• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

பகலிரவு பல கனவு- இறுதி அத்தியாயம்

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
508
32
43
india
பகலிரவு பல கனவு- இறுதி அத்தியாயம்

அப்பத்தாவுடன் நின்ற அழகரை முறைத்தான் பிரபாகரன்.

“அண்ணே! என்னை முறைக்காதீங்க. விட்ட விடியலில ஆத்தா வந்து கேட்கும் போது நான் என்ன தான் செய்யறது. கொண்டு வந்து விட்டாச்சு. நீங்களாச்சு உங்க அப்பத்தாவாச்சு, நான் போய் விட்ட இடத்தில இருந்து என் தூக்கத்தைப் பிடிக்கணும்.”

“என்னடா பேராண்டி! பேயைக் கண்டது மாதிரி முழிக்கிற? நீ ஓடி ஒளிஞ்சா எங்களுக்கு கண்டுபிடிக்கத் தெரியாதா?” கெத்தாகக் கேட்டவருக்கு முனைப்பு தான் பதிலாகக் கிடைத்தது.

“வீட்டுக்கு வந்தவங்கள வான்னு கூப்பிட வாய் வலிக்குதோ?”

வாயைத் திறந்து வா என்று அழைக்கவில்லை, அமைதியாக உள்ளே சென்று அமர்ந்து கொண்டான். அதற்கு முன் படுக்கை அறைக் கதவை நன்றாக மூடிவிட்டு வந்தான்.

அப்பத்தா இதை எதிர்பார்த்தே வந்திருந்த போதிலும் சற்றே ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால் அவன் வெளியே போ என்று சொல்லாததே போதும் என்று நினைத்த படியே உள்ளே வந்தார்.

சற்று நேரம் வீட்டை கண்களால் ஆராய்ந்த அப்பத்தா, விதம் விதமாகப் பேசி பேரனை சமாதானம் செய்ய முயன்றார். அவனோ, யாரோ யாரிடமோ பேசுகிறார்கள் என்பது போல அமர்ந்திருந்தான்.

“என்ன பண்ணி வச்சிருக்க பிரபா? நாள், கிழமை பார்க்காமல் அவசரமா வீடு மாறி இருக்க?”

“என்னது?? நாள், கிழமையா? அதெல்லாம் சொல்றதுக்கு எங்களுக்கு யாரும் இல்லை. எங்களை மாதிரி ஆளுக்கெல்லாம் எல்லா நாளும் எல்லா நேரமும் நல்லதுதான். இதைச் சொல்லத் தான் காலங்காத்தால இங்கே வந்தியா?”

“அதையெல்லாம் விட புள்ளத்தாச்சிப் பொண்ண வச்சுகிட்டு வீடு குடிபோகக் கூடாது. நாளைக்கு அவளுக்கு ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா…”

“அப்பத்தா!!!! போதும்.. கிளம்பு.. என்ன நடந்தாலும் நாங்க பாத்துக்கிறோம். உங்க அக்கறை தேவையே இல்லை.”

“டேய்! நான் என்ன சொல்ல வரேன்னு கேட்டுட்டு பேசுடா! எதுக்கு திடீர்னு வீட்டைக் காலி பண்ற அளவுக்குக் கோவம் உனக்கு? என்ன இருந்தாலும் மலரு நம்ம வீட்டுப் பிள்ளை. பொம்பள பிள்ளைய விட்டுக் கொடுக்க முடியாம உங்க அம்மா சேர்த்துக்கிட்டா, அது தப்புன்னு சொல்றியா நீ? மாப்பிள்ளையே வந்து பேசும் போது வேறென்ன செய்ய முடியும்?”

“நான் எதுவும் செய்யக் கூடாதுன்னு சொல்லலையே அப்பத்தா. உங்க வீட்டுல பொறந்த பொண்ணுக்கு நீங்க தாராளமா செய்ங்க. என்னை விட்டுடுங்க. அவ்வளவு தான். எனக்கு அங்கே இருக்கப் பிடிக்கல. அதான் வெளியே வந்துட்டேன். நான் யாரையும் குறை சொல்லல.” அவனுக்குப் பேசவே பிடிக்கவில்லை.

