம்மைக் காப்பாற்ற வல்லது” என்று அமைச்சர் பெருமக்களும் கருத்துத் தெரிவித்தனர்.
அடுத்த நிமிடமே அம்பி பரபரப்பாக இயங்கினார். அலெக்சாண்டரையும் அவரது படைகளையும் எல்லையிலேயே வரவேற்க ஒரு பெரும் படையைத் தயார் செய்தார். தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம் என்று அனைத்து விலை உயர்ந்த பொருட்களையும் ஒரு சிறிய பல்லக்கில் கொட்டிக் குவித்தார். இது தவிர இன்னும் ஏராளமான பரிசுப் பொருட்கள்.
அலெக்சாண்டரை வரவேற்க அவர்களை அனுப்பி வைத்தான்.
எல்லையில் மாசிடோனியப் படைகள்.
அலெக்சாண்டரும், அவரது தளபதிகளும் அம்பியின் படை ஆவேசமாகச் சீறிப் பாய்ந்து வரும் என்று காத்திருந்தனர். தங்களது படையைப் போருக்குத் தயாராக இருக்குமாறு எச்சரித்துக் கொண்டிருந்தார் அலெக்சாண்டர்.
அப்போது தூரத்தில் அம்பியின் படைகள். ஆனால் வாள் ஏந்த வேண்டிய வீரர்கள் வெறும் கரங்களோடு வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னால் ஒரு சிறிய பல்லக்கு.
“ஹெபஸ்டின், என்ன அது? இவர்கள் போர் நடத்த வருவது போல இல்லையே! என்ன நடக்கிறது?” என்று குழப்பத்துடன் கேட்டார் அலெக்சாண்டர்.
அம்பியின் படைகள் அனைத்தும் தூரத்தில் நின்றிருக்க, ஒருவன் மட்டும் வேகமாக முன்னேறி வந்தான். நேராக அலெக்சாண்டர் முன்னால் வந்து நின்றவன் கையில் தயாராக வைத்திருந்த மிகப் பெரிய முத்து மாலையை அவர் கழுத்தில் அணிவித்தான்.
“தங்களை வரவேற்பதற்காக எங்கள் நாட்டு மன்னர் அம்பி, இன்னும் நிறைய பரிசுகளைத் தங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்” என்றவாறே, பின்னால் திரும்பினான்.
பல்லக்கு வேகமாகக் கொண்டு வரப்பட்டது. அதனைத் திறந்து பார்த்த அலெக்சாண்டர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்.
‘இதைத்தானே அள்ளிச் செல்வதற்காக இப்பெரும் படையுடன் கிளம்பி வந்திருக்கிறேன்! ஆனால் அதற்கு வழியே வைக்காமல் கையில் வந்து விழுகிறதே!’ என்று வியந்து போனார் அலெக்சாண்டர்.
‘களம் காணாமலேயே வெற்றியா?’ சந்தோஷமாக இருந்தது அலெக்சாண்டருக்கு.
வெற்றிப் பெருமிதத்துடன் அங்கிருந்து அரண்மனையை நோக்கிப் புறப்பட்டன மாசிடோனியப் படைகள். அலெக்சாண்டரைக் கண்டதும் ஓடோடி வந்து வரவேற்ற அம்பி, “தாங்கள் எங்கள் நாட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியைத் தருகிறது. தங்களுக்கு இன்னும் பரிசுகளைத் தரக் காத்திருக்கிறேன். அத்துடன் இந்தத் தேசத்தையே தங்களுக்குக் காணிக்கையாக்கவும் தீர்மானித்து விட்டேன். தாங்கள் என்ன செய்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று பணிவாக உரைத்தான்.
அம்பியின் இந்தச் செயலில் அலெக்சாண்டர், இனிமேல் தொடரப் போகும் தனது இந்தியப் படையெடுப்புக்கு வழிகாட்டி கிடைத்து விட்டான் என்று பெரும் சந்தோஷம் அடைந்தான். என்னதான் அம்பியின் சரணாகதிப்படலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும்கூட, அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தான் அலெக்சாண்டர்.
சிறுவனாக இருந்தபோது மன்னர் பிலிப் பேசியது எல்லாம் நினைவுக்கு வந்தன. ‘இந்தியாவையும் இந்திய மன்னர்களையும் பற்றிய தந்தையின் மதிப்பீட்டுக்கும் தற்போதைய நிலைக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனாலும் அவருடைய கணிப்பு பொய்க்காது. அம்பியை வைத்து ஒட்டு மொத்த இந்திய அரசர்களின் வீரத்தையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஹஸ்தி போன்றவர்களை நாம் மறக்கக் கூடாது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பரிசுத்தமான வீரர்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஜாக்கிரதை” என்று வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தபடி அடுத்தது என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான் அலெக்சாண்டர்.
அரச விருந்தாளியாக தட்சசீலத்தில் அலெக்சாண்டர் தங்கியிருக்க, அக்கம் பக்கத்தில் இருந்த மன்னருக்கெல்லம் அவனது வருகையும், அவனிடம் சரணடைவதே தேசத்திற்கு நல்லது என்ற செய்தியும் அம்பி மூலமாக அனுப்பப் பட்டது. அதில் சிலர் அலெக்சாண்டரிடம் சரணடைந்தனர். சிலர் பதிலேதும் கூறவில்லை. சிலர் சரணடைய முடியாது என்று பதில் அனுப்பினர். இதை அறிந்த அலெக்சாண்டர் எப்படி உணர்ந்தான் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
“என்னை எதிர்த்தால் என்ன அகும் என்பதை மோதிப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்” என்று கர்ஜித்தான். ஒரு நாள், அவனது சேவகன் ஒருவன் வந்து அலெக்சாண்டரைப் பார்க்க அனுமதி கேட்டு ஒருவன் வந்திருப்பதாகவும் அவன் கேகேய நாட்டு அரசன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தான்.
“வரச்சொல்” ஒற்றை வார்த்தையில் கட்டளை பிறந்தது.
வேகமாக உள்ளே வந்து அவனுக்கு வணக்கம் தெரிவித்தான் அவன்.
“உலகை வென்ற மாவீரனே! என் பெயர் ஜெயரதன். கேகேய நாட்டின் அரசன். தங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்” என்றான் பணிவாக.
அவனைப் பார்வையால் அளந்தான் அலெக்சாண்டர். தோற்றம் கம்பீரமாக இருந்தாலும் கண்களில் பயம் தெரிந்தது.
“என்ன உதவி?” சுருக்கமான கேள்வி.
“எனது தேசத்தை மீட்டுத் தர வேண்டும்.” பதிலும் சுருக்கமாக வந்த போது அலெக்சாண்டர் கோபம் கொண்டான். பார்வையால் எதிரே இருப்பவனை பொசுக்கினான். ஹெபஸ்டின் உடனே உதவிக்கு வந்தான்.
“இப்படி ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னால் எப்போது முழு விவரம் சொல்வாய். உன்னிடம் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு விடை பெறுவது என்பது எங்கள் நேரத்தை வீணடிப்பது போல் இருக்கிறது. இதுதான் உன் நோக்கமா?” என்று சீறினான்.
“நிச்சயமாக இல்லை மன்னா! பௌரவ தேசத்தின் புருஷோத்தமனைப் பற்றித் தாங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவனிடம் இருந்துதான் என் தேசத்தை மீட்டுத் தர வேண்டும்.” அவசரமாக உரைத்தான் ஜெயரதன்.
“அவனைப் பற்றி அம்பி என்னிடம் எதுவும் கூறவில்லையே! நீ சொல், அவன் எப்படிப்பட்டவன்? ஒரு வார்த்தையில் சொல்லாமல் விரிவாகச் சொல்” என்று ஆணை பிறந்தது.
“வெல்ல முடியாதவன் – அவனை விவரிக்க ஏற்ற ஒரே சொல் அதுதான்.”
அலெக்ஸாண்டரின் உதவியை நாடி அவன் முன் நின்றிருந்தான் என்பதே அவனுக்கு மறந்து விட்டது போலும்.
பாரசீகப் பாய்கம்பளத்தில் தன் கால் விரல்கள் ஆழமாக மூழ்கியிருப்பதை அவன் உணர்ந்தான். அலெக்ஸாண்டரின் செழிப்பு மிக்க கூடாரத்தின் முழுப் பிரம்மாண்டத்தையும் கண்கள் ஒருசேர விழுங்க முயன்றபோது, அவனுக்குள் ஓர் அதிசயம் கலந்த திடுக்கம் எழுந்தது. கூடாரத்திற்குள் நுழைந்த தருணத்திலேயே, வேறொரு உலகத்தின் எல்லையைத் தாண்டி விட்ட உணர்வு அவனைத் தாக்கியது. ஆனால் புருஷோத்தமனின் வீரத்தில் அவன் முற்றிலும் மயங்கியிருந்ததால், உதவி பெற வேண்டுமென்றால் எதிரியைப் புகழக் கூடாது, அலெக்ஸாண்டரைப் புகழ வேண்டும் என்ற உண்மையையே அவன் மறந்து விட்டான்.