“பொண்ணு வாழ, பிறந்த வீடு வாழன்னு சொல்லுவாங்க. பொறந்த பொண்ணு அழுதா பொறந்த வீட்டுக்கு ஆகாதுடா.”

“அதாவது நம்ம வீட்டில பிறந்த பொண்ணு மட்டும் சந்தோஷமா இருந்தா போதும். ஆனால் அடுத்த வீட்டுல பொறந்த மருமக எக்கேடு கெட்டாலும் உங்களுக்கு கவலை இல்லை. சூப்பர் அப்பத்தா!” படுக்கை அறைக் கதவைத் தாண்டி அவனது குரல் ஓங்கி ஒலிக்க, சம்யுக்தா தூக்கம் கலைந்து வேகமாக எழுந்து வெளியே வந்தாள். அங்கே இருந்தவர்களின் முகபாவம் அவளுக்கு பயத்தைக் கொடுத்தது. அவளைக் கவனிக்காத பிரபாகரன் தொடர்ந்தான்.

“இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் உங்களை மாதிரி லேடீஸ் தான் கண்டுபிடிச்சிருப்பாங்க. நீ மட்டும் என்ன செஞ்ச, உம்மக சொத்தையெல்லாம் சுரண்டும் போது வேடிக்கை பார்த்துட்டுத் தான இருந்த. அவங்க சந்தோஷமா இருக்க எங்க அம்மா அழுதாங்க. அடுத்த தலைமுறைக்கும் அது தொடரணும்னு நினைச்சா நான் அதுக்கு ஆளில்ல.”

“நீயா பேசற பிரபா? மலருக்கு நீ தகப்பன் அண்ணன் மட்டும் இல்லையே. தகப்பன் செய்ய வேண்டியதெல்லாம் கூட நீ தானே செஞ்ச. அந்தப் புள்ள செஞ்சது தப்பு தான். ஆனா, அதுக்காக வீட்டில சேர்க்காம விரட்ட முடியுமா?”

பிரபாகரன் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தான். அதில் தான் எத்தனை வேதனை?? பார்த்துக் கொண்டிருந்த சம்யுக்தாவுக்குத் தலைசுற்றியதில் நிற்க முடியாமல் தடுமாறினாள்.

“ஹேய்! நீ எப்போ எழுந்த? போ.. போய் தூங்கு. இங்கே உனக்கு எந்த வேலையும் இல்லை. உன்னைப் பார்க்க யாரும் வரலை.” அவள் தயங்கி நிற்க, “போன்னு சொல்றேன்ல.. “ நாற்காலியைத் தள்ளிவிட்டு எழுந்தவனை அப்பத்தா முறைத்தார்.

“அடியாத்தி! ஏன்டா அவள விரட்டுற? புள்ளத்தாய்ச்சிப் பொண்ண தனியா கூப்பிட்டு வந்து படுத்துறான். சின்ன விஷயத்துல கோபம் எதுக்குங்கிறேன். இத்தனை நாளும் தங்கச்சிக்கு தகப்பன் மாதிரி இருந்துட்டு இப்போ அவ கல்யாணம் பிடிக்கலேன்னு சொன்னா எப்படி?”

“ஆஹா.. அப்பத்தா! நீ பேசறது உனக்கே நியாயமா இருக்கா? என் கிட்ட யாரு கல்யாண விஷயம் பேசினாங்க, அதைப் பிடிக்கலைன்னு நான் எப்போ சொன்னேன். என்ன நடந்ததுன்னு தெரியாமல் பேசாத?” இப்போது விழிப்பது அப்பத்தாவின் முறை ஆகிற்று.

“சரி, சொல்லு. தெரிஞ்சுக்கிறேன்.. “

“வேற வழி.. உனக்கு விம் போட்டு விளக்கினா தான் புரியும்” என்று மலர்விழியின் வருகையில் ஆரம்பித்தவன் காமாட்சி ஆரத்தி எடுத்தது பற்றிப் பேசும் போது பொங்கி விட்டான்.