“இந்த ஆகாயத்தின் கீழ் வெல்ல முடியாதவன் ஒருவனே; அவன் நீ பேசிக் கொண்டிருப்பவன்தான்” என்று அலெக்ஸாண்டர் முகத்தில் அகந்தைச் சிரிப்புடன் பதிலளித்தான்.
புருஷோத்தமனிடம் ஏற்பட்ட அவமானகரமான தோல்விக்குப் பிறகு, ஜெயரதன் நீண்ட தூரம் பயணித்தவன். உள்ளூர் சிற்றரசர்களிடமோ, தலைவர்களிடமோ உதவி எதிர்பார்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில், புருஷோத்தமனின் புகழ் உதயமாகும் சூரியனின் கதிர்களைப் போல, அவன் எந்தக் கதவையும் தட்டுவதற்கு முன்னரே அங்குச் சென்று சேர்ந்து விடும். ஆகவே, இந்துகுஷ் மலைத்தொடரைத் தாண்டி, பாக்திரியா மற்றும் சோக்தியானா பிரபுக்களுடன் பழைய உறவுகளை மீட்டெடுக்க முடிவு செய்தான். அங்கே, தனது வாளின் முனையால் அந்தப் பிரதேசத்தை ஏற்கெனவே அடக்கி வைத்திருந்த கிரேக்கர்களெனும் புதிய சக்தியைச் சந்தித்தான்.
ஜெயரதனுக்குச் சிறிதளவு நம்பிக்கை பிறந்தது; அவன் அலெக்ஸாண்டரிடம் அடைக்கலம் கோரினான்.
இந்தியாவை ஆக்கிரமித்து, அதன் செல்வமும் பெருமையும் கைப்பற்ற வேண்டும் என்பது அலெக்ஸாண்டரின் கனவு என்பதை ஜெயரதன் அறிந்திருந்தான். அலெக்சாண்டர், பாரசீகத்தை ஆக்கிரமிக்க ஏஜியன் கடலைக் கடந்தபோதே, அவனது இறுதி இலக்கு தங்க மண்ணான இந்தியாவே. அந்தக் காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து வந்த வணிகர்கள், பயணிகள், போர்க் கைதிகள் எனப் பலரிடமிருந்து, அந்த நாட்டைப் பற்றியும் அதன் அரசர்களைப் பற்றியும் அதிக அளவில் தகவல்கள் சேகரித்திருந்தான்.
தன் இழந்த ராஜ்யத்தை மீட்க உதவி கோரும் இந்திய அரசன் இருப்பதை அறிந்தபோது, அலெக்ஸாண்டருக்குத் தேவையான அனைத்தும் கிடைத்து விட்டது போன்று தோன்றியது. பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அரசனை விடச் சிறந்த உளவாளி யார் இருக்க முடியும்?
“நந்த அரசன்தான் இந்தியாவின் மிகப் பெரிய சக்தி, உண்மையான ஆட்சியாளன் என்று கேள்விப்பட்டேனே?” என்று அலெக்ஸாண்டர் தன் மதுக் கிண்ணத்தில் இருந்து ஒரு முறை அருந்தி, பதிலை எதிர் நோக்கிக் காத்திருந்தான்.
ஜெயரதன் நந்தனை இகழ்ந்து கீழே பார்ப்பது போலக் கண்களைத் திருப்பிக் கொண்டு, சந்தோஷமற்ற சிரிப்பை வெளிப்படுத்தினான். சிந்தனைகளைச் சேர்த்துக் கொண்டு அவன் சொன்னான்:
“தன் சொந்த சகோதரனைக் காப்பாற்ற முடியாதவன் பெரிய ராஜ்ஜியத்தை எப்படி ஆள முடியும்? புருஷோத்தமன் அவன் சகோதரனை ஆயிரம் வீரர்களுடன் சேர்த்து கொடூரமாகக் கொன்றான். அப்படிப்பட்டவனிடம் உதவி தேடுவது வீணல்லவா?”
நந்தனுடன் சேர்ந்து புருஷோத்தமனைத் தாக்கி ஆதிக்கத்தை மீட்கச் சென்ற அந்தத் துயரமான போரின் நினைவு அவனுக்கு வலி கொடுத்தது.
“மூன்று திசைகளிலிருந்து தாக்குதல்களை எதிர்கொண்டாலும், புருஷோத்தமன் மூன்று படைகளையும் தோற்கடித்து வென்றான். போர்க்களத்தில் அவனை யாராலும் வீழ்த்த முடியாது; ஏனெனில் அவன் எப்போதும் எதிரியைவிட ஒரு படி முன்னிலையில் இருப்பவன். யாரும் நினைக்காததை யோசித்து, பேயைப் போலச் செயல்படுவான். எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் தோன்றுவான்; கண்சிமிட்டும் வேகத்தில் மறைந்து விடுவான்.”
அவனது குரலில் துயரமும் ஏமாற்றமும் கலந்திருந்தது.
இந்த உரையாடல் அலெக்ஸாண்டருக்குப் பிடிக்கவில்லை. பாதி உலகத்தை வென்றவன், பூமியிலேயே மிகப் பெரிய பேரரசை அடக்கியவன், அவனிடம் உதவி கேட்டு வந்தவன், அவனைக் கண்டு வியப்பதற்குப் பதிலாக எதிரியைப் புகழ்ந்து கொண்டிருந்தான்.
அதைக் கவனித்த ஹெபஸ்டின் மீண்டும் தலையிட்டு, அலெக்ஸாண்டரின் மகத்துவத்தையும், அவன் எப்படி உலகின் மிகப் பெரிய பேரரசை வீழ்த்தினான் என்பதையும் விவரித்தான். இனி ஜெயரதன் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை; அவனது எதிரி, ஒரு ஈ போல நசுங்கப் போகிறான் என்றான்.
ஜெயரதன் அந்தச் செழிப்பான முகாமில் சில அகந்தை நிறைந்த இறகுகளை அவன் சீண்டி விட்டதாக உணர்ந்தான். ஆனால் ஹெபஸ்டினின் புகழ்ச்சி அலெக்ஸாண்டரின் கோபத்தைத் தணித்தது. அவன் உடல் மொழி மாறியது; முகத்தில் மீண்டும் ஒரு சிரிப்பு தோன்றியது.
அவன் மீண்டும் ஜெயரதனை நோக்கிக் கேட்டான்: “இந்த ‘புருஸ்… போரஸ்’ என்ற மனிதன் ஏன் வெல்ல முடியாதவன்?”
பெயரைச் சரியாக உச்சரிக்க அலெக்ஸாண்டர் முயன்றான்; முடியாமல் விட்டு விட்டான்.
“புருஷோத்தமன்,” என்று ஜெயரதன் திருத்தினான். பின்னர் பெயர் முக்கியமல்ல என்பதை உணர்ந்தான்.
“மன்னா! அவன் வெல்ல முடியாதவன் என்பதற்குக் காரணம், அவன் போர்க்களத்தில் நான் பார்த்த மிக வலிமையான மனிதன் என்பதல்ல. கூர்வாள், வேலுடன் அவன் ஒப்பற்ற திறமை கொண்டவன் என்பதாலும் அல்ல. பல அம்புகள் உடலில் பட்டாலும் போரைக் கைவிட மறுப்பதாலுமல்ல. பத்து வீரர்களை ஒரே நேரத்தில் எதிர்த்து வெல்வதாலுமல்ல.
அவனுடைய மிகப் பெரிய பலம், அவனது சிந்தனை. அவனுடைய உயிர்க்கொல்லி ஆயுதம், அவனின் கூர்மையான மூளை, அவனது தைரியம்.”
அலெக்ஸாண்டர் போருக்குத் தயாராகும் முன், எதிரியை அறிய வேண்டும் என்பதற்காக ஜெயரதன் எச்சரிக்க முயன்றான். அலெக்ஸாண்டரே அவனுக்கான கடைசி நம்பிக்கை. ஆனால் அலெக்ஸாண்டரின் நடத்தை நம்பிக்கையளிக்கவில்லை.
“என் ஆசான் அரிஸ்டாடில் சொன்னார், தைரியம்தான் மனித குணங்களில் முதலாவது; ஏனெனில் அதுவே மற்ற அனைத்தையும் உறுதி செய்கிறது. சில ஆயிரம் வீரர்களுடன் கடலைக் கடந்து, பத்து மடங்கு பெரிய படையை எதிர்கொள்வதற்குத் தைரியம் வேண்டும். அலெக்ஸாண்டர் அந்த மனிதன். நீ பேசும் இந்தப் போரஸ், மகத்தான அலெக்ஸாண்டரின் சக்திக்கு முன் தூசி மட்டுமே. அவன் இன்னும் உலகின் மிகப் பயங்கரப் படையை எதிர்கொள்ளாததால் தான் நீ அவனை தைரியசாலி என நம்புகிறாய். கிரேக்க வீரர்களின் நடைப்பயணத்தால் பூமியே நடுங்குகிறது; அவர்களது போர் முழக்கத்தால் எதிரிகள் குலுங்குகின்றனர். ‘தாங்களே வெல்ல முடியாதவர்கள்’ என்று கூறியவர்கள் பலரும் இந்தப் படையைப் பார்த்தவுடன் ஓடி விட்டார்கள்; உன் ‘போரஸ்’ கூட விதிவிலக்காக இருக்க மாட்டான்!”