“ஆரத்தி எடுத்த போது உம்மருமக முகத்தில அத்தனை பூரிப்பு. வைகாசி மாச வெயில்ல, கல்யாண கோலத்தில மணிக்கணக்கில் கால் கடுக்க நிக்க வச்சுட்டு போன போது புது மருமகளுக்கு ஆரத்தி எடுக்கணும்னு அவங்களுக்கு தோணவே இல்லையே. இத்தனைக்கும், லவ் பண்ணி பெத்தவங்க சம்மதத்தோட நடந்த கல்யாணம். அதுக்கப்புறம் என்ன ஆச்சு. புள்ளத்தாய்ச்சின்னு அக்கறைப் படறியே, இத்தனை நாளும் அவ அங்கே தானே இருந்தோம். என்ன செய்யுதுன்னு ஒரு வார்த்தை.. வேணாம், எங்களுக்கு யாரும் வேணாம். நீ கிளம்பு.”

“இப்படி எல்லாம் பேசாதய்யா. உங்க அம்மா ஏதோ ஆதங்கத்துல அப்படி இருந்துட்டா, மத்தபடி அவ எப்படிப்பட்டவன்னு உனக்குத் தெரியாதா?”

“தெரியலையே, எனக்குத் தெரியலையே.. இனிமேல் எனக்கு புதுசா யாரைப் பத்தியும் தெரிஞ்சுக்க வேண்டாம். உன்னைக் கையெடுத்துக் கும்பிடறேன் அப்பத்தா. தயவு செய்து கிளம்பு. எங்களுக்கு யாரும் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு. எப்படியோ இருந்துட்டுப் போறோம். எங்களை விட்டுடு.” அத்தனை விரக்தி அவன் குரலில்.

“ஐயா! ராசா!. உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப. இத்தனை வயசுக்கு மேலே இந்தக் கிழவி இன்னும் என்னென்ன பார்க்கணும்னு இருக்கோ தெரியலையே!.” மனம் வருந்திப் பேசியவருக்குக் கொஞ்சம் கூட இரக்கம் காட்டவில்லை அவரது பேரன். உடனே அவர் அதிகாரமாகப் பேச, அதற்கும் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.

“நீ என்ன சொல்றது? நான் இங்கே தான் இருப்பேன். உன்னால என்ன செய்ய முடியும்?” அவரும் சளைக்காமல் வாதாடினார்.

“பிள்ளைத்தாய்ச்சி பொண்ணை வச்சிக்கிட்டு உன்னால தனியா சமாளிக்க முடியாது. மாசம் செல்லச் செல்ல பக்குவம் சொல்ல யாராவது வேணும். நான் இங்கேயே இருக்கேன். சம்பூ நீ சொல்லுத்தா.”

“அவளே டாக்டர் தான். அவளைச் சுத்தி நூறு டாக்டர் இருக்காங்க. பக்குவம் எல்லாம் அவங்க சொல்லுவாங்க. நீ கிளம்பு.”

சம்யுக்தா கூட அப்பத்தா இருப்பாரோ என்று ஆவலாகப் பார்த்துக் கொண்டிருக்க, பிரபாகரன் அழகரை அழைத்து அப்பத்தாவை வீட்டில் விட்டுவிட்டு வருமாறு பணித்தான்.

அதே சமயம் அப்பத்தாவின் மொபைலுக்கு மலர்விழியின் அழைப்பு வந்தது. அப்பத்தா பேரனை ஆவலாய் பார்க்க, அவன் திட்டவட்டமாக மறுத்து விட்டான்.

“எனக்கு யார் கூடவும் பேச வேண்டியதில்லை அப்பத்தா. சொந்தம்னு சொல்லிட்டு யாரும் இந்த வீட்டுக்கு வரவேண்டாம். அதை மீறி வந்தா வேற பிரபாகரனைப் பார்க்க வேண்டியதா இருக்கும்.”

****
உனக்கு நான் எனக்கு நீ என்று வாழ ஆரம்பித்தாலும், தினமும் ஒரு முறையாவது இந்த நிகழ்வு ஞாபகம் வந்து அவனை அழைக்கழித்தது. மனைவியிடம் இதைப் பற்றி ஒரு முறை பேசியபோது, “அத்தை மாதிரி ஏன் எங்க அம்மா யோசிக்கல. நம்ம பொண்ண அழ வைக்கக் கூடாதுன்னு ஏன் நினைக்கல” என்றாள்.

இதைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறாள் என்று அவள் பேச்சில் தெரிந்தது. அப்படி யோசிப்பது அவளுக்கு நல்லதல்ல என்று அவன் மூளைக்குள் ஒரு அலாரம் அடித்தது.
அந்த அனுபவத்திற்குப் பிறகு அனைத்தையும் மனதுக்குள் பூட்டி வைக்கப் பழகிக் கொண்டான்.

நாளாக ஆக சம்யுக்தாவின் உடல் மற்றும் மன நிலையில் கர்ப்பமான பெண்களுக்கே உண்டான பல மாற்றங்கள். காலையில் எப்போதும் ஒரு சோர்வுடனே எழுந்தாள்.
உணவின் மீதான அவளது விருப்பங்கள் மாறத் தொடங்கின.
சில நாட்களில் புளிப்பான உணவுகள் பிடித்தது. சில நாட்களில் வாசனை வந்தாலே சாப்பிட முடியவில்லை. சில சமயங்களில் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டாள், சில நேரங்களில் எதற்கென்றே தெரியாமல் அழுகை வந்தது, சில நாட்களில் இரவு முழுவதும் தூக்கம் வராமல் படுத்திருப்பாள்,வேறொரு நாள் அதிகமான தூக்கம்.

வாந்தி, சோர்வு, தூக்க கலக்கம், தலைசுற்றல் என்று எல்லாம் சேர்ந்து அவளை ஒரு வழியாகக்கிக் கொண்டிருந்தது. அவளுடன் சேர்ந்து
பிரபாகரனும் ஒரு அவஸ்தைப்பட்டான். அவளது தேவையறிந்து செயல்பட நினைத்தாலும் அவனால் முடியவில்லை. அவர்களுக்குப் பணத்திற்குப் பஞ்சம் இல்லை. ஆனால் அந்தப் பணத்தால் சம்யுக்தாவின் உடல்நிலையை மாற்ற முடியவில்லை. பெற்றோரே தள்ளி நிற்கும் போது மற்ற சொந்தங்களை நாட அவர்களுக்கு விருப்பம் இல்லை. அவன் அருகில் இருப்பதும், அவனது அக்கறையுமே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.
அதைப் புரிந்து கொண்ட நாளிலிருந்து தனது வேலை நேரத்தையே மாற்றிக் கொண்டான் பிரபாகரன்.

அதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் வந்து சேர்ந்தன. தொழிலாளி நேரம் பார்த்து வேலை செய்யலாம், முதலாளி செய்ய நினைத்தால் தொழில் என்ன ஆகும்? புதிதாகத் தொடங்கப்பட்ட வைனரியில் பிரச்சினைகள் முளைத்தன. ஆரம்பம் முதலே இவனது வைனரிக்கு நல்ல வரவேற்பு இருக்க அது பல போட்டியாளர்களை உருவாக்கி இருந்தது. தினமும் ஒரு சிக்கல் வந்து சேர்ந்தது.

அன்று காலையில் ஒரு தொழிலாளிக்கு விபத்து ஏற்பட்டது. புத்தம் புதிய இயந்திரத்தில் தானாகக் கோளாறு ஏற்பட்டக் காரணமே இல்லை என்று அவனுக்குப் புரிந்தது.

“ஷப்பாஆஆ! இப்பவே கண்ணைக் கட்டுதே!” என்று நினைத்தவன் பேசாமல் வைனரியை விற்று விடலாமா என்பது வரை யோசித்து விட்டான். காயம்பட்ட தொழிலாளியின் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்து அவரது குடும்பத்தைச் சமாதானம் செய்து, இதன் காரணமாக வேலை செய்யத் தயங்கிய மற்ற தொழிலாளரைச் சமாளித்து அவன் வீடு வந்து சேர இரவு பத்து மணி ஆனது.

அதன் பின்னும் வெகு நேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த பிரபாகரனை மொபைல் அழைத்தது. அந்த அர்த்த ராத்திரியில் யார் என்று எரிச்சலுடன் எடுத்துப் பார்த்தவன் அழைத்தது கதிரேசன் என்று அறிந்து அவசரமாக அழைப்பை ஏற்றான். மறுமுனையில் அவர் சொன்ன செய்தியில் அவன் தலைசுற்றிப் போனான்.