அலெக்ஸாண்டர் இடியெனக் குரல் எழுப்பினான். ஜெயரதன் இதை எப்போதுமே கடினமான பணி என்று அறிந்திருந்தான். அறியாத அபாயத்தை எளிதாகக் கருதுவது இயல்பு. அவன் அப்படியே செய்தான். அதன் விலை மிகக் கொடியதாக அமைந்தது. அந்தத் தவறு, இந்த அகந்தை நிறைந்த வெளிநாட்டவருக்கும் உயிர்க்கொல்லியாக மாறக்கூடும்.
“அவன் எப்படி அரசனானான் தெரியுமா?” அலெக்ஸாண்டர் இந்தியாவில் எதிர்கொள்ளவுள்ள அபாயத்தின் ஆழத்தை விளக்க ஜெயரதன் மீண்டும் முயன்றான்.
“நீயும் நானும் அரசுரிமையை மரபாகப் பெறுகிறோம். ஆனால் அவன், தனது எல்லையை மீறிக் குதித்து, அதை என்னிடமிருந்து பறித்துக் கொண்டான். புருஷோத்தமன், சில வீரர்களுடன் அந்த நாட்டின் மிகக் கடினமான கோட்டையைக் கைப்பற்றி, அந்த மண்ணின் அதிபதியாக ஆனான்.”
அவ்வளவுதான்; அலெக்ஸாண்டருக்கு இது போதும். அவன் கோபமாக மூச்சு விட்டான்; சிங்காசனம் போன்ற இருக்கையிலிருந்து வேகமாக இறங்கினான்.
இப்போது அவனது தோற்றம், ஜெயரதனுக்குத் திகிலாக இருந்து. அபாயத்தின் அளவு கணிக்க முடியாததாக இருந்தது. பாரசீக வெற்றியின் போதை அலெக்ஸாண்டரை முழுமையாக மூழ்கடித்திருந்தது. எதிரியின் திறமையையும் சாதனைகளையும் பார்க்க அவன் மறுத்தான். தன் சாதனைகள் ஒப்பிட முடியாதவை என்று நம்பிய அலெக்ஸாண்டர், ஓடி வந்த அரசனின் கதைகளை அலட்சியப்படுத்தி, அவனைத் தனது முன்னிலையிலிருந்து நீக்கி விட்டான்.
“உடனடியாகச் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் போர்க்களத்தில் சந்திக்க வேண்டும். எச்சரிக்கை.” அலெக்சாண்டரின் ஆணைப்படி புருஷோத்தமனுக்கு ஓலை அனுப்பும்படி உடனே கட்டளை பிறந்தது.
அகந்தை கொண்ட மனிதன் எப்போதும் கீழேதான் பார்ப்பான்; கீழே பார்க்கும் வரை, மேலிருப்பதைப் பார்க்க முடியாது.
ஜெயரதனுக்குப் புரிந்து விட்டது. அவன் தவறான கதவைத் தட்டி விட்டான். அவன் எச்சரிக்கைகள் அனைத்தும் வீணாயின. வாழ்வில் அவனுக்குக் கிடைத்த மிகக் குறைந்த வாய்ப்பு, தன் இலக்கை அடைய யார் உதவுவார் என்பதை அறிதல். அது இந்த வெளிநாட்டவன் மட்டுமே, சமீபத்திய வெற்றியில் மிதந்து செல்கின்ற மேகத்தைப் போல, வழியில் காத்திருப்பது மலை என்பதையே அறியாமல் பேசுபவனை எண்ணிச் செயலிழந்து நின்றான்.
ஜெயரதன் சொன்ன தகவல்களைக் கேள்வியுற்ற அம்பி புருஷோத்தமனைப் பற்றி அலக்சாண்டரிடம் பேச வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தான். அவன் சொன்னது கேட்டு அலெக்சாண்டர் தனக்கு இணையான எதிரியைச் சந்திக்கும் நாளை எதிபார்த்துக் காத்திருந்தான்.
Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 4
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் - 4
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.