“சார்! என்ன சொல்றீங்க? நிஜமாவா?” என்ற அவனது பதற்றமான குரலில் அருகில் உறங்கிக்கொண்டிருந்த சம்யுக்தா எழுந்து அமர்ந்தாள்.

“என்ன ஆச்சு பிரபா? யார் ஃபோன்ல?”

“ஹான்! ஒண்ணுமில்லை சம்யு. நீ தூங்கு. வைனரில லோட் ஏறிட்டு இருக்கு. எனக்கு ஃபோன் வந்துட்டே இருக்கும். நான் ஹால்ல இருக்கேன். எதுன்னாலும் கூப்பிடு.”

விடிய விடிய ஃபோன் மூலமாகவே பிரச்சினைகளைச் சமாளித்துக் கொண்டிருந்தான். வீடும் தொழிலும் இருபத்து நான்கு மணி நேரமும் அவனை விழிப்புடன் இருக்க வைத்தன. தனக்கு ஏதாவது பிரச்சினை வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தவன் கிடைத்த இடைவெளியில் தூங்கப் பழகிக் கொண்டான்.

நாட்கள் அதன் போக்கில் நகர, இப்போது சம்யுக்தா அவளது கர்ப்பத்தின் ஏழாவது மாதத்தில் இருந்தாள். சீமந்தம் செய்வது என்று முடிவு செய்து ஏற்பாடு செய்து விட்டான்.

வழக்கமாக ஒரு பெண்ணின் சீமந்தம் என்றால், தாய் வீட்டு உறவினர்கள், மாமியார் வீட்டு உறவினர்கள், பெண்களின் சிரிப்பும் ஆரவாரமும் என்று வீடு முழுவதும் களைகட்டியிருக்கும். ஆனால் சம்யுக்தாவின் வீட்டில் அத்தகைய கூட்டம் எதுவும் இல்லை. அவளுடைய பெற்றோரும் வரவில்லை; பிரபாகரனின் பெற்றோர்களும் அந்த நிகழ்வில் இல்லை.

ஒரு சில நெருங்கிய நண்பர்களும், அவர்களுக்குத் தெரிந்த சில பெரியவர்களும் மட்டுமே வந்திருந்தனர். சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது, சம்யுக்தாவின் மனதில் ஒரு சிறிய வெறுமை வந்து போனது. அந்த வெறுமையை பிரபாகரன் கவனித்தான்.

சடங்குகள் முடிந்ததும், எல்லோரும் சென்ற பிறகு, வீட்டில் அமைதி நிலவியது. மேசையின் மீது மீதம் இருந்த வளையல்களையும், பூக்களையும் பார்த்தபடி சம்யுக்தா அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அவளுடைய அருகில் வந்து அமர்ந்த பிரபாகரன் எதுவும் கேட்கவில்லை. அவளுடைய கையை மட்டும் மெதுவாகப் பற்றிக் கொண்டான்.

இப்படி நமக்கு நாமே தான் என்பதைப் பல சமயங்களில் இருவரும் புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். ஆனாலும், இருவருக்கும் மனதில் ஒரு ஓரத்தில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பும் ஏக்கமும் இல்லாமல் இல்லை.

ஒவ்வொரு பரிசோதனைக்கும் மருத்துவமனைக்குச் செல்லும் போதும், சம்யுக்தாவின் மனதில் ஒரு ஏமாற்றம் வந்து போகும். காத்திருப்பு அறையில் அமர்ந்திருக்கும் பெண்களைச் சுற்றி அவர்களுடைய அம்மாக்கள், மாமியார்கள், கணவர்கள் என்று குடும்பமே இருக்கும். ஒருவர் தண்ணீர் பாட்டிலைத் திறந்து கொடுப்பார்; இன்னொருவர் மருத்துவர் சொல்வதை கவனமாகக் கேட்டுக்கொள்வார்; இன்னொருவர் வயிற்றைத் தடவி, “ஒண்ணும் பயப்படாதே” என்று தைரியம் சொல்வார்.

சம்யுக்தாவுக்கு அருகில் பெரும்பாலும் பிரபாகரன் மட்டுமே இருப்பான். அவன் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வான். இருந்தாலும், ஏதோ ஒன்று குறைந்தது.

மற்ற பெண்களுடன் வந்திருந்த குடும்பத்தினரின் அன்பான கண்டிப்புகளும், சிறிய சண்டைகளும், அக்கறையும் அவளுக்குள் சொல்ல முடியாத ஏக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அந்த ஏக்கத்தை அவள் வெளியில் காட்டாமல், முகத்தில் ஒரு புன்னகையை வைத்துக்கொள்வாள்.

பிரசவ நாள் நெருங்கியபோது அந்த உணர்வு இன்னும் தீவிரமானது. மருத்துவமனையின் பிரசவ அறைக்கு வெளியே சில குடும்பங்கள் பதற்றத்துடன் காத்திருந்தபோது, சிலர் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, சில தாய்மார்கள் தங்கள் மகளின் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்ற போது, சம்யுக்தாவின் கண்கள் தன்னிச்சையாக அந்தக் காட்சிகளைப் பின்தொடர்ந்தன.

அவள் திரும்பிப் பார்த்தபோது, பிரபாகரன் அங்கே நின்றிருந்தான்.
அவன் முகத்தில் இருந்த பயத்தையும் பதற்றத்தையும் மறைத்துக்கொண்டு, அவளுக்காகத் தைரியமாக நிற்க முயன்றுகொண்டிருந்தான். அதை உணர்ந்து கொண்டவள் பிரசவத்தைத் தைரியமாக எதிர்கொள்ளத் தயாரானாள். இவர்களது நிலை புரிந்தது போல அவர்களின் செல்ல மகள் தாய்க்கு சிரமம் கொடுக்காமல் விரைவில் பூமியை எட்டிப் பார்த்தாள்.

சம்யுக்தா குழந்தையைத் தன் மார்போடு அணைத்தபடி அமைதியாகப் படுத்திருந்தாள். சம்யுக்தாவின் முகத்தில் சோர்வு இருந்தாலும் அதைவிட அதிகமாக ஒரு நிறைவும் இருந்தது.

பல மாதங்களாகத் தனக்குள் சுமந்த உயிர்… இப்போது தன் கைகளுக்குள் இருந்தது. அவள் விரலால் குழந்தையின் கன்னத்தை மெதுவாக வருடினாள். அந்தச் சிறிய கன்னத்தின் மென்மையை உணர்ந்தவுடன், அவளுக்குள் எங்கோ புதைந்து கிடந்த பழைய நினைவுகள் மீண்டும் தலைதூக்கியது.

தான் சிறுமியாக இருந்த நாட்கள்.
காய்ச்சல் வந்தால் தலையைத் தடவிய அம்மாவின் கை. அம்மா வேண்டும் என்று அடம் பிடித்து பள்ளிக்குச் செல்லாமல் அழுது படுத்திருந்த காலைகள்.

அவற்றோடு சேர்ந்து, பின்னர் நடந்த அனைத்தும் நினைவுக்கு வந்தன.
தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள மறுத்த பெற்றோர்.
தன் மகளின் மகிழ்ச்சியைவிட தங்களுடைய பிடிவாதமே பெரிது என்றிருந்தவர்கள்.
.
அவள் கண்களில் நீர் தேங்கியது.
அதை குழந்தையின் முகத்தில் விழுவதற்கு முன்பே துடைத்துக் கொண்டாள்.

அதே நேரத்தில் ஜன்னலருகே நின்றிருந்த பிரபாகரனின் மனதில் எதையோ சாதித்து விட்ட திருப்தி.
சில இரவுகளில் அவன் தூங்காமல் கிடப்பதை அவள் பார்த்திருக்கிறாள். சில நாட்களில் அவன் முகத்தில் திடீரென விழும் வெறுமையை அவள் அறிவாள். இப்போது அவன் முகத்தில் சந்தோஷம் மட்டுமே.

“இங்கே பாரு சம்யூ! எம்பொண்ணு என்னை மாதிரியே இருக்கா! இப்பவே எவ்வளவு நீளமான முடி பார்த்தியா?”

“உங்களை மாதிரியே பெயிண்ட் அடிச்சிடுவோமா?”

“அடிப்பாவி ஆயிரக்கணக்கில பணத்தைக் கொட்டி கலர் பண்ணி இருக்கேன். இப்படி அசிங்கப்படுத்திட்டியே! இந்த ஸ்டைல்ல தான் மேடம் மயங்கி நம்ம பின்னாடி வந்தாங்கடா குட்டிமா. இப்போ வேற மாதிரி பேசுறாங்க” மனைவியிடம் ஆரம்பித்து மகளிடம் முடித்தான்.

“சரி! சரி! ரொம்ப பேசாதீங்க. குட்டி தூங்கட்டும். ராத்திரி பூரா முழிச்சு ஒரு வழி பண்ணிட்டா.”

அந்த அதிகாலையின் வெளிச்சத்தில், பிரபாகரன் தன் மகளின் நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்தான்.
சம்யுக்தா அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பல்வேறு கனவுகளால் நிரம்பியது அவர்களது காதல் வாழ்க்கை. அதுவே கல்யாணத்தில் நுழைந்த போது எல்லாம் கனவாகிப் போனது. இப்போது தங்கள் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த போது அதை ஏற்றுக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள முயற்சி செய்ய ஆரம்பித்தார்கள். ஆம், இன்னும் முயற்சி தான் செய்கிறார்கள்.

பிரபாகரனும் சம்யுக்தாவும் ஒருவரையொருவர் நேசித்தாலும், சில சமயங்களில், “உன் குடும்பத்துல உள்ளவங்க என்னை ஒரு ஆளாவே மதிக்கல” என்பது போல இருவரும் மாறி மாறி குற்றம் சொன்னார்கள்.

அடுத்த கணமே நமக்கு நாமே தான் என்று சமாதானம் ஆனார்கள்.

வாழ்க்கை அடுத்த சவாலை இப்போது அவர்களின் முன் வைத்திருக்கிறது.

சம்யுக்தாவின் படிப்பு முடிந்து விட்டது. வெறும் எம்பிபிஎஸ் வேலைக்கு ஆகாது என்று இருவருக்கும் தெரியும். தாயைப் போல மகப்பேறு மருத்துவர் ஆகவேண்டும் என்பது சம்யுக்தாவின் லட்சியமாக ஒரு காலத்தில் இருந்தது. இப்போது மேற்படிப்பு படிப்பதென்றால் அடுத்த மூன்று ஆண்டுகளில் குழந்தையை யார் கவனிப்பது? வீட்டை யார் கவனிப்பது? என்று பல கேள்விகள் அவர்கள் முன்.

“என்ன செய்ய பிரபா? மெடிசின் படிச்சிட்டு வீட்டுல இருக்கணுமா?”

“நீ தான் வீட்டைப் பார்த்துக்கணும்னு நான் என்னைக்கும் சொன்னதில்லை. இனிமேலும் சொல்ல மாட்டேன். அது உனக்கே தெரியும். எனக்குத் தெரிஞ்சு எம்டி, எம்எஸ் படிக்கும் போது நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்யணும். முழு நேரமும் வேலைக்கு ஆள் வைக்கணும். நாம இருக்கிறது ஃப்ளாட், இங்கே அவங்களை நம்ம கூடவே தங்க வைக்கணும்னா அது சரியா வருமா?? என்ன செய்யலாம்னு நீயே சொல்லு” பிரபாகரன் பந்தை மனைவியிடம் தள்ளிவிட்டு தப்பித்துக் கொண்டான்.

“அது தெரிஞ்சா நானே டிசைட் பண்ண மாட்டேனா? உங்க கிட்ட ஐடியா கேட்டா பதில் சொல்லணும். திருப்பி கேள்வி கேட்கக் கூடாது.”

“பதில் தெரிஞ்சா சொல்ல மாட்டாங்களா? நீ யோசிச்சு வை. எனக்கு வைனரில கொஞ்சம் வேலை இருக்கு. நான் போயிட்டு சீக்கிரம் வரப் பார்க்கிறேன்.”

வண்ணமயமான கனவுகளில் ஆரம்பித்த அவர்களின் வாழ்க்கை கேள்வி மயமாகப் பயணம் செய்ய ஆரம்பித்தது. அதில் வென்றார்களா இல்லையா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.
 

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு- இறுதி அத்தியாயம்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.